Sunday, July 26, 2015

சார்புநிலை

அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப்போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.
(யோவான் 6:15)

இன்றைய திருப்பலியில் இந்த நற்செய்தியை வாசித்து மறையுரை வைத்து முடித்தாலும் இந்த இறுதி வாக்கியம் என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

'பசி' என்பது ஒரு எதிர்மறை நிகழ்வு என்பதைச் சொல்லி, அந்த எதிர்மறை நிகழ்வை இயேசு எப்படி எதிர்கொண்டார் என்று மறையுரை நிகழ்த்தினேன்.

ஆனால், இந்த இறுதி வாக்கியம் நான் மறையுரையில் சொல்லிய அனைத்தையும் கேள்விக்குட்படுத்துகிறது. எப்படி?

பசி (hunger) என்பது எப்படி ஒரு எதிர்மறை நிகழ்வோ, அப்படித்தான் 'மக்கள் இயேசுவை அரசராக்க நினைப்பதும்' (dependence) ஒரு எதிர்மறை நிகழ்வு. ஆனால் முதல் எதிர்மறை நிகழ்வை நின்று, சமாளித்த இயேசு ஏன் இரண்டாவது எதிர்மறை நிகழ்வைக் கண்டவுடன் ஓடுகிறார்?

சிலர் சொல்வார்கள். இயேசு தன்னை அரசனாக்க நினைத்தது கிடையாது. அவர் ரொம்ப தாழ்ச்சியானவர். அவருக்கு இந்த மணிமகுடம் எல்லாம் பிடிக்காது என்று.

ஆனால், பின் சிலுவையில் 'நீர் அரசுரிமையோடு வரும்போது' என்று சொன்ன கள்வனின் வார்த்தைகளை மட்டும் ஏன் ஏற்றுக்கொண்டார்? அப்போது சிலுவையிலிருந்து தப்பி ஓட முடியாது என்பதாலா?

இயேசு ஒரு கடவுள் என்பதை ஓரங்கட்டிவிட்டு மேற்காணும் இறைவாக்குப் பகுதியைப் பார்ப்போம்.

நம்ம ஊர்ல திடீர்னு எல்லாரும் கூடி வந்து நம்மை அரசராக்க அல்லது ஒரு பஞ்சாயத்து பிரசிடென்ட் ஆக்க, அல்லது மாநகர மேயர் ஆக்க, அல்லது ஒரு எம்எல்ஏ, எம்பி ஆக்க நினைக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். நாம என்ன செய்வோம்? துணிச்சல்காரர்கள் என்றால் 'சரி' என்போம். பயமாக இருந்தது என்றால் 'இல்லை' என்போம். ஆனால், அதற்காக வீட்டை விட்டு ஓடுவோமா என்ன? ஓடினால் நம்மை வந்து பிடித்துவிடமாட்டார்களா என்ன?

நான் ஒரு பிரசிடென்ட் அல்லது மேயர் ஆவதற்கு என்ன தடையாக இருக்கிறது? பயம்!

நான் எப்படி சமாளிப்பேன்? என்ற பயம்.

மற்றவர்களின் தன்மேல் சார்ந்திருக்கிறார்கள் என்பது இயேசுவுக்கு பயமாக மாறிவிடுகிறது.

ஆக, ஒருவரின் பசியைக் கூட நாம் உணவளித்து தீர்த்துவிடலாம். ஆனால், அவர் என்மேல் சார்ந்திருப்பதை என்னால் சமாளிக்க முடியாது.

சின்ன உதாரணம். நான் பங்கு அலுவலகத்தில் அமர்ந்திருக்கிறேன். 20 வயது இளம்பெண் ஒருவர் வருகிறார். ரொம்ப பசிக்கிறது என்கிறார். நான் உடனடியாக ஒரு ப்ளேட் பாஸ்தா அல்லது ஒரு பீட்சா வாங்கிக் கொடுத்து அவரின் பசி தீர்த்துவிடுகிறேன். அடுத்த நாளும் வருகிறார். 'உங்களோடு பேசணும்' என்கிறார். பேசுகிறார். பின் தொலைபேசி எண் வாங்குகிறார். இரண்டு நாட்கள் கழித்து அவர் என்னிடம் வந்து, 'அதெப்படி எனக்கு பசின்னு சொன்னவுடன் சாப்பாடு வாங்கிக் கொடுத்துட்டீங்க! நீங்க ரொம்ப க்ரேட்' அப்படி, இப்படின்னு சொல்றார். பின் மறுபடியும் இரண்டு நாள் கழித்து வந்து, 'நான் ஃபோன் பண்ணும்போது ஏன் எடுக்கல! நான் தூங்கவே இல்லை தெரியுமா' என்று சொல்ல ஆரம்பிக்கிறார். எனக்கு எப்படி இருக்கும்? எங்கேயாவது ஓடிப்போய் ஒளிந்து கொள்ளணும்போல இருக்கும்.

அவரின் பசிக்கு என்னால் உணவளிக்க முடிகிறது. ஆனால், அவர் என்னைச் சார்ந்திருக்க நினைக்கிறார் என்பது எனக்கு பயத்தைத் தருகிறது. ஒருவர் என்னைச் சார்ந்திருக்கிறார் என்றால், நான் அவர்மேல் பொறுப்புணர்வு (responsibility) காட்டுவது அவசியம். ஆக, சார்ந்திருத்தலும், பொறுப்புணர்வும் கைகோர்த்தே செல்கின்றது.

இயேசு பொறுப்புணர்வு இல்லாமல் தப்பித்து ஓடுகிறார். இப்படித்தான் நான் சொல்வேன்.

ஆனால், இதைவிட பெரிய பொறுப்புணர்வு அவருக்கு இருந்ததால், இந்த அப்பம் கொடுக்கும் சாதாரண சார்புநிலையை அவர் தள்ளிவிடுகிறார்.

ஒருசிலர் குடும்பங்களில் பொறுப்பே இல்லாமல் இருக்கிறார்கள் அல்லது சில அருட்பணியாளர்கள் தங்கள் பணியில் பொறுப்பே இல்லாமல் இருக்கிறார்கள் என்று சிலர் புலம்புவார்கள்.

இவர்களுக்கு தங்கள் பொறுப்பைவிட வேறு பொறுப்பு வந்துவிட்டது என்றே அர்த்தம். ஆகையால் ரொம்ப கவனம்.

நான் அருட்பணிநிலைக்குத் தயாரித்துக்கொண்டிருந்தபோது இப்படி தேவையற்ற பொறுப்புணர்வுகளை நானாக ஏற்றுக்கொண்டு, பின் ரொம்பவே அவதிப்பட்டேன். இப்படியாக அடுத்தவர்கள் என்னைச் சார்ந்திருப்பதற்கு நானே இடத்தைக் கொடுத்துவிட்டு, பின் பொறுப்பு என வந்தபோது நான் ஓடி ஒளிந்தேன். பொய் சொன்னேன். என் வேலைகளை ஒழுங்காகச் செய்யவில்லை.

இன்று மேற்காணும் இறைவாக்கு என் அருட்பணி வாழ்வுக்கு ஒரு நல்ல பாடம் என்றே உணர்கிறேன்.

ஒருவர் என்னைச் சார்ந்திருக்க விழைகிறார் எனத் தெரிய ஆரம்பித்தால், உடனே தனிமையான இடத்திற்கு ஓடிவிடு. ஏனெனில், நீ சார்ந்திருக்கும் கடவுள் அங்கே காத்திருக்கிறார் என்பதுதான் இயேசு வைக்கும் சவாலாக இருக்கிறது!

உடனே மற்றொரு சோதனை வரும். என் ஃப்ரண்ட் ஃபாதருக்கு நிறைய கேர்ள்ஃபிரண்ட்ஸ். அவனெல்லாம் நல்லாதானே இருக்கான். நல்லாதான் பூசை வைக்கிறார். நல்லாதான் செபம் செய்றார். ஆக, நானும் அவனைப்போல இருந்தால் என்ன! உறவுகள்னா பிரச்சினை வரத்தான் செய்யும். எல்லாத்தையும் சமாளிக்கணும் என்று அவன் அட்வைசும் கொடுக்கிறான்.

என்னைச் சார்ந்து நிற்பவர்களை பொறுப்புணர்வோடு ஏற்றுக்கொண்டு, 'என்னை அரசனாக்குங்கள்!' என்று சொல்வதா, அல்லது அவர்கள் என்னைச் சார்ந்து நிற்க வருகிறார்கள் என்று பார்த்தவுடன் ஓடி ஒளிவதா? - இதுதான் கேள்விக்குறி.

இன்றைய நற்செய்தி சொல்வது என்ன?

எல்லா எதிர்மறை நிகழ்வுகளையும் நேருக்கு நேர் நின்று தீர்க்க வேண்டும் என்பது சால்பன்று. சில நேரங்களில் நாம் ஓடி ஒளிந்து கொள்ளத்தான் வேண்டும். நாம் ஓடுவதும் சில நேரங்களில் நமக்கு நல்ல தீர்வாக அமையும்.

1 comment:

  1. இன்றைய வலைப்பதிவு ரொம்ப யோசிக்க வைக்கிறது.இப்படிப்பட்ட சூழ்நிலைகள் அருட்பணியாளரகளுக்கு மட்டுமல்ல, யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.இதை எல்லோருக்கும் பொதுவானதாகவும் பார்க்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு சூழ்நிலை....அவரவருக்கு மட்டுமே தெரிந்த சூழ்நிலை.'Priority' எது அல்லது யார் என்பதைக் கணிக்க வேண்டியவர்கள் சம்பந்தப்பட்டவர்களே! களத்தில் குதித்துப் போராடுவதா அல்லது நமக்கு நல்ல தீர்வு வேண்டி ஓடி ஒளிந்து கொள்வதா...எது நல்லது? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!!!

    ReplyDelete