Tuesday, December 8, 2015

புதிய ஆற்றல்

'ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர்.
கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்.
அவர்கள் ஓடுவர். களைப்படையார்.
நடந்து செல்வர். சோர்வடையார்.'
(காண். எசாயா 40:25-31)

யூபிலி ஆண்டு தொடங்கியாயிற்று.

யூபிலி ஆண்டில் முதல் நாள் இருக்கும் மகிழ்ச்சி, துள்ளல், புத்துணர்ச்சி ஆண்டு முழுவதும் தொடர வேண்டும். இல்லையா?

அதாவது, இன்று நாம் ஓடும் ஓட்டம் களைப்படையாமலும், நாம் நடக்கும் நடை சோர்வடையாமலும் இருக்க வேண்டும்.

களைப்பும், சோர்வும் இராது என்கிறது நாளைய முதல் வாசகம்.

நேற்று இரவு பட்டினத்தாரின் உடல்கூற்றுவண்ணம் பாடலைப் பற்றி எழுதிக்கொண்டிருந்தேன். மனித வாழ்க்கை சுழற்சியை 12 நிகழ்வுகளாகப் பதிவு செய்கின்றார். இந்த 12க்கும் தொடர்பாக மேலைநாட்டு உளவியிலில் ஏதாவது கருத்து இருக்கிறதா என்று இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது, எர்னஸ்ட் பெக்கர் அவர்கள் எழுதிய 'The Denial of Death' (1973) என்ற புத்தகம் கண்ணில் பட்டது.

நாம் இரண்டு உலகில் வாழ்கின்றோம். ஒரு உலகம் உடல் சார்ந்த உலகம். மற்ற உலகம் உள்ளம் சார்ந்த உலகம். இந்த உடல் சார்ந்த உலகம் அழிந்துவிடும். ஆகையால் இந்த அழிவை நாம் எதிர்கொள்ள உள்ளம் சார்ந்த உலகத்தில் ஏதாவது சாதிக்க நினைக்கிறோம். 'நான் ஒரு பெரிய ஹீரோ ஆக வேண்டும்', அல்லது 'என் தனிப்பெரும் இருப்பைக் காட்ட வேண்டும்' என அன்றாடம் முயற்சி செய்கின்றோம்.

இவருடைய மாணவர் ஒருவர் (Mark Manson) நம் வாழ்க்கை நிலையை நான்கு பகுதிகளாகப் பிரிக்கின்றார்: Mimicry, Self-Discovery, Commitment, Legacy.

நிலை 1 Mimicry (Age 0 to 19): இந்த நிலையில் நாம் அடுத்தவர்கள் என்ன செய்கிறார்களோ, அதை அப்படியே உள்வாங்கிக்கொள்கிறோம். நம்மைச் சுற்றியிருப்பவர்களின் உணவுப்பழக்கம், மொழி, கலாச்சாரம், உடை என அனைத்தையும் நாம் அடுத்தவர்களிடமிருந்து எடுத்துக்கொள்கிறோம்.

நிலை 2 Self-Discovery (Age 20 to 34): இந்த நிலையில் நாம் நம் வரையறைகளைக் கண்டுபிடிக்கிறோம். இவைகள் என்னால் முடியும். இவைகள் என்னால் முடியாது. இதுதான் நான் என முடிவெடுப்பது இந்த நிலையில்தான்.

நிலை 3 Commitment (Age 35 to 60): நாம் வாழ்கின்ற இந்த குறுகிய ஆண்டுகளில் உலகில் உள்ள எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள முடியாது. எல்லா நாடுகளுக்கும் செல்ல முடியாது. எல்லா வேலைகளையும் செய்ய முடியாது. ஆனால் என்னில் சிறந்தது எது என்று நான் நிலை 2ல் தேர்ந்துள்ளதை இந்த நிலையில் நான் செயல்படுத்த வேண்டும். ஆசிரியராக நான் முடிவெடுத்திருக்கிறேன் என்றால், ஐயோ, டாக்டர் ஆகலையே என வருத்தப்படக் கூடாது. எடுத்த நிலையில் நன்றாக செயல்பட வேண்டும்.

நிலை 4 Legacy (Age 61 to 0): இன்னும் கொஞ்ச நாட்களில் இந்த நிலை கடந்துவிடும். நடந்த அனைத்திற்கும் நன்றி கூற வேண்டிய நிலை இந்த நிலை. முடிந்தவரையில் நமக்கு கீழ் இருக்கும் இளம் தலைமுறையை உந்தித்தள்ளுவதும், அவர்களை உற்சாகப்படுத்துவதும் இந்த நிலையில் அவசியம்.

நான் இந்த நிலைகளை என்னில் வைத்துப் பார்த்தபோது, நிலை 2 முடிந்து, நிலை 3க்குள் நுழைகிறேன். இதுதான் நான் என்று என்னையே அறியும் நிலை முடிந்துவிட்டது. என் கைக்கு அகப்படாத ஒன்றைத் தேடுவதும், அதை அடைய முயல்வதும் மடமை. 'இதுதான் என் தனித்தன்மை' என்று கண்டுவிட்ட ஒன்றை நான் நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும். 'அப்படி இருந்தால் நன்றாக இருக்கும்!', 'அந்த ஊருக்குப் போய் அந்த வேலை செய்தால் நன்றாக இருக்கும்' என்று நான் இன்னும் கொண்டிருப்பது 'Peter Pan Syndrome' (அதாவது, எப்போதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கும் எண்ணம்).

இந்த நிலைகள் எல்லாருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சில நேரங்களில் நாம் ஏதாவது விபத்து அல்லது இழப்பின் வழியாக ஒரே நிலையில் தங்கிவிடலாம். அல்லது அந்த நிலை நம்மைப் பின்னோக்கி இழுக்கலாம். மேலும், ஒரு நிலையிலிருந்து மற்ற நிலைக்கு கடந்து செல்வது, ஏதோ இரவில் தூங்கி காலையில் எழுவது போல இருப்பதன்று. கொஞ்சம், கொஞ்சமாக நடக்கும் நிகழ்வே இந்த மாற்றம். இந்த மாற்றம் நிகழ நாம் சிலவற்றை இழக்க வேண்டும். சிலவற்றை பிடித்துக்கொள்ள வேண்டும்.

ஆனால், நாம் எவ்வளவு பெரியநிலையில் நம் தனித்தன்மையை நிலைநிறுத்தினாலும், காலச்சக்கரம் சுற்றி வரும்போது, நம் சாதனைகள், நம் இருப்பு எல்லாம் மறக்கப்படும்.

இதுதான் வாழ்க்கை.

ஆனால், இதுதான் வாழ்க்கை என்பதற்காக, 'இப்படித்தான் நான் இருப்பேன்' என நம்மையே கூட்டுக்குள் அடைத்துக்கொள்ளலாமா? நோ பாஸ்.

நாம் ஒவ்வொருவரும் இருக்கும் வாழ்க்கை நிலையில் நாம் கழுககள் போல புத்துயிர்பெற்ற பறக்க இறைவன் இந்த யூபிலி ஆண்டில் அருள்கூர்வாராக.

2 comments:

  1. தந்தைக்கு வணக்கம்."புதிய ஆற்றல்" என்ற பதிவு புது ஆற்றல் தரக்கூடியதொரு பதிவாக உள்ளது. இந்தப்பதிவில் யூபிலி ஆண்டின் முக்கியத்துவத்தை பற்றி மிக அருமையாக உரைத்துள்ளீர்கள். நாம் எவ்வளவு பெரியநிலையில் நம் தனித்தன்மையை நிலைநிறுத்தினாலும், காலச்சக்கரம் சுற்றி வரும்போது, நம் சாதனைகள், நம் இருப்பு எல்லாம் மறக்கப்படும்.இதுதான் வாழ்க்கை.
    என்றவாறு மிகவும் அழகாகவும்,நேரிய சிந்தனையுடனும் வாழ்கையை பற்றி கூறியுள்ளீர்கள். நாம் ஒவ்வொருவரும் இருக்கும் வாழ்க்கை நிலையில் நாம் கழுககள் போல புத்துயிர்பெற்ற பறக்க இறைவன் இந்த யூபிலி ஆண்டில் அருள்கூர்வாராக.இந்த வார்த்தைகளின் படி வாழ எங்களுக்காக ஜெபியுங்கள்.இரக்கத்தின் ஆண்டவர் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும்.தந்தைக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

    ReplyDelete
  2. அழகாக ஆரம்பித்துள்ளது யூபிலி ஆண்டு.ஒரு ஓட்டப்பந்தயம் ஆரம்பிக்கும் போது நமக்கு இருக்கும் சக்தியும், திடமும் இறுதிவரை இருக்குமா என முடிவு செய்த பின்தான் அதில் பங்கேற்க வேண்டும்.இலையெனில் பாதியிலே துவண்டு போய் நாலு பேருக்கு வேடிக்கைப் பொருளாகி விடுவோம். ஏதோ ஒரு படத்தில் ரஜினிகாந்த் வாழ்க்கையை எட்டுப் பருவங்களாகப் பிரித்துப் பாடியிருப்பதாக ஞாபகம்.தந்தை அதை நான்காகப் பிரித்திருக்கிறார்.எண்ணிக்கை எத்தனை எனினும் நமக்கு வேண்டியது அதன் சாராம்சமே.முதல் நிலையில் நாம் பார்ப்பவர்களையும்,பார்ப்பனவற்றையும் உள் வாங்கி, இரண்டாம் நிலையில் அவற்றுக்குள் நம்மைத் திணிக்க முடியுமா என யோசித்து, மூன்றாம் நிலையில் என்னுடைய லிமிட்டேஷன்ஸ்க்குட்பட்டு என்னால் முடியும் என்பதைத் திருப்தியுடன் அங்கீகரித்து, நான்காம் நிலையில் நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து இனைவனுக்கும்,எனக்குமே நன்றி சொல்வது....ஆஹா! என்ன ஒரு பக்குவம் தந்தைக்கு இந்தக் கோணத்தில் யோசிக்க! இந்தப் பக்குவம் இறைவன் மீதும்,தன் மீதும் நம்பிக்கை இருப்பவர்களுக்கு மட்டுமே சொந்தம்.ஆம்!... இந்த நிலையில் உள்ளவர்கள் "புதிய ஆற்றல் பெறுவர்; கழுகுகள் போல இறக்கை விரித்து உயரம் செல்வர்; களைப்படையார்; சோர்வடையார்". இந்தத் தலைமுறை செல்ல வேண்டிய திசை பற்றிக் கூறும் ஒரு பதிவு.'ரோல் மாடல்' தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete