Saturday, October 25, 2014

இணைச்சட்டத்தோடு இணைந்த நாள்!

இன்று இணைச்சட்ட நூல் குறித்து ஒரு சிறப்பு கருத்தரங்கம் எங்கள் கல்லூரியில் நடைபெற்றது. கடந்த வருடம் யோபு நூல் குறித்துப் பேச ஹார்வர்டிலிருந்து ஒருவர் வந்தார் நினைவிருக்கிறதா? இன்று கருத்தரங்கிற்கு வந்தவர் திரு. எக்கார்ட் ஓட்டோ. இவர் ஒரு லூத்தரன் சபையைச் சார்ந்த ஜெர்மானிய மொழி பேசும் பேராசிரியர். விவிலியத்தில் 600க்கும் மேற்பட்ட கட்டுரைகள், நூல்கள் எழுதியுள்ளார். சமூக அறிவியல் மற்றும் விவிலியம் என இரண்டு துறைகளில் முனைவர் பட்டம் பெற்றவர். தொல்பொருள் ஆராய்ச்சியிலும் ஆர்வமுள்ளவர்.

அவரிடம் கேட்கப்பட்ட மூன்று கேள்விகளையும், அதற்கு அவர் அளித்த பதில்களையும் இன்று பகிர்ந்து கொள்வோம்.

அ. விவிலியத்தில் உள்ள பத்துக்கட்டளைகள் மற்றும் அது தொடர்பான சட்டங்கள் ஹமுராபி மற்றும் எஸ்னுன்னாவின் சட்டங்களின் மாற்று உருவங்கள் என்பது உண்மையா?

பதில்: ஆம். ஆனால் அதில் ஒரு சிக்கலும் இருக்கிறது. கிமு 2ஆம் மில்லனியத்தில் எழுதப்பட்டவை ஹமுராபி மற்றும் எஸ்னுன்னா சட்டங்கள். ஆனால் இணைச்சட்ட நூல் எழுதப்பட்டது கிமு 1ஆம் மில்லனியத்தில். ஓராயிரம் ஆண்டை எப்படி நிரப்புவது என்ற கேள்வி விவிலிய ஆய்வாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது. அதற்கு விடையாக நான் கண்டது இதுதான். யூதேயா மனாசே என்ற அரசனால் ஆட்சி செய்த போது அப்போது மிகவும் அச்சுறுத்தலாக இருந்த ஒரு நாடு அசீரியா. கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், பொருளாதாரம் என வளர்ந்திருந்த அசீரியா இன்றைய அமெரிக்கா போல பக்கத்திலிருக்கும் எல்லாருக்கும் தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தது. அசீரியாவை எதிர்த்து நிற்க பல அரசுகள் கூட்டு சேர்கின்றன. ஆனால் இறுதியில் யூதேயா மட்டும் தனித்து விடப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் அசீரிய என்ற அடக்குமுறைக்கு எதிராக, இணைச்சட்ட நூலின் ஆசிரியர்கள் ஒரு எழுத்துப் புரட்சி செய்கின்றனர். அந்த எழுத்துப் புரட்சியே இணைச்சட்ட நூல். அரசன் என்ற ஒருவன் அச்சுறுத்துவான். ஆனால் எங்கள் ஆண்டவர் எங்களை ஒருபோதும் அச்சுறுத்த மாட்டார் என்ற நிலையில் அரசனுக்குப் பதிலாக ஆண்டவனை வைத்து தங்களுக்கென ஒரு சட்டம், நாகரீகம் என வகுத்துக்கொண்டனர் யூதர்கள். அன்றைய காலகட்டத்தில் அவர்கள் வாய்மொழியாக் கேட்ட ஹமுராபி மற்றும் எஸ்னுன்னா சட்டங்கள் கண்டிப்பாக அவர்கள் மனத்தில் இருந்திருக்கும். அது அவர்களின் எழுத்துக்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

இந்தப் பதில் நமக்குச் சொல்வது என்ன? முதல் ஏற்பாட்டின் தோரா நூல்கள் எனப்படும் நூல்கள் மட்டுமல்ல, எல்லா விவிலிய நூல்களுமே ஒரே நபராலோ, கடவுளாலோ எழுதப்பட்டவை அல்ல. அவை அந்தந்த காலத்தின் சுவடுகளைத் தாங்கி நிற்பவை. அவைகளை முழுமையாக அறிவதற்கு நாம் அதன் பின்புலத்தையும் ஆராய்வது அவசியம். ஆக, வெறும் புத்தகத்தை மட்டும் வைத்துக் கொண்டு, இதுதான் எல்லாம் என்று சொல்வது சால்பன்று.

ஆ. இதுவரை நடைபெற்ற விவிலிய ஆய்வுகள் சாதித்தது என்ன?

பதில்: விவிலிய ஆய்வுகளை இரண்டு குழுக்களுக்குள் அடக்கி விடலாம்: ஒன்று, டயாக்ரோனிக். மற்றொன்று, சின்க்ரோனிக். டயாக்ரோனிக் என்ற குழுவினர் விவிலியம் கடந்து வந்த பாதையை ஆராய்ச்சி செய்கின்றனர். சின்க்ரோனிக் குழுவினர் விவிலியம் இன்று தொகுக்கப்பட்டு நிற்பதை முழுமையாக எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்கின்றனர். பலரின் கைகள் எழுதியிருப்பதாக முதல் குழுவினர் சொல்கின்றனர். யார் எழுதினார் என்பது பற்றிக் கவலையில்லை, என்ன எழுதியிருக்கிறது என்பது தான் முக்கியம் என வாதிடுகின்றனர் இரண்டாம் குழுவினர். இந்த இரண்டு குழுக்களுமே முழுமையில்லாதவை. இரண்டிலும் நிறைகுறைகள் இருக்கின்றன. ஆனால் இந்த இரண்டு பேரும் செய்கின்ற ஒரே தவறு என்னவென்றால், 'நாங்கள் தான் அறிவாளிகள் எனவும், இரண்டாயிரம் அல்லது நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நூலை எழுதியவர்கள் முட்டாள்கள்!' எனவும் நினைப்பது. நம்மிடம் எல்லா தொழில்நுட்பமும் இருக்கிறது என்பதற்காக கையில் கத்தியை வைத்துக் கொண்டு அவர்களின் நூலை கிழித்துப் பார்ப்பது பொருளற்றது. இன்று நாம் உண்மையெனக் கொள்ளும் ஒன்று நாளை பொய்யாக்கப்படலாம். ஆகையால் எந்த விவிலிய நூலையும் நான் 'மாஸ்டர்' ஆக்கிவிடவேண்டும் என்ற மனநிலை இருக்கவே கூடாது. இருக்கின்ற நூலை இருப்பது போல ஒரு அர்ப்பண உணர்வுடன் அணுக வேண்டும். 'எனக்கு எல்லாம் தெரியும்!' என்று இன்று நாம் சொல்லும் போது நாளை ஒருவர் வந்து உனக்குத் தெரிந்ததெல்லாம் அபத்தம் என்று சொல்லிவிட முடியும்.

இந்தப் பதில் நமக்குச் சொல்வது என்ன? விவிலிய நூல் மட்டுமல்ல, நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபருமே புனிதமானவர். நாம் அவர்களை நம்மிடம் இருக்கும் கத்தியைக் கொண்டு 'நீ இப்படி, நீ அப்படி' என்று ஆராய்வதை விட்டு ஒரு அர்ப்பண உணர்வோடு அணுகுவதே சால்பு.

இ. அறிவிற்கும், விசுவாசத்திற்கும் தொடர்பு இருக்கிறது?

பதில்: அறிவும், கடவுள் நம்பிக்கையும் ஒருபோதும் ஒன்றையொன்று எதிர்த்து நிற்பதில்லை. சின்ன உதாரணம். இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியேறிய போது செங்கடல் இரண்டு சுவர்கள் போல பிரிந்து நின்று கட்டாந்தரை உருவானது. அவர்கள் பாதம் நனையாமல் கடந்து சென்றனர் என்று சொல்கிறது விவிலியம். இது காமன் சென்சுக்கு எதிரானது. புவியீர்ப்பு விசை குறித்து தெரிந்த எவரும் சொல்லிவிட முடியும் இது அபத்தம் என்று. ஒரு போதும் நம் மூளை இதை சரி என்று ஏற்றுக் கொள்ளாது. ஆனால், இது எழுதப்பட்டதன் பின்புலத்தைப் பார்க்க வேண்டும். பாபிலோனியாலில் அடிமைப்பட்டுக் கிடந்து, தங்கள் நாடு, கோவில், சட்டம் என அனைத்தையும் இழந்த மக்கள் தங்களுக்கென்று ஒரு புதிய நம்பிக்கையை ஊட்டிக் கொள்கின்றனர். பாபிலோனியா என்ன பாபிலோனியா! எங்கள் கடவுள் உங்களிலும் மேலானவர்! அவரால் கடலின் தண்ணீரையும் செங்குத்தாக நிற்க வைத்துக் கட்டாந்தரையை உருவாக்க முடியும்! என்று தாங்கள் மூளை கட்டளையிட்டதை எழுதுகின்றனர். நம்பிக்கை உருவாவது அறிவில்தான். ஆக, அது ஒன்றிலிருந்து முரண்பட முடியாது.

இந்தப் பதில் நமக்குச் சொல்வது என்ன? ஒருவர் கொண்டிருக்கும் (கடவுள்) நம்பிக்கையை அறிவீனம் என்று சொல்வது இன்று மெத்தப்படித்த மேதாவிகளும், நம் சமுதாயமும் செய்யும் மிகப் பெரிய தவறு. இது அந்தக் கால மிஷனரிகளும், இந்தக் கால மிஷனரிகளும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். எந்த மதமும் தன் கொள்கையை மட்டும் முதன்மைப்படுத்தி மற்றொன்றை இல்லாமல் ஆக்க முனைவது பெரிய மனித உரிமை மீறல். 'என் வழி எனக்கு! உன் வழி உனக்கு! இதில் நல்ல வழி, கெட்ட வழி என்ற எந்த மண்ணாங்கட்டியும் கிடையாது!'

ஆக, இந்த நாள் இணைச்சட்டத்தோடு இணைந்த இனிய நாள்!



1 comment:

  1. இன்றையப்பதிவு...நுணிப்புல்தான் மேயமுடிந்ததே தவிர ஆழக்கண் கொண்டு எதையும் அணுக இயலவில்லை.ஆனாலும் கூட எல்லோருக்கும் தெரியவேண்டிய,புரியவேண்டிய பகுதிகளும் இல்லாமலில்லை.அதில் ஒன்று...நம்மைச்சுற்றியுள்ள சக மனிதர்களைக் புனிதர்களாகப் பார்ப்பதை விடுத்து, நம்மிடம் உள்ள கத்தியைக்கொண்டு ' நீ இப்படி,நீ அப்படி' என்று அவர் மனத்தைக்கீறாமல் ஒரு அர்ப்பண உணர்வோடு அணுகுவதே சால்பு..வாழ்ந்து காட்ட வேண்டிய ஒரு பண்பு.....

    ReplyDelete