Wednesday, December 16, 2015

நிலா உள்ள வரையில்

'நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.
கதிரவன் உள்ள வரையில் அவரது பெயர் நிலைப்பதாக.'
(திபா 72:7, 17)

இன்று காலை சாப்பிட்டுக் கொண்டே ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தேன். ஜன்னலுக்கு வெளியே 3 சிட்டுக்குருவிகள் நின்றுகொண்டிருந்தன. இந்தக் குளிரில் இந்த சிட்டுக் குருவிகள் எப்படி ஒய்யாராமாக உட்கார்ந்திருக்கின்றன என்று ஆச்சர்யப்பட்டேன். ஜன்னலைத் திறந்து ஏதாவது சாப்பிடுவதற்கு போட்டால், ஒருவேளை அவைகள் பறந்துவிடும் என நினைத்து ஜன்னலைத் திறக்காமலே இருந்தேன்.

வீட்டுக்கூரையில் காக்கா இருக்கிறது என்றால் உறவினர்கள் வருவதாகச் சொல்வார்கள்.

சிட்டுக்குருவிகள் தூரத்திலிருப்பவர்கள் தரும் செய்தியை நமக்கு கொண்டுவரும் என்பது என் நம்பிக்கை. இந்தக் காரணத்திற்காகத்தான் செல்ஃபோன்களின் வருகைக்குப் பின் ஒட்டுமொத்தமாக சிட்டுக்குருவிகள், 'நாங்கள் எதற்கு இனி?' என நினைத்து தற்கொலை செய்துகொண்டன போல.

சிட்டுக்குருவிகள் கடல் கடந்து செய்திகளைக் கொண்டு செல்லுமா என்று தெரியவில்லை. ஆனால், அவைகள் எப்படியோ நாம் அனுப்பும் செய்திகளைக் கொண்டு சேர்த்துவிடுகின்றன.

இந்த ஆண்டு வேடந்தாங்கலில் நிறைய தண்ணீர். மழை பெய்த சில நாட்களில் வெளிநாட்டுப் பறவைகள் எல்லாம் வந்துவிட்டன. கடந்து ஆண்டு வராத பறவைகள் இந்த ஆண்டு வந்தது எப்படி? அல்லது இந்த நாட்களில் மழை பெய்யும், நாம் அதற்குள் புறப்படுவோம் என்று மூன்று, நான்கு மாதங்கள் பயணம் செய்து இந்தப் பறவைகள் எப்படி சென்னைக்கு வந்தன? அவைகளுக்கும் ஏதோ ஒரு இண்டர்நெட் இருக்கிறதல்லவா!

நாளைய திருப்பாடலில் வரும் இரண்டு உருவங்கள் எனக்குப் பிடித்திருக்கின்றன: 'நிலா', 'கதிரவன்.'

'அன்று வந்ததும் அதே நிலா, இன்று வந்ததும் இதே நிலா' என்ற பாடல் கேட்டிருக்கிறீர்களா?

அன்று ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே, தாவீது, இயேசு, நம்ம தாத்தா, பாட்டி பார்த்த நிலா மற்றும் சூரியனைத்தான் நாம் இன்று பார்க்கிறோம். இல்லையா?

அல்லது

அன்று ஆபிரகாமை, ஈசாக்கை, யாக்கோபை, மோசேயை, தாவீதை, இயேசுவை, நம்ம தாத்தா, பாட்டியை பார்த்த நிலா மற்றும் சூரியன்தான் இன்று நம்மைப் பார்க்கின்றன.

ஆக, ஏதோ நாம் இறந்தாலும், ஏதோ ஒரு வகையில் இருக்க முடியும்.

தூரமாய் இருந்தாலும், ஏதோ ஒரு வகையில் நெருக்க முடியும்.

2 comments:

  1. Dear Father,Thank you.Those birds brought message to me that you are safe and sound.Here we are also happy and I think tomorrow morning they will bring message to you about us.

    let us thank the Almighty for all his beautiful creatures that God has given for us and created for us.In all his creation let find God and thank God. Congrats Father.

    ReplyDelete
  2. உணர்வுகளை உறவாக்கும் ஒரு பதிவு.இந்தச் சிட்டுக்கருவிகளைப்பற்றி நினைத்தாலே என் மனம் கனத்துப்போவது நிஜம்.காரணம் சில மாதங்களுக்கு முன் நான் காலைநேரம் நடைப்பயிற்சி செய்கையில் இந்தச் சிட்டுக்குருவிகள் எல்லாத்தெருக்களிலும் தொப்புத் தொப்பென்று விழுவதைப் பார்த்திருக்கிறேன்.இன்று தந்தையின் வரிகளைப் பார்க்கும் போது அவை செல்ஃபோன் வரவினால் தான் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற உண்மையில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது. அதுமட்டுமா? இன்னொரு மிகப் பெரிய உண்மையையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளார் தந்தை.இந்த 'நிலா'வையும், 'கதிரவனை'யும் பார்க்கையில் அவை நம் மூதாதையர் பார்த்தவை மட்டுமல்ல; நம் மூதாதையரையும் பார்த்த விஷயங்கள் தான் அவை.நாம் இறந்தும் வாழ்கிறோம் என்ற செய்தியின் இனிப்பை உணரமுடிகிறதல்லவா? ஆம்! உறவுகள் தூரமாய் இருப்பினும் ஏதோ ஒரு வகையில் நெருங்க முடியும் என்ற உண்மையும் கூடவே புலப்படும் போது இனிப்பின் தன்மையும் கூடுவது நிஜம்.கண்டிப்பாக இந்த உணர்வுகளை உறவாக்கியதொரு பதிவைத்தந்த தந்தை பாராட்டுக்குரியவரே!

    ReplyDelete