Saturday, March 12, 2016

தானியேல் நூல் (இ)

இணைத்திருமுறை நூல்களில் தானியேல் நூலின் கிரேக்க இணைப்பையும் வாசிக்கின்றோம். எழுதப்பட்ட மொழி என்ற அடிப்படையில் தானியேல் நூல் எபிரேயம் மற்றும் அரமேய மொழிகள் கலந்து எழுதப்பட்டுள்ளது. கிரேக்க மொழியில் எழுதப்பட்டு (மூலப் பிரதி எபிரேயம் அல்லது அரமேயத்தில் இருந்திருக்க வேண்டும் - அவை நமக்குக் கிடைக்கப்பெறவில்லை) இணைத்திருமுறைநூல்களில் இணைக்கப்பட்டுள்ளவை மூன்று:

அ. இளைஞர் மூவரின் பாடல். நெபுகத்னேசர் சிலையை வணங்க மறுத்த அனனியா, மிசாவேல், அசரியா என்னும் மூன்று இளவல்கள் தீச்சூளையில் எறியப்பட அங்கே அவர்கள் பாடும் பாடல் இது. நிகழ்வின் இறுதியில் தங்கள் ஆடையில்கூட நெருப்பின் நெடி படியாமல் வெளியே வருவார்கள் இவர்கள்.

ஆ. சூசன்னா. இந்த இளவலின் அழகில் மயங்கும் இரண்டு பெரியவர்கள் (வயதிலும், சமூகத்திலும்) அவரை அடைய நினைத்து, அது நிறைவேறாமல் அவர்மேல் பொய்க்குற்றம் சுமத்தி, அவரை பழிதீர்க்கும் வேளையில் தானியேலின் குறுக்கீட்டால் தப்பிக்கின்றார். கண்ணுக்கு கவர்ச்சியாக இருப்பது என்றுமே ஆபத்துதான் என்பதை ஏவாளின் தோட்டத்தில் கற்றுக்கொள்ளாத இந்த முதியவர்கள் தோட்டத்திலேயே மாட்டிக்கொள்கின்றனர் என்பதுதான் கிளாசிக்.

இ. பேல் தெய்வமும் அரக்கப் பாம்பும்.

இதுதான் இன்று நாம் பார்க்கப் போகும் பகுதி. 42 வசனங்கள் மட்டுமே கொண்டிருக்கும் இப்பகுதியில் மூன்று நிகழ்வுகள் பதிவு செய்யப்படுகின்றன:

1. பேல் தெய்வம் (1-22)
2. அரக்கப் பாம்பு (23-30)
3. சிங்கத்தின் குகையில் தானியேல் (33-42)

இந்த மூன்று நிகழ்வுகளின் கட்டமைப்பு ஒன்றுதான்:

அ. எந்தக் கடவுள் பெரியவர்? என்ற கேள்வி.
ஆ. 'பாபிலோனியக் கடவுள்தான்' என அரசன் சொல்லுதல்
இ. அதை நிரூபிக்க ஒரு போட்டி
ஈ. அந்தப் போட்டியில் தானியேல் தன் மதிநுட்பத்தால் வெல்லுதல்
உ. அரசன் தானியேலின் கடவுளை ஏற்றுக்கொள்ளுதல்

ஒரு பிரச்சினையின் தீர்வு அடுத்த பிரச்சினையின் ஆரம்பமாக இருக்கும் இங்கே. அதாவது, ஒரு போட்டியில் தானியேல் வெல்வார். அந்த வெற்றி மற்றவர்கள் மனத்தில் பொறாமையை விதைக்கும். அந்தப் பொறாமையே அடுத்த பிரச்சினையின் தூண்டுகோலாக இருக்கும்.

இந்த மூன்று நிகழ்வுகளின் (மேலும் இந்த மூன்று இணைப்பு நூல்களின்) செய்தி ஒன்றுதான்:
'இஸ்ரயேலின் கடவுள் அனைத்துலகிற்கும் ஆண்டவர். அவர் வரலாற்றில் குறுக்கிட்டு தம்மில் நம்பிக்கை கொள்வோரை எவ்வகைத் துன்பங்களினின்றும் காப்பாற்றுவார்'

துன்பத்திற்கு விடை கிடைக்காத மனித மனம், அல்லது துன்பத்திற்கு தன் அருகில் விடையைக் காண முடியாத மனித மனம், தன்னையறியாமல் மேல் நோக்கி எழுகிறது.

அப்படி எழும் மனதின் துன்பத்தை தீர்க்க துணை வருபவரே - கடவுள்.

அது நீங்களும், நானுமாகக்கூட இருக்கலாம்.


1 comment:

  1. இணைத்திருமுறை நூல்களில் ஒன்றான தானியல் நூலின் இணைப்புக்களின் ஒரு பகுதியான ' பேல் தெய்வமும்,அரக்கப்பாம்பும்.' முதல் ஏற்பாட்டுக் காலம் தொடங்கி இன்று வரை உலக மக்களின் அத்தனை கண்ணீருக்கும் காரணம் ஒரே விஷயம் தான் என நினைக்கிறேன்." எந்தக் கடவுள் பெரியவர்? உன்னவரா? என்னவரா?" என்பதே அது.துன்பத்திற்கு விடை கிடைக்காத மனித மனம், தன்னையும் அறியாமல் மேல் நோக்கி எழும்புகையில் அந்த மனத்தின் சஞ்சலத்தை அகற்ற, கண்ணீரைத்துடைக்க யார் வருகிறாரோ 'அவரே கடவுள்.'வெரி சிம்பிள்....தந்தையின் வார்த்தைகளில் ' அது நீங்களும்,நானுமாகக் கூட இருக்கலாம்' ஆம்.....கண் காண முடியாத இறைவனின் காணக்கூடிய முகங்கள் தானே நாமெல்லாம்? இதை உணர்ந்தாலே போதும்.ஞானம் பெற்றவர்களாகி விடுவோம் என நினைக்கிறேன்.பதிவின் ஆரம்பதிதில் சிறிது குழம்ப வைத்துப்,பின் இறுதியில் வாழ்க்கையின் மிக அழகான உண்மையை.....நாமும் கூட மனித மனத்தின் துன்பத்தைத் தீர்க்க முற்படும் போது 'கடவுள்' தான் எனும் உண்மையை உணரவைத்த தந்தைக்கு நன்றிகள்.அனைவருக்கும் ஞாயிறு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete