Saturday, October 18, 2014

நீங்க சிட்டுக்குருவிகளைவிட மேலானவர்கள்!

பைபிளில வர்ற இயேசுநாதரின் போதனைகளில் எனக்கு மிகவும் பிடித்தது இதுதான்: 'நீங்கள் சிட்டுக்குருவிகளை விட மேலானவர்கள்!'

இதுல என்னங்க இருக்கு? இத சொல்றதுக்கு இயேசுநாதருதான் வேணுமா? எல்.கே.ஜி குழந்தைக்குக் கூடத் தெரியும். பறவைகள், விலங்குகளை விட மனிதருக்கு பகுத்தறிவு என்ற ஆறாவது அறிவு இருக்குன்னு. நேச்சுரலி நாமதான் மேலானவர்கள்! 'நாம மேலானவங்க' அப்படிங்கறது நம்ம மூளைக்குத் தெரிஞ்ச அளவுக்கு நம்ம மனசுக்குத் தெரியலயே? அதத்தான் இயேசு சொல்ல வர்றாரு.

இயேசு இதைச் சொல்லும்போது அவர் காலத்தில இருந்த யூத பப்ளிக் மார்க்கெட்டில இருந்த ஒரு உதாரணத்தைச் சொல்கிறார். 'காசுக்கு இரண்டு குருவிகள் விற்பதில்லையா?' 'இரண்டு காசுக்கு ஐந்து குருவிகள் விற்பதில்லையா?'

இங்க அடுத்த பிரச்சனை. இயேசுவுக்கு கணக்கு தெரியல. ஒரு காசுக்கு இரண்டு குருவினா, இரண்டு காசுக்கு எத்தனை குருவிகள்? நான்கு. ஆனா இயேசு ஐந்துன்னு சொல்றாரே. அது வேறு ஒன்னுமில்லை. ஐந்தாவது குருவிதான நம்ம ஊர்ல காய்கறிக்கடையில நாம வாங்குற கறிவேப்பில மாதிரியான கொசுறு - இலவசம். அந்தக் காலத்தில நாம் 2 கிலோ, 5 கிலோன்னு தக்காளி வாங்கினோம். கடைக்காரரும் ரெண்டு அல்லது மூணு தக்காளி கொசுறுன்னு குடுத்தாரு. இப்ப இருக்குற விலைவாசியில நாம வாங்குதே ரெண்டு அல்லது மூணு தக்காளிதான. இதுல கொசுறு எப்படி வரும்?

ஜவுளி கடையில நாம கேட்டு வாங்குற 'கட்டப்பை', நகைக் கடையில நாம நின்னு வாங்குற 'மணி பர்ஸ்,' ஹோட்டல்ல பில் கட்டிட்டு 'இவ்வளவு ரூபா ஆயிடுச்சேனு' முணங்கிக்கொண்டே தேடி எடுக்கும் 'சீரகம்' இவை எல்லாமே கொசுறுதான். ஏன் நம்ம போட்ட ஓட்டுக்கு நாம வாங்குற டிவி, மிக்சி, கிரைண்டர், லேப்டாப் கூட கொசுறுதான்.

நாம வாங்குற பொருளுக்கும், கொசுறுக்கும் வித்தியாசம் என்னன்னா இந்தக் கொசுறுக்கு ஏதாவது ஆச்சுன்னா நாம கவலைப்படவே மாட்டோம். துணியப் பத்திரப்படுத்தும் அளவுக்கு 'கட்டப்பையையோ', நகையைப் பத்திரப்படுத்தும் அளவுக்கு 'மணி பர்ஸையோ' (எம்ப்டி) பற்றி நாம கவலைப்படறது இல்ல. அது காணாமற்போனால் கூட அதைத் தேடி எடுக்க நாம் மெனக்கெடுவதில்லை.

ஐந்தாவது குருவியோடு நிலைமை அதுதான். நான்கு குருவிக்குத்தான காசு கொடுத்தோம். அவை பத்திரமா இருந்தா போதும். அஞ்சாவது இருந்தா என்ன? பறந்தா என்ன? இயேசு வைக்கிற டுவிஸ்ட் அதுதான். கொசுறா வந்த குருவின்னு நினைக்காம பத்திரமா பாதுகாப்பவர்தான் நம்ம கடவுள்.

ஒரு நிமிஷம் நினைச்சுப்பாருங்களேன். அந்தக் கொசுறா வந்த குருவி மனசுல என்ன நினைக்கும்? 'எனக்குத் தண்ணி வைக்க மாட்றான். அரிசி போட மாட்றான். கூண்டப் பத்தி கவலப்பட மாட்றான். என்ன இருந்தாலும் நான் கொசுறா வந்தவ தான!'னு கண்டிப்பா புலம்பும். நம்ம உறவுகளிலேயே பல நேரங்களில் நம்மிடம் வர்ற உறவுகளையும், நட்பையும் கொசுறாத்தான பார்க்கிறோம். 'அவ இருந்தா என்ன! போனா என்ன? நமக்கு என்ன செலவா? வரவா?' ன்னு நம்மள அறியாமலே நம்முடைய செயல்களால காட்டிவிடுகிறோம்.

திருமண உறவுல இது எப்படி இருக்கும்னா, நம்மள நம்பிதான வந்திருக்கான்(ள்). இனி எங்க போவான்(ள்)? குடுக்குற சாப்பாட சாப்பிட்டுட்டு, குடுக்குற வேலையைச் செய்யட்டும் என நினைக்கிறது. முற்றிலும் துறந்த துறவு வாழ்வில (என்னைப் போன்ற) வாழ்வில எப்படி வெளிப்படும்னா, நான் எதுக்கு இந்த மக்களைப் பற்றி கவலைப்படணும்? இந்த இடம் இல்லைன்னா இன்னொரு இடம்! என்ற ஏனோதானோ மனநிலை மற்றும் இதிலிருந்து வெளிப்படும் அதிகாரம். எனக்குக் கீழ் இருக்கிற மக்களை நான் கொசுறுக் குருவிகளாக மட்டுமே பார்க்கத் தொடங்கிவிடுவேன்.

நம்மள இந்த உலகம் கொசுறு போல நினைத்தாலும் நம்ம கடவுள் நம்மள ஒருபோதும் அப்படி நினைப்பதே கிடையாது. அவரோட கண்ணின் கருவிழிகள் நாம். நம்ம உடம்ப பாருங்களேன். அத வெளியில செய்ற செயல்களத்தான் நாம பார்க்கிறோம். கண் பார்க்குது. காது கேட்குது. கை டைப் அடிக்குது. கால் நடக்குது. ஆனா உள்ளுக்குள்ள அதே நேரம் எவ்வளவு வேலைகள் நடக்குது? இதயத்துடிப்பு, இரத்த ஓட்டம், உணவு செரிமானம், சுவாசம், எண்ண ஓட்டம், மூளையில நடக்குற வேலைகள், கணயம், கிட்னி, குடல் என எல்லாம் எவ்வளவு நேர்த்தியா வேலை செய்கின்றன. உள்ள ஒரு சின்ன பிராப்ளம் ஏற்பட்டு சுவாசம் நுரையீரலுக்குப் பதிலாக இதயத்திற்கோ, உணவு இரைப்பைக்குப் பதிலாக நுரையீரலுக்கோ போனா என்ன ஆகும்? நாம காய்கறி வெட்டிக்கிட்டு இருக்கும்போது காயை வெட்டுங்குற கமாண்டுக்குப் பதிலா மூளை கையை வெட்டுன்னு கமாண்ட் கொடுத்தா என்ன ஆகும்? இதுதான் கடவுளோட பராமரிப்பு. இதைத்தான் திருப்பாடல் ஆசிரியர் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்: 'என் உள் உறுப்புக்களை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உருதந்தவர் நீரே!' (திபா 139:13). இப்படி எல்லா மனிதர்களையும், விலங்குகளையும், பறவைகளையும், இயற்கையையும் பராமரிப்பவர் இறைவன். இந்தப் பராமரிப்பை நாம ஒரு நிமிஷம் நினைச்சோம்னா, இந்தப் பெரிய பிரபஞ்சத்தில நாம ஒன்னுமேயில்லை அப்படிங்கிற சுயஅறிவை நாம் பெற்றுவிடுவோம். ஒருவர் மற்றவரை மதிக்கக் கற்றுக்கொள்வோம்.

நாம யாரையும் 'கொசுறு' போல நினைக்கக்கூடாது. நாம சந்திக்கிற ஒவ்வொரு நபருக்கள்ளும் ஏதாவது ஒரு போரட்டம், கண்ணீர், ஏமாற்றம், விரக்தி இருக்கும். அப்படி இருக்கும்போது எதுக்காக நம்மளோட வார்த்தையாலும், செயல்களாலும் அதை அதிகமாக்கணும்? ஒருத்தர் மத்தவர்ட்ட கொஞ்சம் கனிவோட நடந்தால நம்ம மனித குலம் எவ்வளவோ உயர்ந்துடும். வன்முறை, தீவிரவாதம், கோபம், அடிமைத்தனம், போர் இப்படி எதுவுமே இல்லாமல் போய்விடும்.

நாம நம்மள ஒருபோதும் 'கொசுறு' தானேன்னு தாழ்வா மதிப்பிடவே கூடாது. 'உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும்!' என்பதை அடுத்தவர்களுக்குக் கற்றுக்கொடு என்பார் லெனின். நம்மள மத்தவங்க சுயமதிப்பு நிறைந்தவங்கனு நினைக்கனும்னா நாம ஒருநாளும் தாழ்ந்து போகவே கூடாது. எக்காரணத்தக் கொண்டும் தன்மானம் இழக்கவே கூடாது. எப்போ நாம நம்மளயே கொசுறுன்னு நினைக்கிறோமோ, அப்பவே மத்தவங்க நம்மள அதுமாதிரி நடத்த ஆரம்பிச்சுடுவாங்க. அப்புறம் நாம அவங்களுக்கு விக்டிம்ஸ்தான். 'நில்லுன்னா நிக்கணும்! உட்கார்ன்னா உட்காரணும்!'

சிட்டுக்குருவி மிகவும் கண்டுகொள்ளப்படாத ஒரு ஜீவன். குயில்போல அதற்குப் பாடத் தெரியாது. மயில்போல ஆடத் தெரியாது. கிளிபோல பேசத் தெரியாது. அதோட இறகுகள் கூட அட்ராக்டிவ் கிடையாது. மிகவும் வலுவற்ற ஜீவன் அது. ஆகையால்தான் நம்ம செல்ஃபோன் கதிரியக்கத்துக்கூட ஈடுகொடுக்க முடியாம வேகமா அழிஞ்சுட்டு வருது.

இன்னைக்கு எங்கயாவது ஒரு குருவியப் பார்த்தீங்கன்னா ஒரு நிமிஷம் நின்னு உங்க மனசுக்குள்ளேயே சொல்லிக்கோங்க:

'நீங்க சிட்டுக்குருவிகளைவிட மேலானவர்கள்!'

1 comment:

  1. விவிலியத்தில் இந்தச் சிட்டுக்குருவிகள் பற்றி வரும் பகுதி எனக்கும் கூட மிகப் பிடித்த பகுதிதான்.ஆனால் இன்று நம் கண் முன்னே அவை காணாமல் போவதுதான் மிகப் பெரிய சோகம்.'கொசுறு' பற்றிய தந்தையின் வார்த்தைகள் சுவாரஸ்யம் மட்டுமின்றி பொருட்செறிவோடு நம்மை யோசிக்கவும் தூண்டுகின்றன.இந்தச் சிட்டுக்குருவிகளின் சிந்தனையோடு 139ம் திருப்பாடலையும் சேர்ந்து வாசித்தால் படைப்புக்களான நம் மாண்பு மட்டுமின்றி நம்மைப் படைத்தவரின் மாண்பும் விளங்கும்.அனைவருக்கும் காலை வணக்கங்கள்!

    ReplyDelete