Friday, March 4, 2016

ஜெபமே ஜெயம்

ஆளுநரும், தலைவர்களும் விடைபெற்றவுடன் யூதித்து தன் இல்லத்தைத் தாளிட்டு தன்னையே இறைவனோடு இணைத்துக்கொள்கின்றார்.

'எடுத்தோம், கவிழ்த்தோம்' என்றல்லாமல், தான் செய்வது ஒவ்வொன்றையும், நிறுத்தி, நிதானமாக, தெளிந்து செய்கின்றார்.

இந்த தெளிவான மனநிலைதான் வெற்றியின் முதல்படி.

வெளியே பகைவர்கள் இருக்கின்றனர். சொந்த மக்கள் தாகத்தால் வருந்துகின்றனர். இப்படியே எண்ணற்ற அவசரங்கள் தன்னைச் சுற்றி இருந்தாலும், செய்வதை நிதானமாகச் செய்கின்றார் யூதித்து.

1. செபம் செலவு அல்ல

'நமக்கிருக்கிற வேலைக்கு நடுவுல கட்டளை செபத்திற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது?' என்று சில அருட்பணியாளர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். 'நான் செய்யும் வேலையே என் செபம்' என்று சிலர் சொல்வார்கள். ஆனால், செபம் இல்லாமல் செய்யப்படும் வேலையெல்லாம் அடிப்பாகம் இல்லாத வாளியில் நீர் இறைப்பது போன்றது என்பதுதான் என் அனுபவம்.

தன் வேலையைத் தொடங்குமுன் நிறைய நேரத்தை செபத்தில் செலவிடுகின்றார் யூதித்து.

செபம் யூதித்திற்கு இரண்டு வகைகளில் பயன்தருகின்றது:

அ. இரம்பத்தைத் தீட்டு ('sharpen the saw'). ஸ்டீபன் கோவை என்பவர் மேன்மையான மக்களின் ஏழாம் பண்பாக முன்வைப்பது இதுதான். பல மணி நேரங்கள் செலவு செய்து வெட்டும் ஒரு மரத்தை, சில நிமிடங்கள் செலவு செய்து இரம்பத்தை கூர்மையாக்கிவிட்டு, பின் வெட்டினால் சில மணித்துளிகளில் வெட்டி முடித்துவிடலாம். துணிவு என்னும் தன் இரம்பத்தை செபத்தின் வழியாக தீட்டிக் கூர்மையாக்குகின்றார் யூதித்து.

ஆ. நாம் செய்யும் எல்லா செயல்களும் இரண்டு முறை செய்யப்படுகின்றன ('everything is created twice'). ஒன்று நம் மனத்தில். அடுத்தது வெளியில். அதாவது, ஒரு ஆர்க்கிடெக்ட் ஒரு கட்டிடத்தை உருவாக்குகிறார் என்றால், எடுத்தவுடன் அவர் செங்கலை எடுத்து கட்டத் தொடங்குவதில்லை. அப்படிக் கட்டினால் நிறைய விரயம்தான் வரும். முதலில் கட்டிடம் அவர் எண்ணத்தில் உருவாகிறது. ஜன்னல் எங்கே வரும், படி எங்கே வரும், லைட் எங்கே வரும் என எல்லாவற்றையும் முதலில் கட்டுகின்றார். பின்தான் வெளியில் கட்டத் தொடங்குகின்றார். இனி நடக்கப்போகும் எல்லாவற்றையும் தன் எண்ணத்தில் முன்னோட்டமாக ஓட்டிப்பார்க்க யூதித்துக்கு செபம் தேவையாக இருக்கின்றது.

2. தொடக்கநூல் பின்புலம் (9:2-4)

முதல் ஏற்பாட்டு நூலில் யூதப்பெண் தீனாவை புறவினத்து தலைவன் செக்கேம் கடத்திக்கொண்டுபோய் உறவு கொண்டு அவளை சிறுமைப்படுத்துகின்றான் (தொநூ 34). இதனால் கோபம் கொள்ளும் அவளின் சகோதரர்கள் சிமியோன் மற்றும் லேவி, செக்கேமின் உறவினர்களை ஏமாற்றி இரத்தப்பழி தீர்க்கின்றனர். யூதித்து இந்த நிகழ்வை செபத்தில் நினைவுகூறுகிறாள். அங்கே தீனா. இங்கே யூதித்து. அங்கே செக்கேம். இங்கே ஒலோபெரின். இதை வாசிக்கும்போதே வாசகர்களுக்கு பொறி தட்டுகின்றது. யூதித்து எதைப் பயன்படுத்தி வெற்றி கொள்ளப்போகிறார் என்பது.

3. பகைவரின் திட்டம் - ஆண்டவரின் திட்டம் (9:8-9)

ஆண்டவரின் ஆலயத்தையும், நகரையும், மக்களையும் அழிக்க பகைவர்கள் திட்டம் வகுக்கின்றனர். ஆனால் ஆண்டவர் மற்றொரு திட்டத்தை போட்டு வைத்திருக்கின்றார். பகைவர்களின் திட்டம் கண்களுக்குப் புலப்படக் கூடியவை. ஆனால் ஆண்டவரின் திட்டம் என்றும் மறைவாயிருக்கின்றது.

4. ஆண்டவரின் கணிதம் (9:11)

ஆண்டவரின் கணிதமும், லாஜிக்கும் மனிதர்களின் கணிதத்தையும், லாஜிக்கையும்விட வித்தியாசமாக இருக்கின்றது. மனிதர்கள் ஆள் எண்ணிக்கையை வைத்து தங்கள் பலத்தை தீர்மானிக்கின்றனர். ஆனால் இறைவன் வேறு மாதிரி கணக்கிடுகின்றார். இறைவனின் கணித நோட்டில் ஒன்று என்பது நூறைவிட பெரிதானது.

இன்று நம் பலத்தை நாம் எதைக் கொண்டு கணிக்கின்றோம்? என் ஃபோனில் நிறைய நம்பர்கள் இருக்கின்றன. என்னைத் தேடி நிறையப்பேர் வருகின்றனர். என்னை நிறைய பேருக்குத் தெரியும். என்னிடம் நிறைய எண்கள் இருக்கின்றன. இப்படி 'நிறைய' என்று நாம் நினைப்பது ஒருவேளை கடவுளின் ஏட்டில் 'குறைய' என்பதாகக்கூட இருக்கலாம்.

5. ஆண்டவரின் பெயர்கள் (9:8, 11-12)

யூதித்து ஆண்டவருக்கு நிறைய பெயர் சூட்டி மகிழ்கின்றார்: 'ஆண்டவர்,' 'தாழ்ந்தோரின் கடவுள்,' 'ஒடுக்கப்பட்டோரின் துணைவர்,' 'நலிவுற்றோரின் ஆதரவாளர்,' 'கைவிடப்பட்டோரின் காவலர்,' 'நம்பிக்கையற்றோரின் மீட்பர்,' 'மூதாதையரின் கடவுள்,' 'இஸ்ரயேலின் உரிமைச் சொத்து,' 'விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவர்,' 'நீரூற்றுக்களைப் படைத்தவர்,' 'படைப்புக்களுக்கெல்லாம் மன்னர்' என கடவுளை வாய்நிறைய அழைத்து மகிழ்கின்றார் யூதித்து. இந்தப் பெயர்கள் ஒவ்வொன்றும் இறைவனின் ஒவ்வொரு செயலைக் குறிக்கின்றது. கடவுளை யாரும் முழுமையாக வர்ணிக்க முடியாது. அவரின் செயல்களை வைத்து நாம் அவரை 'அப்படி,' 'இப்படி' எனச் சொல்கின்றோம்.

இறுதியாக, 'என் உதடுகளின் வஞ்சனையால் தாக்கி வீழ்த்தும்' (9:10, 13) என்கின்றார். யூதித்து தன் சொற்களால்தான் எதிரியை மடக்கப் போகின்றார் என்பதற்கு இங்கே 'க்ளு' கிடைக்கிறது.

மேலும், யூதித்தின் வாய்ஜாலத்தைக் காட்டவே, ஆசிரியர் யூதித்தை நிறைய சொற்களால் செபிக்க வைக்கின்றார்.


2 comments:

  1. Dear Father, Congrats for saying "Prayer brings victory".Thanks

    ReplyDelete
  2. " ஜெபமே ஜெயம்."... உண்மைதான்.இதைப்புரிந்து கொண்டவர் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற்றவராக இருக்கமுடியும் என்பது என் கருத்து.ஜெபத்தை 'உயிர் நாடி' என்கிறோம்; ஆன்மாவின் உணவு என்கிறோம்.ஆனால் வேலைப்பழு அதிகம் உள்ள நாட்களில் நாம் ' காம்ப்ரமைஸ்' பண்ணிக்கொள்வது இந்த ஜெபத்தைத்தான்; இதை மட்டும் தான்." The family that prays together stays together" என்ற வாசகத்தைப்பார்த்திருப்போம். நான் அனுபவித்து உணர்ந்த உண்மை இது.யூதித்தின் வாழ்வில் ஜெபம் அவருக்கு என்னவாக இருந்திருக்கிறது என்பதைத் தந்தையின் விளக்க உரையில் காண்கிறோம்.துணிவு எனும் இரம்பத்தைத் தீட்டிக் கூர்மையாக்கவும்,இனி நடக்கப்போகும் யாவற்றையும் முன்னோட்டமாக ஓட்டிப்பார்க்கவும் யூதித்துக்கு ஜெபம் தேவைப்பட்டதாக உணருகிறோம். உண்மைதான்....." பாதித்திட்டமிட்ட வேலை பாதி முடிந்த வேலைக்குச்சம்ம்" என்பார்கள்.அதிகாலைக் கண் விழித்தலை ஜெபத்தின் துணை கொண்டு தொடங்கும் போது அந்த நாளின் சுகமே தனிதான் என்பதை நம்மில் பலர் அறிவோம்.பல சமயங்களில் நாம் ஆலயத்திற்குச் செல்லும் வழிபாடே போதும் என திருப்தி அடைகிறோம்.இல்லை..என்ன தான் கூட்டுப்பிரார்த்தனை தேவை எனினும் நம் உள்ளத்தின் தனிமையில் இறைவனுடன் உறவாடுவது அதைவிட முக்கியம் என நினைக்கிறேன்.யூதித்துக்கு 'ஆண்டவர்', 'தாழ்ந்தோரின் கடவுள்', 'ஒடுக்கப்பட்டோரின் துணைவர்'......இப்படியெல்லாம் இருந்த இறைவன் 'எனக்கு யார்?' என்பதை இறைவனுடன் நான் கழிக்கும் தனிமையில் மட்டுமே உணரமுடியும்.'ஜெபம்' ...என்னைப்பொறுத்த வரையில் நான் சாய்ந்து கொள்ள ஒரு தூண்.அடிக்கடி நான் நினைப்பதுண்டு.கடவுள் இல்லை எனச் சொல்பவர்களும், அவரை நம்பாதவர்களும் இந்தத் தூணின் துணையின்றி என்ன செய்ய முடியும்? நாளுக்கு நாள் பள்ளிச்சிறார்கள் தொடங்கி அதிகரித்து வரும் ' 'தற்கொலைகளுக்கும்' கூட இதுதான் காரணமாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது.நமக்காக மட்டுமின்றி நம்மைச் சுற்றி இருப்போருக்காவும் ஜெபிக்கக் கற்றுக்கொள்வோம்.அப்பொழுதுதான் " தூபம் போல் என் ஜெபம் உம்மை நோக்கி எழும்பாதோ?" என்று நம்மாலும் பாட முடியும்.ஜெபத்தின் தேவையை உணர வைத்த தந்தையின் முயற்சிக்கு நன்றிகள்.உங்களுக்காகவும் என் ஜெபம் உண்டு.வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete