Wednesday, October 8, 2014

முன்னறிவிப்பு என்னும் 'டைப்-ஸீன்'

இயேசுவை மற்ற மனிதர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக்காட்டும் பலவற்றில் ஒன்று அவரது பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது என்பதே. இயேசுவின் பிறப்பை போலவே திருமுழுக்கு யோவானின் பிறப்பும் முன்னறிவிக்கப்பட்டதாக லூக்கா எழுதுகின்றார். மேலும், யாக்கோபின் நற்செய்தி எனப்படும் 'ஏற்றுக்கொள்ளப்படாத' நற்செய்தியில் மரியாவின் பிறப்பும் முன்னறிவிக்கப்படுவதாக எழுதப்பட்டுள்ளது.

'முன்னறிவித்தல்' என்பது ஒரு 'டைப்-ஸீன்'. டைப்-ஸீன் என்றால் என்ன? டைப்-ஸீன் என்பது ஒரு இலக்கிய நடை. ஒரு மாபெரும் மனிதரின் பிறப்பைச் சித்தரிக்க வேண்டுமானால் இப்படித்தான் சித்தரிக்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் முதல் ஏற்பாட்டுக் காலத்தில் இருந்தது. அதாவது, ஒரு நாடு அடிமைப்பட்டுக் கிடக்கிறது. அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும். விடுவிப்பவர் எப்படி ஸீனுக்குள் வருவார்? ஒரு தம்பதியினருக்கு நெடுநாள் குழந்தையில்லாமல் இருக்கும். அல்லது குழந்தை பெற்றுக்கொள்ளும் உடல்நிலை இல்லாமல் இருக்கும். ஒரு தூதர் குழந்தை பிறக்கும் என்ற செய்தியைக் கொண்டு வருவார். 'இது எப்படி?' என்று அந்த நபர் கேட்பார். பின் தூதர் ஒரு அறிகுறி காட்டுவார். தொடர்ந்து குழந்தை பிறக்கும் நிகழ்வு நடைபெறும்.

இது நம்ம பாலசந்தர் சார் படம் போலத்தான். இரண்டு - மூன்று படங்கள் பார்த்தால் போதும், அதிலிருந்து அவரின் எண்ண ஓட்டத்தைக் கண்டுபிடித்து மற்ற படங்களின் முடிவை நாமே சொல்லிவிடலாம்.

விவிலியத்தில் உள்ள டைப்-ஸீன்களை முதலில் அறிமுகப்படுத்தியவர் ஆல்டர் என்ற இலக்கிய ஆய்வாளரே.

திருமுழுக்கு யோவானின் பிறப்பு முன்னறிவிப்பும் (லூக்கா 1:5-25), இயேசுவின் பிறப்பு முன்னறிவிப்பும் (1:26-38) லூக்கா நற்செய்தியில் மட்டுமே இடம்பெறுகிறது. நற்செய்தியாளர்கள் தங்களின் விவிலியத்தில், அதாவது நமது பழைய ஏற்பாட்டில், புலமை பெற்றவர்களாக இருந்தனர். பழைய ஏற்பாட்டின் கதைமாந்தர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை எடுத்து, புதிய ஏற்பாட்டு இயேசுவோடு இணைக்கின்றனர். இவ்வாறாக, முதல் ஏற்பாட்டிற்கும், இரண்டாம் ஏற்பாட்டிற்கும் ஒரு பாலத்தை அமைத்துவிடுகின்றனர்.

லூக்கா எழுதும் முன்னறிவிப்பு 'கதைகள்' முதல் ஏற்பாட்டு சிம்சோனின் பிறப்பு (நீதித்தலைவர்கள் 13) முன்னறிவிப்பைத் தழுவி எழுதப்பட்டவை.

இந்த மூன்று முன்னறிவிப்புக்களிலும் உள்ள ஒற்றுமைகள், வேற்றுமைகள் எவை?

அ. மனோவா-மனைவி, சக்கரியா-எலிசபெத்து தம்பதியினர் வயது முதிர்ந்தவர்கள். மனைவியர் கருவுற இயலாதவர்கள். மரியா ஒரு கன்னி. கணவனை அறியாதவர். ஆகையால் அவரும் கருவுற இயலாதவர்.

ஆ. மனோவாவின் மனைவியைச் சந்திக்க ஒரு தூதர் வருகிறார். மரியாவைச் சந்திக்க கபிரியேல் தூதர் வருகிறார். ஆனால் எலிசபெத்திடம் வருவதற்குப் பதில் தூதர் சக்கரியாவிடம் வருகிறார்.

இ. தூதர் வரும் இடம் முதலில் வயல்வெளி, இரண்டாவது நாசரேத்தூரில் உள்ள வீடு, மூன்றாவது எருசலேம் ஆலயம்.

ஈ. மூன்று பேருக்குமே குழந்தை பிறக்கும் என்ற வாக்குறுதி தரப்படுகின்றது.

உ. மூன்று பேருக்குமே குழந்தை 'நாசீர்'-ஆக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதாவது, கத்தி தலையில் படக்கூடாது. ஒயின் குடிக்கக் கூடாது. ஆனால் இயேசுவுக்கு சொல்லப்படவில்லையென்றாலும் அவரை 'நசரேன்' - அதாவது, நாசரேத்து ஊhரார் என்று சொல்லப்படுகிறது. இயேசுவை எல்லா ஓவியங்களிலும் நீண்ட முடியோடு சித்தரிக்கக் காரணமும் இதுவே.

ஊ. மூன்று பேருமே 'இது எப்படி?' என்று கேட்கின்றனர். பெண்கள் இருவருக்கும் அப்படிக் கேட்டதற்கு தண்டனை எதுவும் இல்லை. ஆனால் பாவம் சக்கரியா தான் தண்டிக்கப்படுகிறார். ஊமையாக மாற்றப்படுகிறார். (பாருங்களேன்! இந்த தூதர்கள் பெண்கள் கேள்வி கேட்டால் மட்டால் ஒன்றும் செய்வதில்லை. இந்த விஷயத்தில் எனக்கு என்றும் சக்கரியா மேல் அனுதாபம் உண்டு. அவரின் கேள்வியும், மரியாவின் கேள்வியும் ஒன்றுதான். ஆனால் தண்டனை மட்டும் மரியாவுக்கு. ஏன் மரியாவை ஊமையாக்க நற்செய்தியாளர் மறுக்கிறார் என்றால், தொடர்ந்து எலிசபெத்தம்மாளின் வீட்டில் மரியா 'என் ஆன்மா ஆண்டவரை' என்ற பாடல் பாட வேண்டுமே. அதற்காகத்தான். லூக்கா மிக நுணுக்கமாக நிகழ்வுகளைக் கோர்க்கின்றார்).

எ. தூதர்கள் சொன்னது போலவே குழந்தைகள் பிறக்கின்றனர்.

ஆக, திருமுழுக்கு யோவான் மற்றும் இயேசுவின் பிறப்பு நிகழ்வுகள் முதல் ஏற்பாட்டு சிம்சோனின் கதையைத் தழுவி எழுதப்பட்டவை.

சிம்சோன் என்றால் சூரியன். இயேசுவை சக்கரியா தனது பாடலில் இளஞாயிறு என்று வர்ணிப்பதும், இயேசுவை புதிய ஏற்பாட்டு சிம்சோனாக முன்மொழிய காரணமாகிறது.

லூக்கா முன்னறிவிப்பு நிகழ்வுகளை இலக்கிய நடையான முதல் ஏற்பாட்டு 'டைப்-ஸீனை' வைத்து எழுதுகிறார்.

அப்படின்னா விவிலியத்தில் சொல்லப்பட்டது போல இயேசு பிறக்கவில்லையா?

பின் எப்படி நாம் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறோம்?

மத்தேயு ஏன் வேறு மாதிரி எழுதுகின்றார்?

நாளை பார்க்கலாம்.


2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. " டைப் ஸீன்" என்பது அடிமைத்தனத்தில் உள்ளவர்களை மீட்பதற்காக மட்டும் அல்ல,ஆணாதிக்கத்தில் சிக்கித்தவிக்கும் பெண்களைக் கரை சேர்ப்பதற்காகவும் இருக்கலாமே! அதனால் தான் வானதூதரின் தண்டனையிலிருந்து தப்பிக்கிறார் மரியா.அதுமட்டுமல்ல,அவர் பின்னால் இறைவனை நோக்கிப் பாடப்போகும் அந்த 'நன்றிப்' பாடலும் கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.ஆமாம் ஃபாதர்..ஒரு சந்தேகம்..எங்கிருந்து பிடித்தீர்கள் இந்த வான தூதரை?!..வாழ்த்துக்கள்!

    ReplyDelete