Sunday, December 6, 2015

நெடுஞ்சாலை

அங்கே நெடுஞ்சாலை ஒன்று இருக்கும். அது 'தூய வழி' என்று பெயர் பெறும்.தீட்டுப்பட்டோர் அதன் வழியாய்க் கடந்து செல்லார். அவ்வழி வரும் பேதையரும் வழி தவறிச் செல்லார்.

(காண் எசாயா 35:1-10)

கடவுளின் மீட்பு பற்றி நாளைய முதல் வாசகம் பேசுகின்றது.

கடவுளின் மீட்பு என்பது ஒரு கொடை என்றுதான் நினைக்கிறோம்.

ஆனால், நன்றாகப் பார்த்தால் அர்த்தம் கொஞ்சம் மாறுபடுகிறது.

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம் கைகளில் திணிக்கப்படுவது அல்ல மீட்பு. அதை நாம் தான் கைகளை விரித்துப் பெற வேண்டும். மேலும் கைகளை விரித்துப் பெறுவதற்கும் பக்குவம் வேண்டும். ஆக மீட்பு என்பது கொடை மட்டுமல்ல. அது நம் கடமை அல்லது பொறுப்பும் கூட.

இந்தக் கருத்தை சாலை என்ற உருவகம் வழியாகப் பதிவு செய்கிறார் எசாயா.

'தூய வழி' என்றழைக்கப்படும் இந்த நெடுஞ்சாலையில் கடந்து செல்ல தூய்மை அவசியம். எந்த வகை தூய்மை என்பது பற்றி குறிப்பு இல்லை.

ஆனால், தீட்டுப்பட்டோர் இதில் கடந்து செல்ல முடியாது.

மேலும், பாதை தவறி கூட இதில் நுழைந்துவிட முடியாது.

ஒருவர் தானாக முடிவெடுத்து, அதற்கான தயாரிப்புகள் செய்து இந்த சாலையில் நுழைய வேண்டும். இல்லையா?


2 comments:

  1. சிறிய பதிவு எனினும் கருத்து செறிந்த பதிவு. ஒரு நாடு விட்டு நாடோ அல்லது கண்டம் விட்டுக் கண்டமோ போயிருப்பவர்களுக்குத் தெரியும்...விமானத்தில் ஏறுவதற்கு முன் நாம் உட்படுத்தப்படும் சோதனையின் தன்மை.ஆண் ,பெண் என்ற பேதமின்றி உடைமைகள் மட்டுமின்றி உடம்பும் சோதனைக்குட்படுத்தப்படுகிறது.நம்மைப்போன்ற மனித இனம் வாழுமிடத்திற்குச் செல்லவே இத்தனை ஆயத்தமெனில் ' இறைவனிடம்' நம்மை இட்டுச்செல்லும் ' தூய வழி' யில் பிரயாணிக்க தூய்மையை நாம் போர்த்திக்கொள்ள வேண்டியது அவசியம் தானே! கண்டிப்பாக இங்கு தூய்மை என்பது மனத்தூய்மையையே குறிக்கும் என்று நம்புகிறேன். இந்த தூயவழி இட்டுச்செல்லும் மீட்புக்கு இறைவன் நம்மைத் தேர்ந்தெடுத்திருப்பினும் அதற்கு 'ஆம்', 'இல்லை' என்ற பதில் நம்மிடம் தான் இருக்கிறது என்கிறார் தந்தை. நம்முடைய சுய விருப்பத்தை(free will) மதிக்கும் இறைவன் எதையும் நம் கைகளில் திணிப்பதில்லை. இந்த மீட்பின் பாதைக்கு 'ஆம்' என்பது நமது பதிலாயிருப்பின் அதன் பொறுப்பை உணர்ந்து, அதற்கான தயாரிப்புகளில் இறங்குவோம். காரம் குறையாத பதிவைத் தந்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. தந்தைக்கு வணக்கம்."நெடுஞ்சாலை" என்ற பதிவு மிகவும் சுருக்கமான அர்த்தமுள்ள பதிவு.நம் நாட்டிலும் சரி,மாநிலத்திலும் சரி,மாவட்டத்திலும் சரி,ஊர்களிலும் சரி யாரவது முக்கியமானவர்கள் யாராவது வருகிறார்கள் என்றால்.நமது சாலைகளை பயங்கரமாக தயார் செய்வார்கள்.மேடு பள்ளங்கள்,குன்று குழிகள் எல்லாவற்றையும் சமதளப்படுத்துவார்கள்.ஆனால் இந்த முக்கியத்துவத்தை இறைவனை நம் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ள வரவேற்க எந்த ஒரு முறையான தயாரிப்பையும் நாம் மேற்கொள்ளுவதில்லை.எனவே நாம் நம்மை ஆயத்தப்படுத்துவோம்.இத்தகைய சிந்தனையை நம்மில் விதைத்த தந்தைக்கு நன்றியும் பாராட்டுக்களும்!!!

    ReplyDelete