Tuesday, October 7, 2014

தலைமுறை அட்டவணை - 3

லூக்கா எழுதும் அட்டவணை

லூக்காவின் தலைமுறை அட்டவணை (3:23-38) நற்செய்தியின் தொடக்கத்தில் இல்லாமல் இயேசு தன் பணிவாழ்வைத் தொடங்குமுன் இருக்கின்றது. இயேசுவின் திருமுழுக்கிற்குப் பின் இயேசுவின் மூதாதையர் பற்றிப் பேசுகின்றார் லூக்கா.

இயேசுவை யோசேப்பின் மகன் என்று எழுதாமல், 'யோசேப்பின் மகன் என்று கருதப்பட்டார்' என மக்களின் எண்ணத்தில் இருந்ததை எழுதுவதுபோலத் தொடங்கி, இயேசுவை ஆதாமின் மகன் எனக் காட்டி, ஆதாம் கடவுளின் மகன் என முடிக்கின்றார்.

லூக்காவின் தலைமுறை அட்டவணை எல்லாரையும் உள்ளடக்கக் கூடிய ஒன்றாக இருக்கின்றது. இயேசுவின் அட்டவணையை அப்படியே இன்று வரை நாம் நீட்டினால் நாம் அவருடைய பிள்ளைகள் என்று நினைக்கலாம். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. இயேசுவுக்குப் பின் அவரது தலைமுறை இல்லை. ஆகவே, இயேசுவை 'அப்பா' என்று அழைப்பதை விட சகோதரர் என்று அழைப்பதே பொருந்தும்.

லூக்காவின் தலைமுறை அட்டவணையில் 76 பெயர்கள் இருக்கின்றன (7ஐ 12ஆல் பெருக்கினால் வரும் தொகை). ஏழும், பன்னிரண்டும் கூட முழுமையைக் குறிப்பனவையே. மேலும் யூத மரபில் 76 என்பது பாவங்களை மன்னிப்பதைக் குறிக்கும் எண்.

இரண்டு தலைமுறை அட்டவணைகளுக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் இருந்தாலும் இரண்டுமே இயேசுவை தாவீதின் மகனாக முன்வைப்பதில் மும்முரமாக இருக்கின்றன. இயேசு தாவீதின் மரபில் வரும் மெசியா என்பதை மையமாக வைத்தே மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் தங்கள் தலைமுறை அட்டவணைகளை எழுதுகின்றனர்.

மேலும் இந்த அட்டவணைகள் இயேசு 'கன்னியிடம்' பிறந்தார் என்பதையும் அடிக்கோடிடுகின்றன. எந்த வகையிலும் யோசேப்பின் உடல் வழி மகன் என இரண்டு நற்செய்தியாளர்களுமே எழுத மறுக்கின்றனர்.

தலைமுறை அட்டவணை என்பது ஒரு இலக்கிய நடை. ஒருவரின் தலைமுறையை நினைவுகூறுவது அவரின் மேன்மையைக் குறித்தது.

சக்கரியாவுக்கு திருமுழுக்கு யோவான் பிறந்ததற்கும், மனோவாவிற்கு சிம்சோன் பிறந்ததற்கும் உள்ள இலக்கிய நடைப் பொருத்தத்தை நாளை பார்ப்போம்.


1 comment:

  1. தந்தையே! இயேசு எந்த வகையிலும் யோசேப்பின் உடல்வழி மகன் அல்ல என்பதுதானே உண்மை? அப்படியிருக்க நற்செய்தியாளர்கள் இயேசு யோசேப்பின் உடல்வழி மகன் என எழுத மறுக்கின்றனர் என்று குறிப்பிட்டிருப்பதன் பொருள் என்ன என்று விளங்க வில்லை.விளக்கம் தர இயலுமா? நன்றி....

    ReplyDelete