Sunday, August 31, 2014

இவர் யோசேப்பின் மகன் அல்லவா?

அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, 'இவர் யோசேப்பின் மகன் அல்லவா?' எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர். (லூக்கா 4:22)

லூக்கா நற்செய்தியின் படி இயேசு தன் பணிவாழ்வை தான் வளர்ந்த ஊராகிய நாசரேத்தில் உள்ள ஒரு தொழுகைக் கூடத்தில் தொடங்குகிறார். தொழுகைக் கூடத்தில் அவரின் அருள்மொழிகளைக் கேட்டு அங்குக் குழுமியிருந்த மக்கள் சொன்ன வார்த்தைகளே 'இவர் யோசேப்பின் மகன் அல்லவா?'

இதே நிகழ்வு மத்தேயு (13:53-58) மற்றும் மாற்கு நற்செய்திகளும் (6:1-6) இருந்தாலும் ஒவ்வொன்றும் மற்றதிலிருந்து வித்தியாசமாக இருக்கின்றது.

மத்தேயு நற்செய்தியில் இதே நிகழ்வு இயேசுவின் பணிவாழ்வின் நடுவில் இருக்கின்றது. அங்கே மக்களின் பேச்சும் வியப்பும் வித்தியாசமாக இருக்கின்றது:

'இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர் தானே? யாக்கேபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர்கள் அல்லவா?

மாற்கு நற்செய்தியில் மக்களின் கேள்வி நேரடியாகவே இருக்கின்றது: 'இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர்கள் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?' என்றார்கள்.

மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்தியில் வரும் 'சகோதர' 'சகோதரிகள்' கத்தோலிக்கரல்லாத கிறித்தவர்களுக்கு நெருடலாக இருக்கும். இதை வைத்துத்தான் அன்னை மரியாள் 'எப்போதும் கன்னி' என்ற கொள்கைளை மறுக்கின்றனர். கிரேக்க மொழியில் உடன்பிறந்தவர்களை மட்டுமல்லாமல், மாமன், மச்சானின் குழந்தைகளையும் சகோதர, சகோதரிகள் என்றே அழைப்பர். இயேசுவுக்கு உண்;மையிலேயே உடன்பிறப்புகள் இருந்திருக்கலாம் என்பதும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதனால் இயேசுவுக்கு எந்த விதத்திலும் மகிமை குறையப்போவதில்லையே. 'பெண்ணிடம் பிறந்தவராக' மெசியா வருவார் என்று இருக்கிறதே தவிர, பெண்ணிடம் பிறந்த ஒற்றைக் குழந்தையாக இருப்பார் என்று இறைவாக்குகள் இல்லையே!

லூக்கா நற்செய்தியில் மரியாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. யோசேப்பின் பெயர் மட்டுமே உள்ளது.

'இன்னாருடைய மகன் இப்படித்தான் இருக்க வேண்டும்!' என்ற முற்சார்பு எண்ணத்தின் எதிரொலியே இந்தக் கேள்வி.

இவர்களின் கேள்விக்குக் காரணங்கள் மூன்று:

அ. அவர்களின் சிம்பிள் லாஜிக். அவர்களுடைய பேச்சில் உள்ள லாஜிக் இதுதான்: மாமரத்தில் இருந்து மாமரம் தான் வரும். தென்னை மரத்தில் இருந்து தேங்காய் தான் வரும்.

ஆ. பழகப் பழக பாலும் புளிக்கும். ஆங்கிலத்தில் 'familiarity breeds contempt' என்பார்கள். ஒரு பொருள் அல்லது நபர் நம்மோடு நெருக்கமாக இருக்கும் பட்சத்தில் அவரின் அருமை நமக்குத் தெரிவதில்லை. எங்கு பார்த்தாலும் மண் இருக்கிறது. அதை நாம் அலமாரியில் பூட்டி வைப்பதில்லை. ஆனால் பொன் எங்கு பார்த்தாலும் இருப்பதில்லை. அதைப் பூட்டி வைக்கிறோம். இப்போ இருக்கிற விலைவாசியில இன்னும் கொஞ்ச நாளில் மண்ணையும் பூட்டி வைக்க வேண்டி வரும்.

இ. ஒருவரின் அடையாளம் அவரின் பின்புலம் என மதிப்பிடுவது. இது ஏறக்குறைய 'அ' வைப் போல. ஒருவரின் பாலினம், நிறம், மொழி, நாடு, இனம் இவற்றால் ஒருவரின் இயல்பு கூடுவதோ, குறைவதோ இல்லை. ஆனால் வெளியே தெரியும் இந்த அடையாளங்களை ஒருவரின் இயல்போடு சேர்த்துப் பார்ப்பது.

மனிதர்களுக்கு அதிகம் வலி தருவது இந்த முற்சார்பு எண்ணம் தான். முற்சார்பு எண்ணம் நம் கண்களுக்கு முன் திரையிட்டு விடுகிறது. அந்தத் திரையை விலக்கி நம்மால் இறுதிவரை பார்க்க முடியாமலேயே போய்விடுகிறது.

இன்றைய நாளில் அருட்பணி நிலையில் இருப்பவர்கள் புதிய பணித்தளங்களுக்குச் செல்லும் போது அவர்கள் எதிர்கொள்ளும் பெரிய சவால் இந்த முற்சார்பு எண்ணம் தான். புதிய அருள்பணியாளர் பணியிடத்திற்குப் போகுமுன் அவரைப் பற்றிய எல்லா விஷயங்களும் அந்த ஊருக்குச் சென்றுவிடும்: அவரின் குடும்ப பின்புலம், சாதி, படிப்பு, நண்பர்கள் வட்டாரம், அவரின் பலவீனங்கள். அவரின் உள்ளாடை அளவைத் தவிர ஏறக்குறைய எல்லா விஷயங்களும் மக்களின் உரையாடல் பொருளாக வந்து விடும்.

இந்தத் திரையை அவர் உடைக்க வேண்டுமானால் முதலில் தன் பின்புலத்தை முழுமையாக அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆமாம் நான் இப்படித்தான்! நான் இந்த சாதிதான்! எனக்கு இந்தப் பலவீனங்கள் இருக்கின்றன தான்! ஆனால் அவைகள் மட்டும் நான் கிடையாது. அவைகளையும் தாண்டி நான் வித்தியாசமானவன் என்ற நம்பிக்கை நமக்கு வரவேண்டும்.

இரண்டாவதாக, நம் முற்சார்பு எண்ணங்களைக் களைய வேண்டும். 'நான் யோசேப்பின் மகன் தான்!' நீ யார்னு தெரியாதா? 'நீ அருளப்பன் மகன் தானே!' 'நீ கோவிந்தன் மகன் தானே!' என்று எதிர்கேள்வி கேட்டால் இரண்டு பார்வையற்றவர்கள் வானவில்லின் வர்ணங்களை வருணிப்பது போல இருக்கும்.

முற்சார்பு எண்ணத்தை மஞ்சள் காமாலை நோய்க்கு ஒப்பிடுவார்கள் - பார்ப்பதெல்லாம் மஞ்சளாய்த் தெரியும்.

இன்னைக்கு புதுசா நாம ஒருத்தரைப் பற்றிக் கேள்விப்பட்டால் அல்லது பார்த்தால்,
'ஆமா...நீங்க...நீங்க தான!' என்று சொல்லிப் பார்க்கலாமே.


1 comment:

  1. முற்சார்பு எண்ணத்தின் விளைவாக வரும் வலியும் வேதனையும் என்னவென்று அதை அநுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.ஒருவரைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்து கொள்ளாமல்..இல்லை அரைகுறையாகத் தெரிந்து கொண்டு அவர்களைப்பற்றி 'சர்ட்டிஃபிகேட்' கொடுக்கிறோமே அதுதான் இந்த முற்சார்பு எண்ணத்திற்குக் காரணம்.நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் ஒரு காரியம் அடுத்தவர் வாழ்க்கையை இரணப்படுத்துவதுமட்டுமின்றி சிலசமயம் வாழ்க்கையே இல்லாமலும் செய்து விடுகிறது.இந்த சிக்கலிலிருந்து தப்பிக்க ஒரே வழி நாம் நம்மை நம் நிறை குறைகளுடன் ஏற்றுக்கொள்வதுதான்.நம் எதிராளிக்கு முன்னால் "ஆம் நான் இப்படித்தான்..அதனாலென்ன?" என்று கேட்கக்கூடிய துணிவோடு நாம் ஒரு திறந்த புத்தகமாக இருந்தால் நம்மீது யாரும் சேற்றை வாரி இறைக்கவோ,நாம் யாருக்கும் பலிகடாவாக வேண்டிய அவசியமோ இராது.தந்தையையும் இந்த முற்சார்பு எண்ணம் விட்டுவைக்கவில்லை என்று தெரிகிறது.நீங்களெல்லாம் 'காய்க்கும் மரங்கள்';கல்லடிபடத்தான் செய்வீர்கள்.ஆனாலும் உங்களுக்கு முன்பே ஒருவர் உங்களுக்கெல்லாம் உதாரணமாக வாழ்ந்து சென்றுள்ளார் என்ற எண்ணம் உங்களுக்கு ஆறுதல் தர்ட்டும்.பிறந்திருக்கும் புதிய மாதம் தங்களுக்கு அனைத்து ஆசீர்வாதங்களையும் வழங்கட்டும்...

    ReplyDelete