Wednesday, October 23, 2013

எங்களைக் கல்லால் எறியாமல் விடுவார்களா?


அதற்கு மோசே, 'அது முறையல்ல. அவ்வாறு செய்தால் எகிப்தியருக்கு அருவருப்பானதை எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நாங்கள் பலியிடுவதாகும். எகிப்தியருக்கு அருவருப்பானதை அவர்கள் கண்முன் நாங்கள் அப்படிப் பலியிட்டால் அவர்கள் எங்களைக் கல்லால் எறியாமல் விடுவார்களா? பாலைநிலத்தில் நாங்கள் மூன்று நாள்கள் வழிநடந்து, எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு, அவர் எங்களுக்குச் சொல்வதுபோல் பலியிடுவோம்' என்றார். (விடுதலைப்பயணம் 8:26-27)

யாவே இறைவனிடம் முறையிடும் மோசேக்கு, 'இதோ நான் அறிகுறிகள் வழியாக என்னை வெளிப்படுத்துவேன். பார்வோனின் மனம் கடினமுற்றாலும் இறுதியில் நீங்கள் விடுதலை பெறுவீர்கள்' என்று நம்பிக்கை தெரிவிக்கின்றார். 'பார்வோன் எனக்கு எப்படி செவிசாய்ப்பான்?' என்ற மோசேயின் கேள்விக்கு விடையாக ஆரோனை உடன் அனுப்புகின்றார் இறைவன்.

பார்வோனின் பிரசன்னத்திற்கு வரும் மோசேயும், ஆரோனும் கடவுளின் அறிகுறிகளை அவன் முன் செய்து காட்டுகின்றனர். ஆனால் பார்வோனின் மனம் மாறவில்லை. ஆண்டவர் அனுப்பும் பத்துக் கொள்ளை நோய்கள் தொடங்கித் தொடர்கின்றன:

1. தண்ணீர் இரத்தமாய் மாறுகிறது.

2. தவளைகள்.

3. கொசுக்கள்.

4. ஈக்கள்.

5. கால்நடைகள் இறப்பு.

6. கொப்புளங்கள்.

7. கல்மழை.

8. வெட்டுக்கிளிகள்.

9. காரிருள்.

10. தலைமகன் இறப்பு.

நான்காம் அறிகுறியைப் பார்த்த பார்வோன் அவர்களை அழைத்து '50-50' டீல் பேசுகிறான். பலிசெலுத்தத்தானே போகவேண்டும் என்கிறீர்கள். இங்கேயே பலி செலுத்துங்கள் என option கொடுக்கிறான். 

'இங்கே நாங்கள் பலி கொடுத்தால் அது எகிப்தியர்களுக்கு அருவருப்பாய் இருக்குமே!' என்கிறார் மோசே. 

'ஒருவருக்கு உணவு மற்றவருக்கு மருந்து' என்பார்கள். ஒருவரது கலாச்சாரம் மற்றவருக்கு முட்டாள்தனம். மனித குலத்தின் தொடக்கத்திலிருந்தே 'இரு-புலம்' இருந்து கொண்டேதான் இருக்கின்றது: 'எனது – உனது'. 'என் கடவுள் - உன் கடவுள்'. 'என் நாடு – உன் நாடு'. 'என் மொழி – உன் மொழி'. 'என்னைச் சார்ந்தவர் – உன்னைச் சார்ந்தவர்'. இந்தப் பின்புலங்களில் மனித மூளை நம்மைச் சார்ந்தது அனைத்தும் நல்லது எனவும், நம்மைச் சாராதவை அனைத்தும் தீயது எனவும் முடிவு கட்டுகிறது. இந்த இருபுலச் சண்டைதான் இங்கே மேலோங்கி நிற்கின்றது.

என்ன காரணத்தால் பிறரை நமக்குப் பிடிப்பதில்லை. 'அந்நியரைப் பார்த்துப் பயப்படுதலை' xenophobia என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். அந்நிய நாடு, அந்நிய மக்கள், வேறு ஊர், வேறு மொழி என்றாலே நமக்குப் பல நேரங்களில் பயம், சந்தேகம் தொற்றிக் கொள்ளும். தொடக்கத்தில் அடுத்தவரோடு பேசவும், பழகவும் நிறைய நேரம் தேவைப்படும். இந்தப் பயத்திற்குக் காரணம் நாம் நம் வேற்றுமைகளை மையப்படுத்துவதுதான். இந்த வேற்றுமைகளை மையப்படுத்துவதற்குப் பதிலாக ஒற்றுமைகளை மையப்படுத்தினால் இந்த பயம் களைந்து விடும்.

அடுத்தவர்களை அருவருப்பானவர்கள் என்று நாம் சொல்லக் காரணம் அவர்கள் நம்மிடமிருந்து வித்தியாசமாக இருக்கிறார்கள் என்பதுதான். வித்தியாசங்களை மையப்படுத்தாமல் பொதுவானவைகளை மையப்படுத்தினால் பயம், தீர்ப்பிடுதல் குறைந்து விடும்.

ஒவ்வொருவருக்கும் அவரின் தனிப்பட்டவைகள் இருக்கின்றன. அவைகளை மதிப்பதும் நம் கடமை. எனக்கு நல்லது என்பதற்காக அதை மற்றவர்களுக்கும் நல்லது எனத் திணிக்க முயல்வது வன்முறை.

'எங்களைக் கல்லால் எறியாமல் விடுவார்களா?'

1 comment:

  1. Anonymous10/23/2013

    மோசேக்குத் துணையாக ஆரோனை அனுப்பிய தேவன் நாம் துன்பப்படும் நேரங்களிலும் பல ஆரோன்களை அனுப்புகிறார் அவர்களையும், அவர்கள் வழியாக
    நம்மை வந்து
    சேரும் பல அறிகுறிகளையும் இனம் கண்டு கொள்வோம் நம்மைச்சுற்றியுள்ள சகோதரர்களை அவர்களின் நிறைகுறைகளோடு அன்பு செய்வோம். பாராட்டுக்கள் கண்ணா.இரவு வணக்கம் உங்களுக்கு.

    ReplyDelete