Friday, August 3, 2018

சந்தர்ப்ப அறநெறி

நாளைய (4 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 14:1-12)

சந்தர்ப்ப அறநெறி

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகளில் உருவெடுத்த அறநெறியின் பெயர் 'சந்தர்ப்ப அறநெறி' (சிட்டுவேஷன் எதிக்ஸ்). இதை முன்மொழிந்தர் ஜோசப் ஃப்ளட்சர் என்பவர். இவருக்கு முன் அறநெறியில் இரண்டு புலங்கள் மேலோங்கியிருந்தன: (அ) அதிகப்படியான சட்டம் - சட்டம் எல்லாருக்கும் பொதுவானது, (ஆ) சட்டம் இல்லாத நிலை - யாருக்கும் சட்டம் தேவையில்லை. இந்த இரண்டிற்கும் இடைப்பட்டதாக வருவதுதான் சந்தர்ப்ப அறநெறி. அதாவது, ஒவ்வொரு செயலின் நன்மை, தீமையும் அதைச் செய்பவரின் சந்தர்ப்பத்தை, சூழலைப் பொறுத்தே அமைகிறது. ஆக, உலகெல்லாத்துக்குமான அறநெறி என்று எதுவும் கிடையாது. ஆனால் இப்படி யோசித்தால் எல்லாரும் செய்வது சரி என்று ஆகிவிடுமே என்று நினைத்த அவர் அன்பை மையமாக வைக்கிறார். அதாவது, அன்பை அளவுகோலாக வைத்துச் செய்யப்படும் எந்தச் செயலும் சரியானதே.

எடுத்துக்காட்டாக, ஒரு தாய் தன் குழந்தையோடு பேருந்தில் பயணம் செய்கிறார் என வைத்துக்கொள்வோம். அவரோடு பயணம் செய்பவர் திடீரென்று குழந்தையை அவரிடமிருந்து பறித்துக்கொண்டு ஓட விரும்புகிறார். அப்படி ஓடமுனைபவரைத் தன் கையால் இருக்கும் பையால் அடித்துவிடுகின்றார் பெண். அவர் குழந்தையைக் கீழே போட்டுவிடுகின்றார். ஆனால், கீழே விழுந்த அவர் இறந்துவிடுகின்றார். இப்போது இந்தப் பெண் கொலை செய்தாரா? என்ற கேள்விக்கு சந்தர்ப்ப அறநெறி சொல்வது 'இல்லை.அவர் குழந்தையின்மேல் உள்ள அன்பால் அப்படிச் செய்தார்.'

ஆனால் சந்தர்ப்ப அறநெறி எல்லாருக்கும், எல்லா நேரங்களிலும் பொருந்துமா?

நாளைய நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவான் கொலை செய்யப்படும் நிகழ்வை வாசிக்கின்றோம்.

இந்த நிகழ்வில் நான்கு கதைமாந்தர்களைப் பார்க்கிறோம்:

அ. ஏரோது
ஆ. ஏரோதியா - பிலிப்பின் மனைவி. ஆனால் ஏரோதை அன்பு செய்பவள்.
இ. சலோமி - ஏரோதியாவின் மகள்
ஈ. திருமுழுக்கு யோவான்

'சந்தர்ப்பம்' என்ற வார்த்தையை வைத்துப் பார்த்தால்,

அ. ஏரோது 'சந்தர்ப்பத்தை உருவாக்குகிறார்'
ஆ. ஏரோதியா 'சந்தர்ப்பத்தை பயன்படுத்துகிறார்'
இ. சலோமி 'சந்தர்ப்பத்தை செயல்படுத்துகிறார்'
ஈ. திருமுழுக்கு யோவான் 'சந்தர்ப்பத்திற்கு பலியாகிறார்'

சந்தர்ப்ப அறநெறியின்படி பார்த்தால் மேற்காணும் நான்கு பேர்களின் செயல்களும் சரியானதே:

அ. ஏரோதுக்கு தன் வாக்குறுதி பெரிதாக இருந்தது.
ஆ. ஏரோதியாவுக்கு தன் காதல் பெரிதாக இருந்தது.
இ. சலோமிக்கு தன் தாய்க்குக் கீழ்ப்படிதல் பெரிதாக இருந்தது.
ஈ. யோவானுக்கு நீதி பெரிதாக இருந்தது.

எல்லாரும் தத்தம் அன்பு நிலையில்தான் செயல்பட்டார்கள். ஆனால், சந்தர்ப்பத்திற்கு விலைபோனது என்னவோ ஒரு மாசற்ற உயிர்.

நாளைய முதல் வாசகத்திலும் தான் உருவாக்கிய இறைவாக்கு என்னும் சந்தர்ப்பத்திற்காக ஏறக்குறை கொலை செய்யப்படுகின்றார் எரேமியா.

சந்தர்ப்ப இறையியலைக் கடந்த வாழ்வியல் உண்டா?

நாளை நாம் கொண்டாடும் தூய மரிய வியான்னிதான் அந்த வாழ்வியல். மறைமாவட்ட அல்லது பங்கு அருள்பணியாளர்களின் பாதுகாவலர் என்று சொல்லப்படும் இவரின் வாழ்வில் எந்தச் சந்தர்ப்பமும் கூடி வரவில்லை. குருமடத்தில் இவர் மக்கு. உடல்நலத்தில் இவர் ஒரு நோயாளி. நலிந்த தேகம். யாரையும் ஈர்க்காத கண்கள். யாரும் கேட்கமுடியாத பேச்சாற்றல். இவைதான் தன் சந்தர்ப்பம் என அவற்றின் கைதிகளாகிவிடவில்லை இவர்.

தன்னை அழைத்தவர் நம்பிக்கைக்குரியவர் என்ற நிலையில் எளிமை, மணத்துறவு, கீழ்ப்படிதல் என அனைத்திற்கும் ஒற்றை 'ஆம்' கொண்டு பதில் தந்தார். அவரின் 'ஆம்' பலரின் வாழ்வைத் திசைதிருப்பியது.

2 comments:

  1. என்னே ஒரு மனத்தை உருக்கும் பதிவு!. புனித மரிய வியான்னியின் படத்தைப்பார்த்துவிட்டுப் பதிவைப்படிக்க ஆரம்பித்த நான் 'என்னடா தந்தை சம்பந்தமில்லாத விஷயங்களை எழுதுகிறாரே' என சற்று நேரம் குழம்பினேன். சற்று நேரம் தான்,.. என்னமோ " சந்தர்ப்ப அறநெறி" என்று சொல்லிப் புருவங்களைத் தூக்கவிட்டு நாளைய நற்செய்தியை முதல் வாசகத்தோடு முடிச்சுப்போட்டு அப்ப்ப்பா...கடைசியாகத் தொட்டு விட்டார் புனித மரிய வியான்னியை.சிறிது காலம் குருமாணவர்களுக்கு ஆங்கிலம் பயிற்றுவித்தபோது எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் புனிதர் எனக்கு மிக நெருக்கமானவர்.காரணம்....ஆம் ஒரு நோயாளியான,நலிந்த தேகமும்,யாரையும் ஈர்க்காத கண்களும், அதே மாதிரியான பேச்சாற்றலும் கொண்டவரான இவரை இறைவன் ' பங்கு அருட்பணியாளர்களின் பாதுகாவலர்' எனும் நிலைக்கு உயர்த்தியுள்ளார் என்பதுதான் அது..ஆனாலும் இக்காரணங்களுக்காக இவர் ஒரு " சந்தர்ப்பக் கைதி" யாகிவிடவில்லை என்பது தந்தை இவருக்குச் சூட்டும் மகுடம்.
    "தன்னை அழைத்தவர் நம்பிக்கைக்குரியவர் என்ற நிலையில் எளிமை,மணத்துறவு,கீழ்ப்படிதல் என அனைத்திற்கும் ஒற்றை 'ஆம்' கொண்டு பதில் தந்த இவரின் வாழ்வு பலரின் வாழ்வைத்திசை திருப்பியது." இந்தப் புனிதரைக்குறித்த தந்தையின் ஒவ்வொரு எழுத்தும் அனைத்து அருட்பணியாளர்களுக்கும் பெருமை சேர்ப்பவை.இந்த நன்னாளில் என்னிதயம் கனிந்த வணக்கங்களையும்,வாழ்த்துக்களையும், செபங்களையும் அனைத்து அருட் பணியாளர்களுக்கும் காணிக்கையாக்குகிறேன். இறைவன் தங்கள் அனைவருக்கும் நல்ல உடல்,உள்ள சுகம் தந்து பாதுகாப்பாராக! அன்புடன்......

    ReplyDelete