Thursday, October 30, 2014

அதை நிறைவு செய்வார்!

'ஏனெனில் தொடக்கமுதல் இன்றுவரை நீங்கள் நற்செய்திப் பணியில் என்னோடு பங்கேற்று வருகிறீர்கள். உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள்வரை அதை நிறைவு செய்வார் என உறுதியாய் நம்புகிறேன்.' (பிலிப்பியர் 1:5-6)

திருத்தொண்டராகத் திருநிலைப்படுத்தப்படும் வழிபாட்டில் அருட்பணிநிலைக்குத் தயாரிப்பில் இருக்கும் ஒருவர் முதலில் வாக்களிப்பது 'மணத்துறவு'. இந்த வாக்குறுதியைத் தொடர்ந்து வருவது 'மறைமாவட்ட ஆயருக்கு கீழ்ப்படிதல்'. இந்த இரண்டும் அடுத்தடுத்து இருக்கும். இந்த இரண்டு வாக்குறுதிகளின் நிறைவில் ஆயர் மொழிவது மேற்காணும் தூய பவுலடியாரின் வார்த்தைகளே:

'உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர் கிறிஸ்து இயேசுவின் நாள்வரை அதை நிறைவு செய்யட்டும்'.

நாளைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கவிருக்கும் பகுதியும் இதுவே.

மகாபாரதத்தில் துரியோதனன் ஒரு கட்டத்தில் கிருஷ்ணனின் கேட்பார்: 'கண்ணா! எனக்கு நன்மை, தீமையெல்லாம் தெரியாததால் நான் தீயவானக இருக்கிறேன் என நினைக்கிறாயா? இல்லை. தருமனுக்குத் தெரிவதை விட எனக்கு நல்லது என்ன என்றும் கெட்டது என்ன என்றும் தெரியும். ஆனால் என்னால் தீமையை விடுத்து, நன்மையைப் பற்றிக் கொள்ள முடிவதில்லை. அப்படி முடிந்தாலும் நான் நன்மையில் நிலைத்திருக்க முடிவதில்லை.

ஆக, துரியோதனின் பிரச்சனை 'நன்மையில் நிலைத்திருக்க முடியாத நிலை'. அவரிடம் விடாமுயற்சி இல்லை.

துரியோதனன் நல்லவன் என்பதற்கு அழகிய உதாரணம் கர்ணன் திரைப்படத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் கர்ணனும், துரியோதனின் மனைவியும் சதுரங்கம் ஆடிக்கொண்டிருப்பார்கள். துரியோதனன் வருவதைக் கண்ட மனைவி திடீரென ஆட்டத்தை விட்டு எழுவாள். அப்போது அவளின் கையைப் பிடிக்க முனைகின்ற கர்ணன் தவறுதலாக அவளது இடுப்பைப் பிடித்துவிடுவான். அப்போது அவள் இடுப்பில் அணிந்திருந்த மேகலை அறுந்து முத்துக்கள் சிதறுண்டு ஓடும். கர்ணன் அப்படியே பதறி விடுவான். அப்போது பின்னால் வருகின்ற துரியோதனன், 'சிதறிய முத்துக்களை எடுக்கவா, கோர்க்கவா?' என்று சொல்லிக் கொண்டே சிதறிய முத்துக்களை எடுக்கத்  தலைப்படுவான். 'என்னை மன்னித்துவிடு!' என்று கர்ணன் கேட்கும் முன்பே, 'உன்னையும் என் மனைவியையும் நான் அறியாதவனா?' என்று கட்டித் தழுவிக் கொள்வான். இந்த நிகழ்வை பின் ஒருமுறை தன் தாய் குந்திதேவியிடம் சொல்லும் கர்ணன், 'துரியோதனன் ஒரு மனித தெய்வம்!' என்பான்.

துரியோதனன் நல்லவன் தான். ஆனால், எப்போதாவது நல்லவன்.

இன்றைக்குத் தேவை எப்போதுமே நல்லவனாக இருப்பது.

அமல மரி தியாகிகள் சபை என்றழைக்கப்படும் துறவற சபையில் 'விடாமுயற்சி' என்ற நான்காவது வார்த்தைப்பாடும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேற்காணும் இறைவாக்குப் பகுதியை வாசித்தபோது புனே குருமடத்தில் நான் திருத்தொண்டராக ஏற்படுத்தப்பட்ட நிகழ்வுதான் (மேலே காணும் புகைப்படம்) நினைவிற்கு வந்தது.

சிரமேற்கொண்டிருக்கும் எந்தப் பணியிலும் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். இருந்தாலும், செய்ய வேண்டிய பணியைத் தொடர்ந்து, விடாமுயற்சியோடு செய்யும் வரம் கேட்கிறேன் இறைவனிடம்!


1 comment:

  1. இன்று காலைத்திருப்பலியில் வாசிக்கப்பட்ட திருமுகம் என்மனத்தைத் தொட்டது உண்மை.இது எந்த அருட்பணியாளருக்கும் பொருந்தக்கூடியது.தங்களின் புகைப்டத்தையும் , அந்த முகத்திலிருக்கும் 'innocense'ஐயும் பார்க்கும்போது எல்லா அருட்பணியாளர்களுமே இந்த மனநிலையோடுதான் தங்கள் அழைத்தலைத்தொடங்கி இருக்க வேண்டும் என்று புரிகிறது.தங்களின் இந்நிலை தொடரவும்,எந்நிலையிலும் தாங்கள் செய்ய வேண்டிய பணியைத்தொடர்ந்து,விடாமுயற்சியுடன் செய்யும் வரத்தையும் தங்களுக்காகவும் அனைத்து பணியாளர்களுக்காகவும் இறைவனிடம் வேண்டுவேன்.'மகா பாரத' நிகழ்ச்சியை ஒரு கவித்துவத்தோடு கூறியுள்ளீர்கள்.மற்ற சமய இதிகாசங்களில் உள்ள நல்ல விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளாமல் போனது பெரிய துரதுருஷ்டமே! இனிமேலாவது தெரிந்து கொள்ள முயற்சிப்போம்...

    ReplyDelete