Tuesday, August 19, 2014

ஐஃபோனில் கூகுள் ஸ்டோர் பயன்படுத்த முடியுமா?

முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியுமா? நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கும். (மத்தேயு 7:16-17)

அப்பம் - கல், மீன் - பாம்பு போல மீண்டும் இரண்டு எதிர்ப்பதங்களை உருவகங்களாக முன்வைக்கின்றார் இயேசு: முட்செடிகள் - திராட்சைப் பழம், முட்பூண்டுகள் - அத்திப் பழங்கள்.

இயேசுவின் இன்றைய போதனை போலி இறைவாக்கினர்களைக் கடிந்து கொள்ளும் பின்புலத்தில் உள்ளது.

நல்ல மரம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கும்.

1. விளைவிற்கு (effect) முன்பாகவே காரணம் (cause) இருக்க வேண்டும். (கனிக்கு முன்பாகவே மரம் இருக்க வேண்டும்)

2. காரணத்திற்கும், விளைவிற்கும் நெருக்கமான தொடர்பு இருக்க வேண்டும். (மரத்தின் உள்ளிருக்கும் சுவை கனியில் வெளிப்பட வேண்டும்!) ஆனால் வேப்ப மரம் கசக்க, வேப்பம் பழம் எப்படி இனிக்கிறது?

3. ஒரே காரணம், ஒரே விளைவையே ஏற்படுத்திறது.

4. காரணத்தின் மாற்று உருவமே விளைவு. (அதாவது, மண்ணின் மாற்று உருவமே பானை)

மேற்காணும் டேவிட் க்யூம் அவர்களின் காரணம் - விளைவுக் கோட்பாட்டினை 2000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார் இயேசு. இயேசுவுக்கு முன் கிரேக்க நாட்டு மேதை அரிஸ்டாடிலும் சொல்லிவிட்டார் என்பதையும் நினைவில் கொள்வோம்.

நம் இயல்பு நாம் தரும் கனிகளில், அதாவது நாம் செய்யும் செயல்களில் வெளிப்படுகிறது. நம் செயல்களும், நம் இயல்பும் ஒன்றே. உள்ளத்தில் ஒன்றும், வெளியில் வேறொன்றும் இருந்தால் அது பொய் அல்லது போலி என ஆகிவிடுகிறது.

உள்ளுக்குள்ளே சைனா மெடிரியலும், வெளியில் பெயர் மட்டும் 'மெய்ட் இன் ஜப்பான்' என எழுதியிருந்தால் அதை நாம் போலி என்கிறோம். காரணமும், விளைவும் ஒருங்கிணைத்து இருக்க வேண்டும்.

'சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்' என்பது பழமொழி. அதாவது பாத்திரத்தில் இருக்கும் ஒன்றே கரண்டியில் வரும். பாத்திரத்தில் தண்ணீர் இருந்து கரண்டியில் அதை நாம் எடுத்தால் தண்ணீர் தான் வருமே தவிர தேன் வராது.

இந்தப் பழமொழி உண்மையில் ஒரு மரூஉ என்கின்றனர் சிலர். இதன் மூலப் பழமொழி என்ன தெரியுமா?

'சஷ்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்'

சஷ்டி என்றால் சைவ சமய இந்துக்களின் ஸகந்த சஷ்டி பண்டிகை. இந்த சஷ்டியில் பெண்கள் விரதம் மேற்கொள்வது வழக்கம். இந்த பண்டிகை அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஒருநாள் கொண்டாடப்படும். புதிதாக திருமணம் முடிந்த மணப்பெண்கள் இந்தக் காலத்தில் விரதம் இருந்து தன் ஆணோடு கூடினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதே இப்பழமொழியின் பொருள். இதையொட்டிய மற்றொரு செய்தி: ஆடி மாதத்தில் கணவன் - மனைவியை பிரித்து வைக்கும் பழக்கம் இன்னும் ஒருசில சைவக் குடும்பங்களில் உண்டு. ஏன் தெரியுமா? ஆடியில் மணமக்கள் கூடினால் சித்திரையில் குழந்தை பிறக்கும். சித்திரையில் நம் நித்திரை கலைத்து அடிக்கும் அக்னி நட்சத்திர வெயில் பிறந்த குழந்தைக்கு ஒவ்வாது. புதிதாய்ப் பிறக்கும் குழந்தையின் நலன் கருதி ஆடி மாதம் பிரித்து வைக்கின்றனர் மணமக்களை. ஆடி-ஆவணி முடிந்து புரட்டாசி, ஐப்பசிகளில் வரும் திருநாளே சஷ்டித் திருநாள். அருட்பணியாளர்களுக்கு எல்லா மாதமும் ஆடி மாதமே!

சரி பழமொழிக்கு வருவோம்.

சஷ்டி என்றால் சஷ்டி விரதம், அகப்பை என்றால் அகத்தில் இருக்கும் பை, அதாவது, கருப்பை. சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் குழந்தை வைரும். விரதத்தையும், குழந்தையும் நீக்கிவிட்டால், சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும். இதை வேகமாக சொல்லிப் பாருங்களேன்!

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்! என மாறிவிடும்.

என் கருத்து என்னவென்றால் 'சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்' என்பது நம் தமிழர்களின் உண்மையான பழமொழி. காலங்காலமாக புழக்கத்தில் இருந்த ஒரு பழமொழியை சைவ சமயம் தமிழ் மண்ணில் பிறந்த போது தன்னகத்தே எடுத்துக்கொண்டு அதை தங்களின் பண்டிகைக்கு பொருந்தும் ஒன்றாக மாற்றிக்கொண்டது. சைவ சமயத்தில் புழங்கும் 'ஷ' என்பது நம் தமிழ்மொழியின் எழுத்துருவோ, அல்லது சொல்லுருவோ அல்லவே.

தமிழர்கள் இயல்பாகவே எந்த கடவுளையும் வழிபடாதவர்கள். இந்த மக்களை நோக்கி வருகின்ற பல்வேறு மதங்கள் தங்களுக்கேற்றவாறு தமிழை மாற்றிக்கொண்டு, தங்கள் கடவுளையும் அதில் இணைத்து விட்டனர்.

உதாரணத்திற்கு, முருகனை தமிழ்க்கடவுள் என்று அழைத்தனர். தமிழர்களின் மற்றொரு அடையாளம் சேவல். இதை முருகனோடு எப்படி இணைப்பது? முருகனுக்குத் தான் மயில் என்ற பறவை வாகனமாக இருக்கிறதே. யோசித்தவர்கள் என்ன செய்கிறார்கள்? முருகனின் கையில் ஒரு கொடியைக் கொடுத்து அந்தக் கொடியில் சேவலைப் பொறித்து விடுகிறார்கள். முருகனுக்கு இதனால் தான் 'சேவற்கொடியான்!' என்ற பெயரும் வந்தது.

கோழியில் இருந்து முட்டை வந்ததா, அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா என்ற ரேஞ்சுக்கு பிரச்சினை வளர்கிறது என்பதால் இத்துடன் முடித்துக் கொள்வோம்.

முட்செடிகளில் திராட்சைப் பழங்களைப் பறிக்க முடியுமா?

ஆண்ட்ராய்ட் ஃபோனில் ஃபேஸ் டைம் பயன்படுத்த முடியுமா?

ஐஃபோனில் கூகுள் ஸ்டோர் பயன்படுத்த முடியுமா?


1 comment:

  1. இன்றையப் பகுதி பழமொழிகளைப்பற்றிய விவாத மேடைபோல் தெரிகிறது."சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பதை சிறிது மாற்றி " சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்?" என்றும் கொள்ளலாம் அல்லவா இன்றையப் பகுதிக்கேற்ப? "அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்" என்ற வள்ளுவர் வாக்கிற்கேற்ப நம் அகத்தில் உள்ள யாவையுமே நம் முகம் காட்டிக் கொடுத்துவிடுகிறதே..பிறகு போலித்தனங்கள் எப்படி சாத்தியமாகும்? ஆனாலும் இன்றையப் பகுதி என்னைக் குழப்பி விட்டதென்னவோ உண்மை. வாழ்க வளமுடன்....

    ReplyDelete