Wednesday, July 22, 2015

16 வயதினிலே

நம்ம ஜோதிகா நடிச்ச '36 வயதினிலே' படம் பார்த்தாச்சான்னு எல்லாரும் கேட்கிறாங்க. 'நமக்குன்னு ஒருத்தர் இந்த உலகத்துல இருக்கார் அப்படின்னு நமக்குத் தெரிஞ்சா நம்மால் எதுவும் சாதிக்க முடியும்' என்பதுதான் இந்தப் படத்தின் பஞ்ச் லைன். எதற்காக '16 வயதினிலே' படத்துல இந்த பஞ்ச் லைனை வைக்காமல், '36 வயதினிலே'யில் வைத்திருக்கிறார்கள்.

'எனக்குனு யாரு இருக்கா?' என்ற இந்தக் கேள்வி நமக்கு 16 வயதினிலே வருவதை விட, 36 வயதினிலும், 56 வயதினிலும்தான் வருகின்றது.

நம் வாழ்வின் வளர்ச்சி அல்லது வளர்பிறை முடிந்து, தேய்பிறை தொடங்கும் வயதுதான் 36. மேலே ஏறிச்சென்ற நாம் கீழே இறங்கத் தொடங்கும் நேரம் அது. நாம் திரும்பி இறங்கி வர, வர நாம் ஏறிச்சென்ற பாதையும், அதில் மற்றவர்கள் ஏறிச்செல்வதும் தெரிகிறது. நம்மை இறந்தகாலம் பற்றிக்கொள்கிறது. அது நோக்கி நம் மனம் ஓட ஆரம்பிக்கிறது. 'நான் இன்னும் இளமைதான்!' என்று நாம் 'பொய்' சொல்லத் தொடங்குகிறோம். விழுந்த முடிகளை எப்படியாவது ஒட்ட வைக்கலாமா என நினைக்கிறோம். நரைமுடியை கறுப்பாக்கவும், கன்னத்தில் விழும் கோடுகளை ரோஸ்பவுடர் கொண்டும் அடைக்க முயற்சிக்கிறோம். கண்களில் கருவளையம், கைகளில் தளர்ச்சி, தோலில் சுருக்கம் என தேய்பிறையை நம் எல்லா உறுப்புகளும் நினைவுபடுத்த ஆரம்பிக்கின்றன. இதுவரை நம்முடன் ஓடிவந்த உடல், நம்மை பின்னுக்கு இழுக்கிறது. நம் மூக்கின்மேல் மூக்குக் கண்ணாடி அமர்ந்து கொள்கிறது. நம் நண்பர்களோடு நின்று ஆண்டாள் கோயில் தேருக்கு வடம் பிடித்த கை, இன்று மினரல் வாட்டர் பாட்டிலைக் கூட திறக்க முடியாமல் வலுவிழந்து நிற்கிறது.

ஆக, உடலும் நம்மோடு இல்லை. உணர்வுகளும் நம்மோடு இல்லை. ஆற்றலும் நம்மோடு இல்லை. இந்த நேரத்தில் என்னோடு யார் இருக்கிறார் என்ற கேள்விதான் எழுகிறது. நம் மனம் இந்தக் கேள்விக்கு விடையாக நம் உற்றவரையோ, நண்பரையோ வைத்துக்கொள்ளத் துடிக்கிறது.

என்ன ஃபாதர் 16 வயதினிலேனு தலைப்பு போட்டுட்டு, 36 வயதினில் இருக்கிறீர்கள் எனக் கேட்கிறீர்களா?

கடந்த ஞாயிறன்று 16 வயது இளவல் ஒருவர் அதிகமான போதை மருந்து உட்கொண்டதால் இறந்து போனார்.

இன்று 17 வயது இளவல் ஒருவர் தன் வயதையொத்த மற்றவர் தன்னைவிட அழகாயிருந்ததால் பொறாமை கொண்டு, அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டார்.

நேற்று பதின்மரின் (13 வயதுமுதல் 19 வயதுவரை) செக்ஸ் வாழ்க்கை பற்றிய அமெரிக்க ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் பதின் பருவத்தினர் செக்ஸ் உறவு வைத்துக்கொள்வது 40 சதவிகிதம் குறைந்துவிட்டது எனச் சொல்கிற ஆய்வு, பசங்க திருந்திட்டாங்களா? அல்லது வீரியம் இழந்துவிட்டார்களா? என்ற கேள்வியோடு முடிகிறது.

பைபிளிலும் நிறைய 16 வயதினிலே நிகழ்வுகள் இருக்கின்றன.

16 வயதினில்தான் யோசேப்பு எகிப்தின் ஆளுநராகின்றார்.

யோசுவா படைத்தலைவன் ஆகின்றார்.

சாம்சன் சிங்கத்தின் வாயைப் பிளக்கின்றார்.

ரூத்து தன் மாமியாரைப் பின்பற்றிச் செல்கின்றார்.

தாவீது அரசனாகின்றார்.

சாலமோன் கடவுளிடம் ஞானம் கேட்கின்றார்.
மரியா இறைத்திட்டத்திற்கு ஆம் சொல்கிறார்.

திருமுழுக்கு யோவான் 'மனந்திரும்புங்கள்' என்ற நற்செய்தியை அறிவிக்கிறார்.

இயேசு எருசலேம் ஆலயத்தில் விவாதம் செய்கின்றார்.

லூக்கா மருத்துவராகிறார்.

சலோமி நடனமாடி ஏரோதை மகிழ்விக்கிறாள்.

இவர்கள் 16 வயதினிலேயே சாதிக்க வேண்டியதைச் சாதித்துவிட்டார்கள்.

இவர்கள் 36 வயதினில் எப்படி இருந்தார்கள் என்பது பற்றி நமக்குத் தெரியவில்லை. சிலர் வழிமாறினர். சிலர் 36வயதையே எட்டவில்லை.

இன்று பதின்மர் (teenagers) மற்றும் வளரிளம்பருவத்தினர் (adolescents) மிக வேகமாக வளர்கின்றனர். இந்த வளர்ச்சிக்கு 36 வயதினராலும், 56 வயதினராலும் ஈடுகொடுக்க முடிவதில்லை.

இந்த வளர்ச்சி சமுதாயத்தின் வீக்கமாக இருந்துவிட்டால் அது அவர்களுக்கும், சமூகத்திற்கும் ஆபத்தே.

16 வயதினில் வாழ்வு இனித்தால், 36 வயதினிலும், 56 வயதினிலும் இனிக்கும்!


1 comment:

  1. அழகான பதிவு...ஒரு 36 வயதின் ஏக்கங்களையும், 56 வயதின் சோகங்களையும் ஒரு வாழ்ந்து முடித்தவருக்குரிய அனுபவத்தோடு அழகாக வெளிக் கொணர்ந்திருக்கிறார் தந்தை.இந்த நேரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு 'உற்றவர்' கிடைத்தால் அதன் சுகமே தனிதான்.விவிலியத்தில் 16 வயதில் சாதித்தவர்களின் பட்டியல் தங்களின் பெரு முயற்சி.பாராட்டுக்கள்!! 16 வயதினிலே வாழ்வு இனித்தால், 36 வயதிலும், 56 வயதிலும் இனிக்கும்.யதார்த்தம்.ஆகவே நம் கண் பார்வையில் 16 வயதினில் இருக்கும் யாருக்கேனும் ஒரு பாதை அமைத்துக் கொடுக்கலாமே!!

    ReplyDelete