Thursday, October 30, 2014

பேச மட்டும் நேரம் இருக்காது!

இதுக்கெல்லாம் உனக்கு நேரம் இருக்கும். ஆனா எங்கூட பேச மட்டும் நேரம் இருக்காது!

இந்த வார்த்தைகளை உங்களிடம் யாராவது சொல்லியிருக்கிறார்களா?

நாம ஒரே நேரத்தில் ஒன்றை எனக்கு வேண்டும் என்றும் சொல்லலாம். அதையே வேண்டாம் என்றும் சொல்லலாம்.

சமீபத்தில் படித்த ஒரு மேலாண்மை நூல் தரும் எடுத்துக்காட்டு இது:

காலையில் எழுகிறோம். அலுவலகத்திற்குப் புறப்படுகிறோம். வேகமாக மேசையில் அமர்ந்து காஃபி கப்பை எடுத்து காஃபியை ஊற்றிக் குடிக்கிறோம். குடிக்கும் இந்தப் பொழுதில் நமக்குத் தேவையாக இருப்பது காஃபி மட்டும் தான். கப் என்ன கலர் என்றும், அது எதில் செய்யப்பட்டது என்றும் நாம் கவலைப்படுவதில்லை. இந்த நேரத்தில் காஃபி தான் முக்கியம்.

கொஞ்சம் மாற்றிப் பாருங்களேன். காஃபி குடித்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் குடிக்க வேண்டும் போல இருக்கிறது. கையில் இருக்கும் கப்பைப் பார்க்கிறோம். அங்கே பாதி காஃபி இருக்கின்றது. அதைக் குடித்து முடித்தால் தான் நாம் இன்னும் காஃபியை ருசிக்க முடியும். இந்த நேரத்தில் தான் நாம் கப்பைப் பற்றிக் கவலைப்படுகிறோம். ச்சே! இன்னும் கொஞ்சம் பெரிய கப்பாக இருந்திருக்கலாமே என்றோ அல்லது வேகமாக கப்பிக் காலியாக்க வேண்டும் எனவும் முனைப்பாகிறோம். இந்த நேரத்தில் நம் கவனம் காஃபி மேல் தான் இருக்கின்றது.

இன்றைய நாளின் நற்செய்தியில் இடுக்கமான வாயில் பற்றிப் பேசுகின்றார் இயேசு. இடுக்கமான வாயில் என்பது எல்லாருக்கும் பொதுவான ஒன்று அல்ல. உடல் பெரிதாய் உள்ளவருக்கு இடுக்கமாகத் தெரிவது உடல் மெலிந்தவருக்கு அகலமாகத் தெரியலாம். ஆக, இடுக்கமான வாயில் வழியே செல்லுங்கள் என்று யாராவது நம்மைப் பார்த்து பிரசங்கம் வைத்தால், 'சரி...ஃபாதர்' என்று தலையாட்டிவிடக் கூடாது! இடுக்கமானது என்றால் என்ன, என்னைப் பொறுத்த வரையில் இடுக்கமானது எது என்று கேட்க வேண்டும்.

நாம் பார்க்கும் பல வேலைகளுக்கு நடுவே நாம் அன்பு செய்யும் நம் உறவுகளுக்கு நேரம் கொடுப்பதே இன்று நான் சந்திக்கும் இடுக்கமான வாயில்!

1 comment:

  1. இடுக்கமான வாயில் வழியே நுழைதல், ஊசியின் காதில் ஒட்டகம் நுழைதல்...சில நல்ல அறச்செயல்கள் புரிவதில் உள்ள கடினத்தன்மையை விளக்கி, ஆனாலும் கூட அச்செயல்களை நாம் புரியவேண்டும் என்பதை வலியுறுத்தவே இயேசு இது போன்ற உருவங்களின் வழியாகப் பேசுகிறார்.இந்த இடுக்கமான வாயில் என்பது அவரவர் வாழ்க்கைப் போக்குக்கு ஏற்ப மாறுபடுகிறது. எனக்கெது 'இந்த வாயில்?' அதை நான் எப்படிக் கடக்கப் போகிறேன்?... யோசித்துக் கொண்டிருக்கிறேன்.உதவிய தந்தைக்கு நன்றி....

    ReplyDelete