Tuesday, August 26, 2014

ஏன் அஞ்சுகிறீர்கள்?

ஆனால் இயேசு தூங்கிக் கொண்டிருந்தார். சீடர்கள் அவரிடம் வந்து, 'ஆண்டவரே, காப்பாற்றும், சாகப்போகிறோம்' என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். இயேசு அவர்களை நோக்கி, 'நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?' என்று கேட்டார். (மத்தேயு 8:25-26)

'அஞ்சாதீர்கள்' என்ற வார்த்தை விவிலியத்தில் 365 முறை உள்ளதாகவும், அது எதற்காக என்றால், வருடத்திற்கு 365 நாட்களாம், ஒவ்வொரு நாளும் இறைவன் நம்மைப் பார்த்து அஞ்சாதீர்கள் என்று சொல்கிறாராம். இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. வருடத்திற்கு 365 நாட்கள் என்று கணிக்கும் சோலார் காலண்டர் கிபி 4ஆம் நூற்றாண்டில் தான் முழுமையான பயன்பாட்டிற்கு வந்தது. அதற்கான வித்து கிமு 750ல் உரோம் நகரம் நிறுவப்பட்டபோது விதைக்கப்பட்டது என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

கிமு, கிபி பற்றி எழுதும்போது நேற்று இத்தாலிய சேனல் ஒன்றில் பார்த்த நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது. நிகழ்ச்சியை நடத்துபவர் ரொம்ப பில்ட் அப்போடு நிகழ்ச்சியைத் தொடங்கினார். நிகழ்ச்சியின் தலைப்பு 'பெயர்'. தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதே! என்னவாக இருக்கும்! என்று காத்திருந்தால் கொஞ்ச நேரத்தில் 'போப்பாண்டவரின் பெயர்' என்று அதை விளக்கிச் சொன்னர்கள். அதாவது, திருத்தந்தையாகும் போது கர்தினாலின் பெயர் மாற்றப்படுகிறது. ராட்சிங்கர் 16ஆம் பெனடிக்ட் என மாறினார். கோர்கே மாரியோ பிரான்சிஸ் என மாறினார். ஏன் கோர்கே மாரியோ பிரான்சிஸ் என மாறினார் என்ற ஆராய்ச்சி தான் நிகழ்ச்சியே. இத்தாலிய சேனல்களின் சீரியஸ்னஸ் இவ்வளவு தான். வந்திருந்த ஒரு பல்கலைக்கழக ஆசிரியரைப் பார்த்து நிகழ்ச்சியாளர் கேட்கிறார்: 'புரபெஸோரே! திருத்தந்தையர்கள் புதிதாகப் பெயர் எடுக்கும் வழக்கம் எப்போது வந்தது?' கொஞ்ச நேரம் தலையைச் சொரிந்த அவரும், '1450 தோப்போ கிறிஸ்தோ!' என்றார். அதாவது கிபி 1450ஆம். இதில் கிபி என்பது தேவையற்றது. கிறிஸ்துவிற்கு முன் போப்பாண்டவரே கிடையாதே. அப்புறம் எதுக்கு கிபி? வெள்ளையா இருக்குறவன்லாம் அறிவாளின்னு நம்ம நினைச்சிடக் கூடாது! இதே தொலைக்காட்சியில் வந்த மற்றொரு செய்தி, 'கொசுக்கள் இந்தியாவில் உற்பத்தியாகி உலகம் முழுவதும் செல்கின்றனவாம். ஆகையால் அவை இந்தியர்களைக் கடிக்காதாம்!' இதையெல்லாம் பார்க்கும் போது எப்படா ஊருக்கு வருவோம்னு தோணுது.
நிற்க!

'அஞ்சாதீர்கள்!' அல்லது 'ஏன் அஞ்சுகிறீர்கள்?' என்று இயேசு தம் சீடர்களைப் பார்த்துக் கேட்கிறார். கேட்கும் இடம் படகு. கேட்கும் சூழல் புயல்.

இயேசு மட்டும் தூங்குகிறார். சில ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதியை வைத்து மறையுரை வைத்தபோது நான் கிளாடியேட்டர் திரைப்படத்தின் ஒரு நிகழ்வைக் குறிப்பிட்டேன். அதாவது மார்க்கு அவுரேலியுவின் பேரன் தூங்கிக் கொண்டிருப்பான். ஆனால் மகன் தூக்கமில்லாமல் நடந்து கொண்டிருப்பான். தூங்கிக் கொண்டிருக்கும் தன் அக்காவின் மகனைப் பற்றி அக்காவிடம் சொல்வார்: 'அவன் ஏன் நன்றாகத் தூங்குகிறான் தெரியுமா? ஏனெனில், அவன் அன்பு செய்யப்படுகிறான்!'

அன்பு செய்யப்படுபவர்களே நன்றாகத் தூங்குவார்கள். இயேசு தன் தந்தையின் பாதுகாப்பை உணர்ந்ததால் அவரால் நன்றாகத் தூங்க முடிந்தது. சீடர்கள் அந்தப் பாதுகாப்பினை உணராததால் பயந்து நடுங்குகின்றனர்.

'இயேசுவின் தூக்கத்தை' கடவுளின் இல்லாமை என்று சொல்லலாம். நம் வாழ்விலும் சில நேரங்களில் கடவுள் தூங்குவது போல இருக்கும். நாம் செய்யும் எதுவுமே சரிப்பட்டு வராது. நம்மைச் சுற்றி நடக்கும் சின்ன சின்ன நிகழ்வுகள் கூட நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கும்.

சில நேரங்களில் தூக்கமே நல்ல மருந்து. மனம் வலித்தால், கெட்ட செய்தி நம் காதுக்கு வந்தால், கட்டுக்கடங்காத கோபம் இருந்தால், பசி வந்து சாப்பிட ஒன்றும் இல்லையென்றால், படிக்க போரடித்தால், செய்வதையே செய்வது போல இருந்தால் உடனே தூங்கிவிட வேண்டும்.

அஞ்சாமல் இருப்பதற்கு கடவுளை எழுப்புவதற்குப் பதில் கொஞ்ச நேரம் தூங்கிவிடுவது நல்லது!


1 comment:

  1. விவிலியத்தில் எனக்கு மிகவும் பிடித்த பகுதிகளில் இதுவும் ஒன்று.'இயேசுவின் தூக்கத்தைக் கடவுளின் இல்லாமை' என்று சொல்லலாம்...சிறிது யோசிக்க வைத்தது.தூக்கம் நல்ல மருந்துதான்..ஆனால் அந்தக் கடைசிப்பகுதியில் தாங்கள் கொடுத்திருக்கும் எந்தக் காரணமும் என்னைத் தூக்கத்திற்கு இட்டுச்செல்லாது..மன அமைதியும்,எந்த சலனமும் இல்லாத் மகிழ்ச்சியும் இருந்தாலொழிய.ஆனால் தங்களால் இம்மாதிரி நேரங்களில் நன்றாகத் தூங்கமுடியும் என்றால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.இயேசு தூங்கினாலும்,விழித்திருந்தாலும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.ஆம்..கண்டிப்பாக நீங்கள் ' கொடுத்துவைத்தவர்' தான்....

    ReplyDelete