Monday, October 6, 2014

தலைமுறை அட்டவணை - 2

மத்தேயு எழுதும் அட்டவணை

'தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்' (மத் 1:1) என்றே தனது நற்செய்தியைத் தொடங்குகின்றார் மத்தேயு. இவர் பயன்படுத்தும் 'தாவீதின் மகன்' மற்றும் 'ஆபிரகாமின் மகன்' என்னும் இரண்டு வார்த்தைகள் அவரது நற்செய்தியின் நோக்கத்தைத் தெளிவுபடுத்துகின்றன. அதாவது, ஆபிரகாமையும், தாவீதையும் தெரிந்தவர்கள் யார்? யூதர்கள் அல்லது இஸ்ரயேலர்கள் அல்லது எபிரேயர்கள் - இந்த மூன்று வார்த்தைகளுமே ஒரே மக்களைக் குறிப்பவையே. இந்த மக்களுக்கு இயேசு என்ற ஒரு புதிய நபரை அறிமுகம் செய்கின்றார் மத்தேயு. தெரிந்த இருவரை (தாவீது, ஆபிரகாம்) வைத்து தெரியாத ஒருவரை (இயேசு கிறிஸ்து) அறிமுகம் செய்கின்றார். நன்றாகக் கவனிக்க வேண்டும் இங்கே. இயேசுவை அறிமுகம் செய்யவில்லை மத்தேயு. மாறாக, இயேசு கிறிஸ்துவை அறிமுகம் செய்கிறார். 'கிறிஸ்து' என்பது ஒரு அடைமொழி. நமக்கு காந்தியை அறிமுகம் செய்வதற்கும் மகாத்மா காந்தியை அறிமுகம் செய்வதற்கும், அல்லது கௌதமரை அறிமுகம் செய்வதற்கும் கொளதம புத்தரை அறிமுகம் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது தானே!

ஆக, இயேசு என்னும் வரலாற்று நபர் 'கிறிஸ்து' வாக எப்படி மாறினார் என்பதையும், அவர் எவ்வாறாக தாவீதின் மகனாக, ஆபிரகாமின் மகனாக, அதாவது வாக்களிக்கப்பட்டவராக இருக்கிறார் என்பதைச் சொல்வதே மத்தேயு நற்செய்தி.

மத்தேயுவின் அட்டணை பதினான்கு, பதினான்கு என மூன்று பதினான்கு நாற்பத்திரண்டு என பிரிக்கப்பட்டுள்ளது. ஏழு என்பது யூத வழக்கில் முழுமையைக் குறிக்கும். பதினான்கு என்பது முழுமையிலும் முழுமை. அதிலும் மூன்று பதினான்கு என்பது முழுமையிலும், முழுமையிலும் முழுமை.

இயேசுவை இந்த '42' என்ற எண்ணை வைத்து முழுமைப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் மத்தேயு பல பெயர்களைத் தவிர்த்திருக்கிறார் (எகா. அகசியா, யோவாஸ், அமாசியா, யெகோயாகிம் போன்றவர்கள் இல்லை. மேலும் மத்தேயு தாமார், ராகாபு. ரூத்து மற்றும் பெத்சேபா என்னும் நான்கு பெண்களின் பெயரையும் சேர்க்கின்றார். தலைமுறை அட்டவணையில் ஆண்களின் பெயரை மட்டுமே குறிப்பிடுவது அன்றைய மரபு. அந்த மரபை மீறுகின்றார் மத்தேயு. எல்லாப் பெண்களையும் குறிக்க நினைத்திருந்தால் சாரா, ரெபேக்கா, லேயா, ராக்கேல் என பிதாப்பிதாக்களின் துணைவியார்கள் பெயரையும் சேர்த்திருக்கலாமே?

மத்தேயு குறிப்பிடும் நான்கு பெண்களுமே கொஞ்சம் 'ஒரு மாதிரியான' பெண்கள். அதாவது, தன் மாமனாரோடு உடலுறவு கொண்டு குழந்தை பெற்றுக்கொள்கின்றார் தாமார். யோசுவாவின் உளவாளிகள் எரிகோவை உளவு பார்க்கச் சென்றபோது அங்கே விலைமாதுவாக இருந்தவர் ராகாபு, ஒரு வயலின் உரிமையாளரோடு யாருக்கும் தெரியாமல் அறுவடைக் காலத்தில் களத்தில் இரவு முழுவதும் சேர்ந்து உறங்கியவர் ரூத்து. தாவீதின் தூக்கமின்மைக்கும், மாலைநேர நடைக்கும் விலையாக வந்தவர் உரியாவின் மனைவி பெத்சேபா.

இந்தப் பெண்கள் தலைமுறை அட்டவணையில் இடம் பெறுவதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன:

அ. ஒன்று கடவுளின் பிரசன்னம் மனித வலுவின்மையிலும் வெளிப்படும்.

ஆ. இந்த நான்கு பெண்களுமே 'புறவினத்தார்கள்' - கடவுளின் மீட்புத் திட்டத்தில் புறவினத்தாருக்கும் பங்கு இருக்கிறது என்பதைக் குறிக்கவே நற்செய்தியாளர் இந்தப் பெண்களின் பெயரைக் குறிப்பிடுகின்றார்.

மேலும், மத்தேயு ஆற அமர தலைமுறை பெயரைச் சொல்லிக் கொண்டே வந்துவிட்டு, திடீரென முடித்து விடுகின்றார்.

'மாத்தானின் மகன் யாக்கோபு. யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு' (1:17).

இந்த வசனத்தில் இரண்டு பிரச்சினைகள்:

அ. யோசேப்புக்கு முன் வம்படியாக மரியாவின் கணவர் எனச் சேர்க்கும் மத்தேயு, இயேசுவை மரியாவிடம் பிறந்தவராகக் காட்டுகிறாரே தவிர யோசேப்பின் வழி பிறந்தவராகக் காட்ட மறுக்கின்றார். யோசேப்புக்குத் தான் தாவீதின் வழி மரபு இருக்கிறது. மரியா அரச மரபைச் சார்ந்தவர் அல்ல. அவர் ஆரோன் அல்லது லேவி இனத்தைச் சார்ந்தவராக இருந்திருப்பார். 'தாவீதின் மகன் இயேசு' என முதலில் சொல்லும் மத்தேயு, கடைசியாக அதைத் திரும்பச் சொல்ல ஏன் தயக்கம் காட்டுகிறார்?

ஆ. மரியாவிடம் பிறந்தவர் கிறிஸ்து என்னும் இயேசு என்று சொல்கிறாரே தவிர, இயேசு என்னும் கிறிஸ்து என்று சொல்லவில்லை. 'இவர் தான் மகாத்மா என்னும் காந்தி' என்று சொன்னால் பொருந்துமா? முதலில் காந்தியாக இருந்தவர் தான் பின் மகாத்மாவாக மாறுகிறார். அதுபோலத்தான் இயேசுவாக இருந்தவர் தான் கிறிஸ்துவாக மாறுகின்றார்.

இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் ஒரே பதில்: இயேசு மனித அட்டவணைக்குள் பிறந்தாலும் அவர் மனிதர்களின் உறவால் பிறக்கவில்லை எனவும், 'அதையும் தாண்டி புனிதமான' ஒரு இறை-மனித உறவில் பிறந்தார் எனவும் அடிக்கோடிட விரும்புகிறார் மத்தேயு.


1 comment:

  1. இயேசு மனித உறவையும் தாண்டி ஒரு புனிதமான 'இறை மனித உறவில்' பிறந்தார் என்பதை அடுக்கோடிட விரும்புகிறார் மத்தேயு...ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மையே.ஆனால் மீட்புத் திட்டத்தில் மரியா,யோசேப்பும் இருவருக்குமே சம் பங்கிருப்பினும் ஒரு 'பெண்மையை', 'தாய்மையை' பெருமைப்படுத்தும் நோக்கத்தில் " மரியாவிடம் பிறந்தவர் கிறிஸ்து என்னும் இயேசு" என்று குறிப்பிட்டிருக்கலாமோ!!
    " கடவுளின் பிரசன்னம் மனித வலுவின்மையிலும் வெளிப்படும்"....மனதுக்கு ஆறுதல் தரும் அழகான பதிவு....பாராட்டுக்கள்!

    ReplyDelete