Wednesday, December 23, 2015

டீயை விட கப்பு

தாவீது அரசர் எப்பவெல்லாம் தன் அரண்மனையின் மேல்தளத்திற்கு செல்கிறாரோ, அப்பவெல்லாம் ஏதாவது ஒரு பாவம் செய்து விடுகின்றார்.

தூரத்தில் குளித்துக் கொண்டிருந்த பெத்சேபாவைப் பார்த்தவுடன், அவரை தன்வசமாக்கிக் கொள்ள விரும்பினார்.

நாளைய முதல் வாசகத்தில் மீண்டும் ஒருமுறை மேல்தளத்திற்கு செல்கிறார் தாவீது.

இப்போது அவர் கண்ணில் படுவது ஆண்டவரின் பேழை.

பரவாயில்லை. ஆண்டவர் இருக்கும் பக்கம் கொஞ்சம் கண்களைத் திருப்பியிருக்கிறார்.

ஆனால், ஆண்டவரின் இல்லத்தைப் பார்த்துவிட்டு, இறைவாக்கினர் நாத்தானைக் கூப்பிட்டு அவர் சொல்லும் வார்த்தைகள் தாம் யோசிக்க வேண்டியவை. அப்படி என்ன சொல்கிறார் அவர்?

'பாரும், நான் கேதுரு மரங்களாலான அரண்மனையில் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் குடியிருக்கிறது.'

அதாவது, நான் வெயில், மழை படாத இடத்தில் இருக்கிறேன். ஆனால் ஆண்டவர் காய்ந்து கொண்டும், நனைந்து கொண்டும் இருக்கிறார்.

தாவீதின் இந்த வார்த்தைகள் கடவுளின் இல்லத்தின் மேலுள்ள அக்கறையைக் காட்டுகிறதா? இல்லை. அவரின் அக்கறையின்மையையே காட்டுகிறது. அதாவது, அரசனின் முதன்மையான பணி ஆலயத்தைப் பேணுதல். ஆனால், தாவீது அதை மறந்துவிட்டு, தன் அரண்மனையைப் பேணுவதில்தான் அக்கறை காட்டுகின்றார்.

தாவீது போட்ட பிட்டை அப்படியே திருப்பிப் போடுகின்றார் கடவுள்:

'நான் தங்குவதற்கு நீ கோவில் கட்டவா?
ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை அழைத்து அரசனாக்கியது யார்?
உன் உடனிருந்து உன்னை வழிநடத்துவது யார்?
உன் எதிரிகளை அழித்தது யார்?
உன்னைப் புகழுறச் செய்தது யார்?
நான்தான்...'

'உன் வாழ்நாள் முடிந்து நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும்போது,
உன் இமை மூடுபவன் நானே.
நானே உனக்கு ஒரு கோவில் கட்டுவேன்.'

கடவுளின் இந்த வார்த்தைகள் சொல்வது என்ன?

'நான்தான்,' 'நான்தான்' என்று சொல்கிறாயே...உன்னால் எதுவும் செய்ய முடியாது. அனைத்தையும் உன்வழியாகச் செய்பவன் நானே என்று தாவீதுக்கு நினைவூட்டுகிறார் கடவுள்.
ஆக, செயலாற்றுவது நாமாக இருந்தாலும், நம்மில் செயலாற்றுவது கடவுளே.

தாவீதின் செயல்பாட்டை நம்ம ஊர் பக்கம், 'டீயை விட கப்பு சூடா இருக்கு!' என்று சொல்வார்கள்.

தாவீதுக்கு சொன்னதுபோலவே அழியாத வீட்டை இறைவன் இயேசுவின் வழியாகக் கட்டுகின்றார்.

'எல்லாம் என்னால்' என்ற நிலை விடுத்து,
'எல்லாம் அவரே!' என்று பற்றுவதே
நாளைய வாழ்க்கைப் பாடம்.


2 comments:

  1. தந்தைக்கு வணக்கம்."டீயை விட கப்பு" நல்லதொரு பதிவு.
    எல்லாம் என்னால்' என்ற நிலை விடுத்து,
    'எல்லாம் அவரே!' என்று பற்றுவதே
    நாளைய வாழ்க்கைப் பாடம்.உங்கள் வாழ்க்கைப் பாடத்திற்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

    கிறிஸ்துவின் அன்பும் அமைதியும் நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் தங்கி
    நம்மை நிறைவாழ்வை நோக்கி வழிநடத்துவாராக!!!

    ReplyDelete
  2. "Need of the hour". என்பார்களே! வரவேண்டிய நேரத்தில் வந்ததொரு பதிவு. தலைக்கு மேலே எல்லாமிருந்தும் எச்சிக்கையால் கூட காக்காய் ஓட்டாத, வாயாலேயே வடை சுடும் வெத்துவெட்டு வீர்ரையே பார்த்துப் பழக்கப்பட்ட நமக்கு அண்மையில் வந்த சென்னையின் இடர்பாடு தங்கள் உயிரையும் பணயம் வைத்து மற்றவரைக்காப்பாற்றிய உண்மையான செயல்வீர்ரை வெளிச்சம் போட்டுக்காட்டியது.நமக்கு என்ன இருக்கிறது என்பதை விட அதனால் பிறருக்கு என்ன லாபம் என்று யோசிக்க வேண்டிய தருணமிது.'என்னுடையது'என்ற நிலை விடுத்து 'எல்லாம் அவர் தந்தது'என்று யோசித்தல் நமக்கு நலம் பயக்கும்.தாவீதுக்கு இறைவன் சொல்வதான வார்த்தைகள் அருமை.நாம் இவ்வுலகிற்கு கண் திறப்பதிலிருந்து இறுதியாக நம் இமைகள் மூடும் வரை அனைத்திற்கும் காரணி அவரே என்ற உணர்விருந்தால் நாம் வெறும் களிமண்ணுக்குச் சம்மானவர்கள் என்ற உண்மை நம்மைத் தாக்கும். அந்த இறுதி வரிகள்....' என்னால் என்னால்' என்ற நிலை விடுத்து,'எல்லாம் அவரே என்று பற்றுவதே' நமக்கு என்றைக்கும் வாழ்க்கைப் பாடமாக அமைந்தால் எத்துணை நலம்!கடவுள் தாவீதுடன் பேசுவதாக வரும் வார்த்தைகளை என்னைப் பார்த்தும் பேசுவதாக உணரவைத்த தந்தைக்கு என் நன்றிகள்! பாராட்டுக்கள்!!!

    ReplyDelete