Monday, July 6, 2015

மத்தேயுவின் அழைப்பு

1599 முதல் 1602 வரை ஆன நான்கு ஆண்டுகளில் காரவாஜோ, இயேசுவின் சீடரும், நற்செய்தியாளருமான மத்தேயுவை மையமாக வைத்து மூன்று ஓவியங்கள் தீட்டினார்: மத்தேயுவின் அழைப்பு (Calling of Matthew), மத்தேயுவின் இறப்பு (மறைசாட்சியம்) (Martyrdom of Matthew) மற்றும் மத்தேயுவின் தூண்டுதல் (Inspiration of Matthew). இந்த மூன்றும் உரோமையில் உள்ள சான் லூயிஜி தெய் ஃப்ரான்சேசி என்ற ஆலயத்தில் உள்ளன.

மத்தேயு என்பவர் சுங்கச் சாவடியில் அமர்ந்திருக்கக் கண்டு இயேசு அவரை அழைப்பதே (மத்தேயு 9:9) இந்த ஓவியத்தின் கருப்பொருள்.

நான்கு பேருடன் மத்தேயு ஒரு மேசையில் அமர்ந்திருப்பது போலவும், அவர் இருக்கும் அறைக்குள் இயேசுவும், பேதுருவும் நுழைவது போலவும் உள்ளது ஓவியம்.

நான்கு பேர் நாற்காலிகளில் அமர்ந்திருக்கிறார்கள். அமர்ந்திருப்பவர்களின் அருகே ஒருவர் நிற்கின்றார். கொஞ்சம் தள்ளி இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். மேலே ஒரு ஜன்னல். ஜன்னலில் நான்கு கண்ணாடிகள். அறையின் வெளியிலிருந்து வெளிச்சம் உள்ளே வருகிறது. இயேசு நிற்கும் இடத்தில் அதிக வெளிச்சமாகவும், அது அப்படியே சிறுத்து மறைவதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இயேசு அமர்ந்திருப்பவர்களை நோக்கி ஆட்காட்டி விரலை நீட்டுகி;ன்றார். இயேசுவின் மேல் ஒரு சின்ன ஒளிவட்டம் அவரை பேதுருவிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. மேசையில் சிந்திக் கிடக்கும் நாணயங்கள் மத்தேயு செய்யும் வரி வசூல் வேலையை அடையாளப்படுத்துகின்றன. அமர்ந்திருப்பவர்கள் இடுப்புக்கு மேல் ஆடை அணிந்திருப்பது போல உள்ளது.

அமர்ந்திருக்கும் இந்த நான்கு பேரில் மத்தேயு யார்?

இதுதான் இந்த ஓவியத்தின் ட்ரிக்.

அ. மத்தேயுவின் மறைசாட்சியம் மற்றும் தூண்டுதல் என்ற ஓவியங்களைப் பார்ப்பவர்கள் எளிதாக மத்தேயு என்பவர் தாடி வைத்து அமர்ந்திருப்பவர் என்று சொல்கின்றனர். மேலும், அவர் விரலை தன் பக்கம் காட்டி, 'நானா?' என்று கேட்பது போல இருப்பதும் இவர்கள் சொல்வதை உறுதிப்படுத்துகிறது.

ஆ. இரண்டாம் குழுவினர் ஓவியத்தின் இறுதியில் தலையைக் குனிந்து அமர்ந்திருக்கும் நபர்தான் மத்தேயு என்று சொல்கின்றனர். காரணம், நாணயங்கள் அவரின் அருகில்தான் இருக்கின்றன. மேலும், ஒரு அறையின் உரிமையாளர் தான் வழக்கமாக சுவற்றின் அருகில் அல்லது உள்ளே தள்ளி அமர்ந்திருப்பார். உதாரணத்திற்கு, மருத்துவரிடம் போகும்போது, மருத்துவர் உள்ளே தள்ளி அமர்ந்திருக்கிறார். நோயாளி உள்ளே நுழைந்தவுடன் இருக்கும் இடத்தில்தான் அமர்கிறார்.

இ. மூன்றாம் குழுவினர் அந்த தாடி வைத்த மனிதர் கையை தன் பக்கம் காட்டவில்லை, மாறாக, குனிந்து அமர்ந்திருப்பவரின் பக்கம்தான் காட்டி, 'இவரா?' என்று கேட்பதாக இருக்கிறது என்று சொல்கின்றனர்.

உங்களைப் பொறுத்தவரையில் இந்த ஓவியத்தில் மத்தேயு யார்?

நான் என்ன நினைக்கிறேன் என்றால், இந்த ஓவியத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் இயேசு தன்னை அழைப்பது போலவே நினைக்க வேண்டும் என்று காரவாஜோ எண்ணியதால், மத்தேயு என்னும் மர்ம முடிச்சை அவிழ்க்காமலே விடுகின்றார்.



1 comment:

  1. காரவாஜோ ஓவியம்...என்னைப்போன்றவர்களுக்குப் புதிது...இந்த ஓவியத்தை அவரவர் கற்பனைக்கே விட்டு விட வேண்டும் போல் தெரிகிறது.ஓவியத்தின் அத்தனை கதாபாத்திரங்களையும் சுற்றி வந்து ' மத்தேயு' யார் ...இவரா இல்லை அவரா எனக் குழம்பி நிற்கையில் தந்தையின் கற்பனை ஓட்டம் சரி என்றே தோன்றுகிறது. ஆம்! இயேசு அழைப்பது என்னைத்தான் என நினைத்தால்தானே நானும் அவரை நோக்கி நெருங்க முடியும்?! அழகான கற்பனை!!! ( இத்தனை அழகான பின்னனியுள்ள விஷயத்தை நேற்று எப்படித் தவறாகப் புரிந்து கொண்டேன்?? அறியாமை பலவிதம்!)

    ReplyDelete