Sunday, December 20, 2015

மெய்ப்பொருள்

தலைவி கூற்று:

என் காதலர் குரல் கேட்கின்றது.
இதோ, அவர் வந்துவிட்டார்.
மலைகள்மேல் தாவி வருகின்றார்.
குன்றுகளைத் தாண்டி வருகின்றார்.

என் காதலர் கலைமானுக்கு
அல்லது மரைமான் குட்டிக்கு ஒப்பானவர்.

இதோ, எம் மதிற்சுவர்க்குப் பின்னால் நிற்கின்றார்.
பலகணி வழியாய்ப் பார்க்கின்றார்.
பின்னல் தட்டி வழியாய் நோக்குகின்றார்.

என் காதலர் என்னிடம் கூறுகின்றார்:
'விரைந்தெழு, என் அன்பே!
என் அழகே! விரைந்து வா.
இதோ, கார்காலம் கடந்துவிட்டது.
மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது.
நிலத்தில் மலர்கள் தோன்றுகின்றன.
பாடிமகிழும் பருவம் வந்துற்றது.
காட்டுப்புறா கூவும் குரலதுவோ
நாட்டினில் நமக்குக் கேட்கின்றது.
அத்திப் பழங்கள் கனிந்துவிட்டன.
திராட்சை மலர்கள் மணம் தருகின்றன.
விரைந்தெழு, என் அன்பே!
என் அழகே! விரைந்து வா.'

தலைவன் கூற்று:
பாறைப் பிளவுகளில் இருப்பவளே,
குன்றின் வெடிப்புகளில் இருக்கும்
என் வெண்புறாவே,
காட்டிடு உன் முகத்தை.
எழுப்பிடு நான் கேட்க உன் குரலை.
உன் குரல் இனிது!
உன் முகம் எழிலே!

நாளைய முதல் வாசகத்தில் (இபா 2:8-14) நாம் வாசிக்கும் இரண்டு பாடல்களே இவை. விவிலியத்தில் இன்னும் மறைபொருளாக உள்ள மூன்று நூல்களில் (யோபு, சபை உரையாளர், இனிமைமிகு பாடல்) ஒன்று இந்த நூல்.

யார், யாருக்காக இதை எழுதியது என்பது பற்றி நிறைய கருத்துக்கள் உள்ளன. ஆனால், இன்னும் மெய்ப்பொருள் காணவில்லை யாரும்.

நிற்க.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் காதல் மேன்மையாகக் கருதப்பட்ட, மக்கள் இயற்கையோடு ஒத்து வாழ்ந்த, ஓர் வாழ்வியல் சூழலில், ஒரு அவளும், ஒரு அண்ணலும் தங்கள் மனஓட்டங்களில் எண்ணியவை இப்பாடல்கள்.

இன்று நகரின் வெளியே அடுக்குமாடிக்குடியிருப்பின் 9வது மாடி குடியிருப்பின் ஒரு அவளும், கொஞ்சம் தூரத்தில், நகரின் இரைச்சலுக்கும், கூட்டத்திற்கும் நடுவில், நானும் இங்கே கொஞ்சம் இருந்துக்கிறேன் என, மற்ற வீடுகள் கொஞ்சம் நெளிந்து கொடுக்க, அந்த இடுக்கில் கட்டப்பட்ட லைன் வீடுகளின், கடைசி வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் ஒரு அண்ணலும் பாடினால் எப்படி இருக்கும்?

அவள் கூற்று:

என் காதலரின் பைக் சத்தம் கேட்கிறது.
இதோ, அவர் வந்துவிட்டார்.
டிராபிக் சிக்னல் தாவி வருகின்றார்.
ரயில்வே கேட், வேகத்தடை, டெலிஃபோன் லிங்க் குழிகள் தாண்டி வருகின்றார்.

என் காதலர் பைக் ரேசில் கலக்கும் அஜித்துக்கு
அல்லது வேகமாய்ப் பறக்கும் சூர்யாவுக்கு ஒப்பானவர்.

இதோ, என் தரைதள பார்க்கிங்கில் தன் வண்டிக்கு சைட் ஸ்டேண்ட் போடுகின்றார்.
தன் ஹெல்மெட்டின் வைசர் ஊடே என்னைப் பார்க்கின்றார்.
தன் வண்டியின் 'ரேர் மிரர்' திருப்பி என் ஜன்னலைப் பார்க்கின்றார்.

என் காதலர் எனக்கு டெக்ஸ்ட் செய்கிறார்:
'இன்னும் எழுந்திருக்கலயா எரும மாடு (செல்லமாய்!)!
இதோ, ஊரே விடிஞ்சிடுச்சு.
பள்ளிக்கூட வேன்கள் எல்லாம் கடந்துவிட்டன.
கடைசிக் குடத்தையும் நிரப்பிய
உன் அப்பார்ட்மென்ட் தண்ணி லாரி கடந்துவிட்டது.
நைட் டியூட்டி பார்த்த வாட்ச் மேன் போய் புது ஷிப்ட் தொடங்கிவிட்டது.
எங்கோ ஆம்புலன்ஸ் வேகமாக அலறிக் கொண்டு போகும் சத்தம் கேட்கிறது.
எதிர்த் தெருவில் சுடச்சுட விற்கப்படும் பனியாரத்தின் நெய் மணக்கிறது.
வேப்பமர பிள்ளையார் கோவில் சூடம், ஊதுபத்தியின் நறுமணம் காற்றில் கலக்கிறது.
சீக்கிரம் வா! உன் இருட்டி உடை மாற்றி!
உன் அறையின் ஏசி ஆஃப் பண்ணி!
லிப்ட் எடுத்து தரைதளம் வா!'

அண்ணல் கூற்று:

கதவின் பின் நிற்பவளே,
கதவின் லென்ஸ் வழி என் முகம் பார்ப்பவளே,
காட்டிடு உன் முகத்தை.
கொஞ்சம் சிணுங்கு.
உன் வாய்ஸ் நல்லா இருக்கு!
உன் ஃபேஸ்கட் சூப்பரா இருக்கு!

காதலிலும் காத்திருத்தல் உள்ளதால்,
கடவுளுக்காய் காத்திருக்கும் இக்காலத்தில்
நாம் வாசிக்கின்றோம் இந்தக் கவிதையை!

2 comments:

  1. நேற்று அத்தனை சீரியஸா ஒரு பதிவைத் தந்த அதே தந்தைதானா இன்றையப் பதிவையும் தந்துள்ளார்? நம்ப முடியவில்லை.இனிமைமிகு பாடலில் வரும் தலைவன்,தலைவிக்குள் நடக்கும் உரையாடலை இந்தக் கால காதலன்,காதலியின் ஸ்டைலில் கொஞ்சம் மசாலாவும்,கற்பனையும் சேர்த்துக் கொடுத்திருப்பது இரசிக்கும் படி உள்ளது." கடவுளுக்காய் காத்திருத்தல் உள்ள இந்நாட்களில் காதலுக்குச் சொந்தமான காத்திருப்பு பற்றிய கவிதை" என்று தன் கற்பனாசக்திக்கு ஒரு நியாயமும் கற்பித்திருக்கிறார்.புன்னகையை வரவழைக்கும் வரிகளுக்காகத் தந்தைக்குப் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  2. தந்தைக்கு வணக்கம்.எப்படி உங்களால் மட்டும் இப்படி வித்தியாசமாக படைக்க முடியுது. காதலிலும் காத்திருத்தல் உண்டு.ஆனால்,அந்த காதல் காத்திருத்தலை விட இனிமையானது,விசித்திரமானது நாம் கடவுளுக்காய் காத்திருப்பது என்பது.

    கடவுளுக்காய் காத்திருக்கும் இக்காலத்தில் இனிமைமிகு பாடலில் வரும் காதலர் கலைமானுக்கு
    அல்லது மரைமான் குட்டிக்கு ஒப்பானவர் என்று கூறப்பட்டிருக்கிறது.

    கலைமானானது
    தாகத்தின் அழுத்தம்
    தாங்காது,
    உடைந்த பிம்பங்களால்,
    ததும்பி வழிகிறது
    தடாகம்.

    காற்றில் கசிந்து வரும்
    இணையின் வாசம் தேடி,
    அலைகிறது ....
    பெருவெளியில் அழகாக மேயும் கலைமான்.

    காத்திருந்து களிப்புடன் காண்போம் கடவுளை.

    தந்தைக்கு நன்றியும் பாராட்டுக்களும்!!!

    ReplyDelete