Thursday, July 23, 2015

மதலேன் மரியாள்

நேற்று மகதலா நாட்டு மரியாளின் (மதலேன் மரியம்மாளின்) திருநாள்.

நேற்றைய திருப்பலியில் மறையுரையாற்றிய என் பங்குத்தந்தை, 'ஒரு பாவி! ஒரு விபச்சாரியின் திருநாள்...!' என்று தொடங்கினார். என்னையும், என் பங்கு மக்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்தது இந்த வாக்கியம்.

'மலேசியன் ஏர்லைன்ஸ் விமானமும், காலேஜ்ல படிக்கிற பொண்ணும் ஒன்னு' என்று சொல்வார்கள். ஏன்னா, இந்;த இரண்டும் காணாமல் போனாலும் கண்டவர்கள் கண்டமாதிரி பேசுவார்கள்.

ஒவ்வொருத்தரும், ஒவ்வொரு மாதிரி பேசும் ஒரு நபர்தான் நம்ம மதலேன் மரியம்மாள்!

இந்த மதலேன் மரியம்மாள் யார்?

'மரியா' என்பது எபிரேய மக்கள் நடுவில் வழங்கப்பட்ட பொதுவான பெயர். நம்ம ஊர் 'ராஜா' மாதிரி. மோசேயின் சகோதரி 'மிரியம்' என்ற பெயர்தான் 'மரியா' என வழங்கப்பட்டது.

இரண்டாம் ஏற்பாட்டில் மொத்தம் 5 மரியாக்கள் உள்ளனர்:

1. இயேசுவின் தாய் மரியாள் (மத் 2:11) அல்லது யோசேப்பின் மனைவி மரியாள் (மத் 1:20)

2. யாக்கோபு மற்றும் யோசேயின் தாய் மரியாள் (மத் 27:56, மாற்கு 15:40)

3. இலாசரின் சகோதரி அல்லது மார்த்தாவின் சகோதரி மரியாள் (யோவா 11:1)

4. கிளயோப்பாவின் மனைவி மரியாள் (யோவா 19:25)

5. மகதலா நாட்டு மரியாள் (யோவா 20:1) - இவரை 'மரியா மதலேன்' என லூக்காவும் (24:10), 'மகதலா மரியாள்' என மாற்கும் (16:9) அழைக்கின்றனர். மேலும் இவரிடமிருந்து ஏழு பேய்கள் ஓட்டப்பட்டது என்ற புதிய தகவலையும் தருகின்றார் மாற்கு.

மேலும், விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் என்ற ஒருவரைப் பற்றி யோவான் தன் நற்செய்தியில் (8:1-11) குறிப்பிடுகின்றார். இந்தப் பகுதியை விவிலியத்தில் பார்த்தால், முன்னும், பின்னும் அடைப்புக்குறி இடப்பட்டிருக்கும். எதற்காக இந்த அடைப்புக்குறி? இந்த இறைவாக்குப் பகுதி பல மூலப் பிரதிகளில் காணப்படவில்லை. ஆகவே, இதை யாராவது பின்னால் சேர்த்திருக்கலாம். அல்லது முன்னாலேயே அழித்திருக்கலாம்.

இந்ந ஆறு பேரில் யார்தான் மதலேன் மரியாள்?

ஐந்தாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நபரே மதலேன் மரியாள். இவர்தான் விபச்சாரத்தில் பிடிபட்டவர் என்பதற்கு சான்றுகள் இல்லை. இரண்டு பேரும் ஒன்றுதூன் என்று சொல்வது, 'இராத்திரியும் விளக்குத்திரியும் ஒன்றுதான்' என்று சொல்வது போல இருக்கும்.

சர்ச்சைகளின் பெண்

சர்ச்சைகள் மனிதர்களை மட்டும் ஆட்டுவிப்பவை அல்ல. அவைகள் கடவுள்களையும் ஆட்டிப்படைக்கின்றன.

இரண்டாம் ஏற்பாட்டு நூலில் வரும் இந்த கேரக்டர் வரலாற்றில் மிக அதிகமான ஓவியங்களிலும், நூல்களிலும், நாடகங்களிலும், பின் திரையுலகிலும் இடம்பெற்றுள்ளார்.

நிக்கோஸ் கசன்ட்சாகிஸ் அவர்கள் எழுதிய 'கடைசி சோதனை' (The Last Temptation) அல்லது 'கிறிஸ்துவின் கடைசி சோதனை' (1960 ஆங்கிலத்தில்). இதுவே 1988ல் சினிமாகவும் வந்தது. இந்தப் புதினத்தின் படி சிலுவையில் அறையுண்ட இயேசுவுக்கு ஒரு இறுதி சோதனை வருகிறது. என்ன சோதனை? எதற்காக இப்படி மனுக்குலத்திற்காக துன்பப்பட வேண்டும்? நான் ஏன் மற்ற மனிதர்களைப் போல சாதாரணமாக இருக்கக் கூடாது? சிலுவையில் தன் ஆணிகளைக் களைந்துவிட்டு இறங்கி வருகின்றார். மதலேன் மரியாளைத் திருமணம் செய்கின்றார். குழந்தைகள் பெற்றுக்கொள்கின்றார்.

டான் பிரவுன் எழுதிய 'டா வின்சியின் குறியீடு' (The Da Vinci Code) (2003). இது திரைப்படமாக 2006ல் வெளிவந்தது. இந்தப் புதினத்தின்படி இயேசுவின் இரத்த உறவு இன்னும் நீண்டு கொண்டிருக்கிறது. இந்த உறவு மதலேன் மரியாள் வழியாக வந்தது. மதலேன் மரியாளும் இயேசுவின் இறுதி இராவுணவில் இருந்தார். இதை லெயோனார்டோ டா வின்சி குறிப்பாக தன் 'இறுதி இராவுணவு' ஓவியத்தில் உணர்த்தியிருக்கின்றார்.

இந்த இரண்டு புதினங்கள் வரலாற்று உண்மைகளைக் கொண்டிருக்கின்றனவா, அல்லது இதை எழுதிய ஆசிரியர்களின் கற்பனையா என்பது நீங்களும், நானும் எந்த இடத்தில் இருந்து இதை வாசிக்கிறோம் என்பதைப் பொறுத்தது.

மேலும், 'ஏற்றுக்கொள்ளப்படாத எழுத்துக்கள்' என்று சொல்லப்படும் நிறைய பிரதிகளில், குறிப்பாக 'தோமையாரின் நற்செய்தி,' 'மரிய மதலேனாளின் நற்செய்தி' நூல்களில் 'இயேசு மரிய மதலேனாளை அடிக்கடி உதட்டில் முத்தமிட்டார்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதைப் புரிந்து கொள்வதற்குத் தடையாக பெரிய கலாச்சாரத் தூரம் இருக்கின்றது. அதாவது, அன்பு அல்லது நட்பு எப்படி அந்த நாட்களில் பரிமாறப்பட்டது என்பதை நாம் இன்று பயன்படுத்தும் அடையாளங்களை வைத்துப் புரிந்து கொள்ள முடியாது.

அன்பே மதலேன் மரியாள்!

நேற்றைய வாசகங்கள் அனைத்தும் அன்பை மையமாகக் கொண்டிருந்தன. மணத்துறவு என்பதும், கன்னிமையை இறைவனுக்கு அர்ப்பணிப்பது என்பதும் யூத சிந்தனைக்கு எட்டாதவை. ஆண்-பெண் பேதம் உருவாகக் காரணம் கிரேக்க தத்துவம். மனிதனை பொருள் மற்றும் ஆவி என இரண்டாகப் பிரித்து, பொருள் சார்ந்த அனைத்தும் தீயது என கற்பித்தது கிரேக்கத் தத்துவம். ஆக, உடல் மற்றும் அதன் உணர்ச்சிகள், சுரப்பிகள் அனைத்தும் தீயவை என்ற சிந்தனை, இந்த கிரேக்கர்களைப் பின்பற்றிய அகுஸ்தினார் மற்றும் அக்வினாஸின் வழியாக இன்றுவரை தொடர்கிறது. ஆனால் அன்று இருந்த 'ஐரேனியு' என்ற எழுத்தாளர் சற்று வித்தியாசமாக, 'மனிதத்தில்தான் இறைமையின் நிறைவு' இருக்கிறது என மனிதத்தையும், மனித உடலையும், அதன் உணர்ச்சிகளையும் மேலான நிலைக்கு உயர்த்தினார். இன்றும் திருத்தந்தை பிரான்சிஸ் தன் புதிய சுற்றுமடல் வழியாக, கிரேக்க சிந்தனை ஏற்படுத்திய தாக்கம், இயற்கையையும் சீரழித்துவிட்டது என்று சொல்கின்றார்.

அன்பு செய்வது தவறு என்று எந்தக் கடவுளும் சொல்வதில்லை. அப்படிச் சொன்னால் அவர் எப்படிக் கடவுளாக இருக்க முடியும்?

முதல் ஏற்பாட்டு மற்றும் இரண்டாம் ஏற்பாட்டு மீட்பு நிகழ்வுகள், மணத்துறவு மேற்கொண்ட ஆண்களிடம் அல்லது தன் கன்னிமையை கடவுளுக்கு அர்ப்பணம் செய்த பெண்களிடம் தொடங்கவில்லை. மாறாக, சாதாரண குடும்ப உறவுகளில் தொடங்குகிறது. ஆக, ஆண்-பெண் உறவும், அதன் வழி உருவாகும் குடும்பமும் தவறானது அல்ல.

இன்று, ஆண்-பெண் அன்பு என்பது மருவி, ஆண்-ஆண், பெண்-பெண், ஆண்-வளர்ப்பு பிராணி, பெண்-வளர்ப்பு பிராணி, பெரியவர்-குழந்தை என்று யாரும், யாரையும் அன்பு செய்யலாம், திருமணம் முடிக்கலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டோம். இந்த நேரத்தில் இயேசுவும், மதலேன் மரியம்மாளும் திருமண உறவில் இணைந்திருந்தார்களா, அல்லது நண்பர்களா, அல்லது நலவிரும்பிகளா என்று கேட்பது பொருந்தாததாகவே இருக்கிறது.

ஆனால், பெண் என்பவள் தீட்டு அல்லது தகாத பொருள் அல்ல. அப்படி நினைப்பது அவரைப் படைத்த கடவுளையே தீட்டு என்று சொல்வது போல இருக்கும்.

மரியாள் மதலேனம்மாள் ... ... ...

எல்லாப் பெண்களைப் போலவே ... ... ...

என்றும் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறார்! இருப்பார்!

புனித மரியாள் மதலேனம்மாளே!

எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!


1 comment:

  1. " அன்பே மதலேன் மரியாள்"... இந்த ஒரு வரியைத்தவிர வேறு எதையும் பற்றி புரிந்து கொள்ளவோ, கருத்து சொல்லவோ என்னிடம் சரக்கு இல்லை என்று என் உள் மனம் சொல்கிறது.கண்டிப்பாக இத்தனை விமரிசனங்களையும் தாங்கி நிற்கும் அந்த மரியாள் மதலேனம்மாளைப் பார்த்து நானும் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்...' எங்களுக்காக, உங்களைப்பற்றி இத்தனை விமரிசனங்கள் செய்யும் மக்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!' என்பது தான் அது.

    ReplyDelete