Friday, August 29, 2014

வினைதீர்ப்பான் விநாயகன்!

இன்று நம் இந்து சகோதர, சகோதரிகள் விநாயகர் சதூர்த்தி என்னும் திருநாளைக் கொண்டாடுகின்றனர். இன்றுதான் வேளாங்கண்ணி அன்னை திருத்தலத்தில் கொடியேற்றம். 'கொடியேற்றம்' என்பது நாம் இந்திய மண்ணிலிருந்து தழுவிக் கொண்ட ஒன்று. மேற்கத்திய நாடுகளில் ஆலயங்களில் கொடிமரம் அல்லது திருவிழாவில் கொடியேற்றம் என்பதே கிடையாது.

வெளிநாட்டு சாமிகளுக்கும், புனிதர்களுக்கும் நாம் நம் மண்ணில் விழா எடுக்கும் இந்நாளில் நம் மண்ணின் சாமியாம் விநாயகர் என்றால் யார் என்று சிந்திப்போம்.

விநாயகர். கணபதி, பிள்ளையார், ஆனைமுகத்தான், வேழமுகத்தான் (வேழம் என்றால் யானை), தும்பிக்கையான், வினைதீர்ப்பான் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் இவர் யார்?

சிவனின் சக்தியாம் பார்வதி குளித்துக் கொண்டிருந்தபோது தான் குளிப்பதை யாரும் பார்த்து விடக் கூடாது என்பதற்காக தான் குளிக்கப் பயன்படுத்திய சந்தனத்தில் ஒரு உருவம் செய்து அதை தோட்டத்திற்கு வெளியே காவலுக்கு நிறுத்துகிறார். வெளியே சென்று விட்டு வீடு திரும்புகிற சிவபெருமான் உள்நுழைய அனுமதி மறுக்கிறார் இந்த சந்தன உருவ மனிதர். சிவனுக்கு அவரை யாரென்று தெரியாது. அவருக்கும் சிவனை யாரென்று தெரியாது. இருவருக்கும் சண்டை. சண்டை இந்திரலோகம் வரை எட்டுகின்றது. சண்டையின் இறுதியில் சிவன் சந்தன உருவத்தின் தலையை வெட்டிவிடுகிறார். பதறி அடித்து வரும் பார்வதி நடந்ததைச் சொல்ல தலையைத் தேடி அலைகின்றனர். இறுதியில் ஒரு யானையின் தலையே கிடக்கக் காண்கின்றனர். சிவபெருமான் அதை சந்தன உருவத்தின் உடலில் பொருத்த ஆனைமுகத்தான் வருகின்றார். சிவபெருமானின் படையான 'கணா' என்று படைவீரர் குழாமை வென்றதால் 'கண ஈசன்', 'கணேசன்' என அழைக்கப்படுகிறார்.

விநாயகர் சதூர்த்தி திருவிழா 9 நாட்கள் அல்லது 11 நாட்கள் நடைபெறும் ஒரு நிகழ்வு. இன்று தங்கள் வீடுகளிலும், தெருக்களிலும் விநாயகரைச் சிலையாகச் செய்து அலங்கரிப்பார்கள். ஆனந்த சதூர்த்தி என்னும் இறுதி நாளில் அதை பவனியாக எடுத்துச் சென்று தண்ணீர் தடாகத்தில் கரைப்பர். இந்த விழா முதன்முதலில் உருவாகக் காரணமாக இருந்தவர் சத்ரபதி சிவாஜி என்பர். ஆங்கிலேயர்கள் நாட்டை ஆண்டுகொண்டிருந்தபோது லோக்மாணிய திலக் இந்த விழாவை சுதந்திரத்திற்கான ஒரு வேட்கையாக, கூடி வருதலாக உருவாக்குகின்றார்.

விநாயகர் ஒரு சைவக் கடவுள். சிவ பெருமானின் மூத்த மகன். முருகனின் அண்ணன்.

மனித உருவம், விலங்கின் தலை அல்லது விலங்கின் உருவம், மனிதத் தலை கொண்ட தெய்வங்கள் எகிப்திலும், கிரேக்க நாட்டிலும், அக்காடிய, உகாரித் சமூகங்களிலும் இருந்ததற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

இந்த விநாயகர் நமக்குச் சொல்லும் பாடங்கள் மூன்று:

அ. விநாயகர் தொடக்கத்தின் கடவுள். எந்தவொரு செயலையும் தொடங்கும் போது நாம் 'சிலுவைக் குறியிட்டு' தொடங்குவது போல, சைவ மதத்தைச் சார்ந்தவர்கள் 'உ' என்று குறியிட்டு தொடங்குவர். இதற்கு பிள்ளையார் சுழி என்றும் பெயர். 'உ' என்றால் 'உமையவள்' (அதாவது பார்வதி!) என்று பொருளாக இருக்கலாம் என நினைக்கிறேன். முருகனின் வேலில் 'அ' என்ற எழுத்து இருப்பதையும் நினைவில் கொள்வோம். நல்ல தொடக்கம் பாதி முடிவு என்பார்கள். வாழ்க்கையில் பல நேரங்களில் நமக்குத் தடையாக இருப்பது இதுதான். எங்கே, எப்போது தொடங்க வேண்டும் என்று நமக்குத் தெரிவதில்லை.

ஆ. பிரம்மச்சாரி. முருகனுக்கு இரண்டு மனைவியர் இருக்க, விநாயகர் 'பேச்சிலராக'வே இருந்து விட்டார். சில சமய ஆய்வாளர்கள் விநாயகருக்கு மூன்று மனைவியர் இருந்தனர் என்றும் சொல்கின்றனர்: புத்தி (அறிவு), சித்தி (ஆன்மீகம்) மற்றும் ரித்தி (வளமை). கலைவாணி சரஸ்வதியும், செல்வத்திருமகள் மகாலட்சுமியும் இவரின் மனைவியர் என்பதும் ஒருசிலரின் கருத்து. 'யாமிருக்கும் இடத்தில் செல்வம் கற்பக விருட்சமாய் வளரும்' என்று சொல்வதற்கும், தன் ஒரு தந்தத்தை எழுதுகோலாகப் பயன்படுத்துவதாலும் இந்தக் கருத்து வந்திருக்கலாம். பிரம்மச்சாரி என்றால் திருமணம் முடிக்காமல் இருப்பது என்பது பொருள் அல்ல. 'ஒருமுகப்பட்டவர்களே' பிரம்மச்சாரிகள். மனதை ஒருமுகப்படுத்தி ஆண்டு நடத்தும் ஒருவரே பிரம்மச்சாரி.

இ. நிறைவு. நிறைவான வயிறும், கட்டான உடலும் ஞானத்தின் அடையாளம் என்கின்றனர் சிலர். 'ஞானத்தைத் தேடுவதே நிறைவைக் கொடுக்கும்' என சீராக் நூலும் நமக்குச் சொல்கிறது. ஞானம் என்பது பயன்பாட்டு அறிவு. நாம் அறிவதை நம் சமுதாயம் வளரப் பயன்படுத்துவதே ஞானம்.

விநாயகரை கணிணி பயன்படுத்துவோரின் பாதுகாவலர் என்று சொல்லலாம். ஏன்? ஏன்னா இவரிடம் தான் 'மவுஸ்' இருக்கின்றதே.


1 comment:

  1. ஒரு குறும்படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது் தங்களது 'விநாயகசதுர்த்தி' குறித்த கட்டுரையைப் படித்தவுடன்.பொதுவாக விநாயக சதுர்த்தி என்றால் நம் நினைவுக்கு வருவது பொரிகடலையும்,கொழுக்கட்டையும்தான்.அதையும் தாண்டித் தாங்கள் இத்தனை விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பது எம்மதமாயினும் அது மதிக்கப்பட வேண்டிய ஒன்று என்ற தங்களின் பரந்த உள்ளத்தைக் காட்டுகிறது.எனக்கும் கூட எல்லாக் கடவுளர்களையும் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியுள்ளீர்கள்..நன்றி."நிறைவான வயிறும் கட்டான உடலும் ஞானத்தின் அடையாளம்"; மற்றும் "கணிணி பயன்படுத்துவோரின் பாதுகாவலர் விநாயகர்' போன்றவைத் தங்களின் நகைச்சுவை உணர்வுக்கு நல்ல எடுத்துக்காட்டு.வாழ்துக்கள்!

    ReplyDelete