Wednesday, October 15, 2014

இரண்டாம் படைப்பு வரலாறும், மனித உறவு நிலைகளும்!

நேற்றைய தினம் தொடக்கநூலின் முதல் படைப்பு வரலாற்றையும், மனித உடல் வளர்ச்சி நிலைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தோம். இன்றைய நாளில் இரண்டாம் படைப்பு வரலாற்றுக்கும், மனித உறவு நிலைகளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று பார்ப்போம்.

நம்மளப் பார்த்து யாராவது 'ஹூ ஆர் யூ?' என்று கேட்டாலோ அல்லது 'ஹவ் ஆர் யூ?' என்று கேட்டால் பதில் சொல்லிவிடலாம். நம்மிடம் யாராவது 'ஒய் ஆர் யூ?' என்று கேட்டால் நமக்கு எப்படி இருக்கும்? அதற்கு நாம் என்ன பதில் சொல்வோம். மனித வாழ்க்கையின் 'ஏன்?' என்ற கேள்விக்கு விடையாக வருவதே உறவு. எதற்காக நாம் அன்பு செய்கிறோம்? எதற்காக நாம் நட்பு கொள்கிறோம்? எதற்காக ஒரு சிலரை நமக்குப் பிடிக்கிறது? எதற்காக ஒரு சிலரை நாம் வெறுக்கிறோம்?

ஒருவரைவொருவர் அதிகம் அன்பு செய்யும் இனமும் மனித இனம்தான். ஒருவரையொருவர் அதிகம் அழித்துக் கொள்ளும் இனமும் மனித இனம்தான்.

1947ல் வெளிவந்த 'நேச்சர் பாய்' என்ற பாடலை எழுதிய ஆசிரியர் ஏடென் ஆப்ஹெட்ஸ் அழகாகச் சொல்வார்: 'உன் வாழ்வில் நீ கற்கும் மிகப்பெரிய பாடம் அன்பு செய்வதும், அன்பைப் பெறுவதும் தான்'. அதற்குப் பின் நான்கு ஆண்டுகள் கழித்து மனித தேவைகளை அட்டவணைப்படுத்திய ஆபிரகமாம் மாஸ்லோ என்ற உளவியல் நிபுணர், ஐந்தடுக்குப் பிரமிடில் அன்பை மூன்றாவதாக, அதாவது மையமாக நிறுத்துகின்றார். இவர்கள் அன்பு செய்வதைப் பற்றிச் சொன்னாலும் ஏன் நாம் அன்பு செய்கிறோம் அல்லது செய்ய வேண்டும் என்பதற்கும் காரணம் சொல்லவில்லை.

அன்புக் கட்டளை கொடுத்த இயேசு கூட எதற்காக அன்பு செய்கிறீர்கள் என்றும், எதற்காக அன்பு செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டுச்செல்லவில்லை.

நான் மேற்கொண்ட சின்ன இணையதள தேடுதலில் கிடைத்த காரணங்கள் இவை:
அ. அன்பின் முதல் காரணம் நாம் இனப்பெருக்கம் செய்யும் விலங்குகள். அன்பு செய்வதற்கான காரணம் முதலில் உடலியல் சார்ந்தது. அதாவது, உயிரினத்தின் முதல் குணம் தன்னையே அதிகரித்துக் கொள்வது. எந்த உயிரினமும் வாழவும், தன் இனத்தைப் பெருக்கிக் கொள்ளவுமே விழைகிறது. மனித உடலின் சுரப்பிகளும் இந்தத் தேடலைத் துரிதப்படுத்துகின்றன.

ஆ. சரி! இனப்பெருக்கம் முடிந்தாயிற்று! இனப்பெருக்கத்திற்குப் பின்னும் ஏன் ஒருவர் மற்றவரைத் தேடுகிறோம்? நம் பார்ட்னரோடு இணைந்திருக்க மற்றொரு காரணம் 'ரிவார்ட் அன்ட் அட்டாச்மென்ட்'. நாம் ஒருவர் மற்றவரோடு இணைந்திருக்கும் போது ஏதோ ஒருவகையான வெகுமதி (உணர்வு வெகுமதி! பொருள் வெகுமதியும் இருக்கிறது. ஆனால் பொருள் வெகுமதிக்காக மட்டும் தொடர்பு இருந்தால் அது உறவுப் பிறழ்வாக மாறிவிடுகிறது). நாம் ஒருவர் மற்றவரோடு இணைந்திருக்கும் போது நம்மை அறியாமலேயே ஒரு நெருக்கம் பிறந்து விடுகிறது.

இ. தொடக்தக்தில் உறவு நிலை ஹார்மோன்களில் உந்துதலால் தான் இருக்கிறதே தவிர, அங்கே உண்மையான அக்கறையும், அன்பும் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை. நம் உடலில் சுரக்கும் 'டோபோமைன்' (நம்மில் இன்ப உணர்வைத் தூண்டக் கூடியது), 'ஆக்ஸிடைசின்' (நெருக்கத்தைத் தேடத் தூண்டுவது) மற்றும் 'வாஸோபிரசின்' (உறவைச் சமூகத்தின் அங்கீகாரமாக மாற்றுவது) என்னும் இந்த மூன்று ஹார்மோன்கள் 'மோனோகாமி' என்னும் 'ஒருதார' உறவை அல்லது நம் பார்ட்னரைத் தேடும் நம் ஆசையை நிலைநிறுத்தி வைக்கிறது.

ஈ. சப்ளிமேஷன் - அதாவது ஹார்மோன்கள் ஒருவர் மற்றவரை நோக்கி ஈர்க்கும் வேலையைச் செய்ய விடாமல் நம் மனதின் உதவியோடு, அல்லது மூளையின் ஆற்றலோடு அதை வேறொரு திசை நோக்கித் திருப்பிவிடுவது. துறவறத்தின் மணத்துறவிலும், மருத்துவ நோக்கத்திற்காகவும், பொதுநல நோக்கத்திற்காகவும் இது செய்யப்படுகிறது. என்னதான் இதற்காக ஆன்மீக காரணங்கள் சொன்னாலும் இயற்கையை அதன் போக்கிலிருந்து திருப்பிவிடவதும், அதன் வேகத்தைத் தடுத்து நிறுத்துவதும் ஆபத்தாகவே மாறிவிடுகிறது. 'இதற்கெல்லாம் கடவுள் அருள் வேண்டும்' என்று சொல்வதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. வாழ்க்கை முழுவதும் கடவுளுக்காக மணத்துறவு இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, இறந்த பின் கடவுள் என்று ஒருவரே இல்லையென்றால் 'ஐயயோ! நம்மள இவ்வளவு நாள் ஏமாத்தீட்டாங்களே!' என்று சொல்லவா முடியும்?

தொடக்கநூலின் இரண்டாம் படைப்பு வரலாற்றை வாசிக்கும் போது (2:4ஆ-25) அது முதல் படைப்பு வரலாற்றிலிருந்து (1:1-2:4அ) வித்தியாசமாக இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. முதல் வரலாற்றில் மனிதன் கடைசியாகப் படைக்கப்படுகின்றான். மனிதன் - மனிதை, ஆண் - பெண் என்ற பாகுபாடு அங்கு இல்லை. இரண்டாம் வரலாற்றில் மனிதன் முதலில் படைக்கப்படுகின்றான். அவனுக்குத் துணை ஏதும் கிடைக்காததால் பெண் படைக்கப்படுகின்றாள்.

'மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று. அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்' - இதுதான் உறவின் மைய இறைவாக்கு.
'எல்லாவற்றையும் நல்லதெனக் கண்ட' கடவுள் மனிதனின் தனிமையை மட்டும் நல்லதல்ல என்று காண்கின்றார். ஆக நாம் தனிமை உணர்வுக்காகப் படைக்கப்பட்டவர்கள் அல்லர். நாம் தனிமையாக இருக்கிறோம் என்று உணரும் போது அங்கே நம்மைப் படைத்த கடவுளே நமக்காகக் கண்ணீர் வடிக்கின்றார்.

உறவின் மூன்று நிலைகளாக நான் இந்தப் பகுதியில் பார்ப்பது என்ன?

அ. பெயரிடும் நிலை. ஆதாமைப் படைத்தவுடன் கடவுள் அவனிடம் தான் படைத்த அனைத்தையும் கூட்டிக் கொண்டு வருகின்றார். எதற்காக? அவன் என்ன பெயரிடுகிறான் என்று பார்ப்பதற்காக. நம் உறவுகள் தொடங்குவது ஒருவர் மற்றவரின் பெயரைக் கொண்டுதான். 'உங்க பேரு என்ன?' பெயரோடு சேர்ந்து அவரோடு நாம் கொள்ளும் உறவின் பெயரும் இணைந்து விடுகிறது. நீங்க எனக்கு அப்பா, நீங்க எனக்கு அம்மா, நீங்க எனக்கு அண்ணன், நீங்க எனக்கு அக்கா, நீங்க எனக்கு நண்பர், நீங்க எனக்கு மனைவி என்று ஆட்களின் பெயரோடு சேர்த்து நாம் உறவின் பெயரையும் கொடுத்து விடுகிறோம்.

ஆ. விலா எலும்பு. ஆதாமின் விலா எலும்பிலுருந்து அவனுக்காக துணையை உருவாக்குகிறார் கடவுள். இதனால் ஆண்களுக்கு விலா எலும்பு ஒன்று குறைவு என்று நாம் சொல்ல முடியாது. நம் உடலின் மிக மென்மையான உறுப்புகள் எல்லாம் மிகக் கடினமான ஒன்றால் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது இயற்கையின் நியதி. ஆகையால் தான் மூளையைப் பாதுகாக்க மண்டை ஓடும், இதயத்தைப் பாதுகாக்க விலா எலும்பும் இருக்கின்றது. ஆக, ஆணின் இதயத்தைப் பாதுகாப்பவள் பெண். மேலும், இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும் விலா எலும்பு போல அவனுக்கு நெருக்கமாக என்றும் இருக்கிறாள் பெண். மேலும் இதயத்தின் மென்மையும், எலும்பின் உறுதியும் ஒன்றையொன்று எதிர்ப்பவையாக இருந்தாலும், இரண்டு வித்தியாசங்களின் இணைவே உறவு என்பதும் இதில் தெளிவாகிறது. நம் எல்லா உறவுகளையும் நாம் விலா எலும்பு உறவாக நினைத்துக் கொள்வதில்லை. நாம் பெயரிடும் பல உறவுகளில் ஒரு உறவே நம் இதயத்தின் அருகில் வருகின்றது.

இ. ஒன்றித்திருக்கும் நிலை. ஒன்றோடு இணைய வேண்டும் என்றால் நாம் மற்றொன்டோடுள்ள இணைப்பை விடுக்க வேண்டும். மனைவியோடு இணைய கணவன் தன் தாய்-தந்தை உறவை விட வேண்டும் (காண் 2:24). அதாவது முழுமையான அர்ப்பணிப்பு. நம் உறவுகளில் விரிசல் வரக் காரணம் 'பார்ட்டைம் பிரன்ட்ஷிப்' என்ற மனநிலைதான். இதில் ஒன்றை நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். பரிணாம வளர்ச்சியின் படி பார்க்கும் போது தொடக்கத்தில் குகையில் வசித்த பெண் தன் சிந்தனை முழுவதிலும் வேட்டைக்குப் போன தன் கணவனையே நினைத்துக் கொண்டிருப்பாள். அவன் சாப்பிட்டிருப்பானா? அவன் எங்கே இருப்பான்? மழை பெய்யுமா? அவன் நனைந்துவிடுவானா? என்று கேட்டுக் கொண்டும் சின்னச் சத்தம் வந்தாலும் 'அவன் வந்துவிட்டானா?' என்று குகையின் வாசலுக்கும் சென்று பார்ப்பாள். ஆனால், வேட்டைக்குச் சென்ற ஆண்களுக்கு தாங்கள் செய்யும் பல செயல்களில் ஒன்றுதான் அன்பு செய்வது. அதாவது வேட்டையாடுவது, மீன் பிடிப்பது, குளிப்பது, சாப்பிடுவது, நண்பரைப் பார்ப்பது, வில்லைச் சரி செய்வது என்று பல ஆக்டிவிட்டிஸ் இருப்பது போல தன் பெண்ணும் ஒரு ஆக்டிவிட்டி.

சுருக்கமாகச் சொன்னால், ஆணின் மூளை ரயில் போல. ஒரு கம்பார்ட்மெண்ட் கழன்றாலும் அவன் போய்க்கொண்டே இருப்பான். பெண்ணின் மூளை ஏரோபிளேன் போல. (உறவில்) சின்ன விரிசல் விழுந்தாலும் சுக்குநூறாகி விடுவாள்.

நம் உடலின் ஹார்மோன்களின் வேகத்தையும் தாண்டிய, நாம் பெயரிட முடியாத, விலா எலும்பை விட நெருக்கமான உறவுகளும் நமக்கு இருக்கத்தான் செய்கின்றன.

மனிதப் படைப்பைப் போலவே அன்பும் இன்றும் என்றும் ஒரு மறைபொருளே!


1 comment:

  1. மேலோட்டமாகப் பார்ப்பின் அன்பைப் பகிர்வதும்,பெறுவதும் சாதாரண விஷயமாகத் தெரியலாம்.ஆனால் தன் பின்னனியில் இருக்கும் பல விஷயங்கள் உண்மையாக ஒருவரையோ பலரையோ அன்புசெய்தவர்களுக்குத்தான் விளங்கும். மனித உறவோடு பின்னிப்பிணைந்துள்ள பல தாக்கங்களை உடற்கூறு, உளவியல்,சமூகவியல்...இவற்றின் பின்னனியில் விளக்கிச்சொல்லத் தந்தை எடுத்திருக்கும் சிரம்மும், முயற்சியும் நன்றாகவே தெரிகிறது.ஆணின் மூளையைப் பெண்ணின் மூளையோடு ஒப்பிட்டிருப்பது மிகச்சரியே! பாராட்டுக்கள்!

    ReplyDelete