Friday, August 10, 2018

நம்பிக்கைக் குறைவு

நாளைய (11 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 17:14-20)

நம்பிக்கைக் குறைவு

நாளைய நற்செய்தி வாசகத்தில் தன் சீடர்களால் ஓட்ட முடியாத பேயை தான் ஓட்டிவிட்டு, அவர்கள் தன்னிடம், 'எங்களால் ஏன் ஓட்டமுடியவில்லை?' என்ற கேட்டபோது, 'உங்களது நம்பிக்கைக் குறைவுதான் காரணம்' என பதில் தருகின்றார் இயேசு.

மேலும், 'உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து, 'இங்கிருந்து பெயர்ந்து அங்கு போ' எனக் கூறினால், அது பெயர்ந்து போகும். உங்களால் முடியாது' என்கிறார்.

'மலையைப் பார்த்து பெயர்ந்து போ என்று கூறுவது நடக்குமா?'

இந்தக் கேள்வி எனக்கு சிறுவயதிலிருந்தே எழுந்ததுண்டு. நம்பிக்கை என்பதை நாம் இங்கே எப்படி வரையறை செய்வது? நம்பிக்கை என்பது வெளிப்படுத்தப்பட்ட கோட்பாட்டை ஐயமின்றி ஏற்றுக்கொள்வதா?

எடுத்துக்காட்டாக, 'கடவுள் ஒரே கடவுள் மூன்று ஆள்களாய் இருக்கிறார்' என்பது நமக்கு இயேசு வழியாக, இறைவார்த்தை வழியாக வெளிப்படுத்தப்பட்டது. இந்த வெளிப்பாட்டிற்கு எந்தவொரு ஐயமின்றி நான், 'ஆம்' எனச் சொல்லும்போது இதை முழுமையாக நம்புகிறேன். இப்போது நான் என் கண்முன் இருக்கும் ஒன்றைப் பார்த்து, 'இங்கே போ!' 'அங்கே போ!' என்றால் போகுமா? போகாது. மேலும், அப்படி நடந்தால் உலகத்தில் எந்நேரமும் நிலநடுக்கங்களும், அதிர்வுகளும்தான் இருக்கும். ஒரே நிமிடத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை கொஞ்சம் தமிழகத்திற்கு நகர்த்தி நாமும் பருவமழை பெற்றுக்கொள்ளலாம்.

இயேசுவின் சொல்லாடல் நேருக்கு நேர் அப்படியே எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது அன்று. 'நம்பிக்கை கொண்டால் எல்லாம் நடக்கும்' என்பதை மிகவும் மிகைப்படுத்திச் சொல்வதுதான் 'மலை அங்கே போகும் இங்கே போகும்' என்பது.

நம்பிக்கையினால் ஏதாவது நடக்குமா?

'இறைவனால் இது முடியும்' என்று நம்புவதுதான் நம்பிக்கை.

ஆக, நம்பிக்கை என்பது 'அவருக்கு இது சாத்தியம்' என்ற உறுதியான நிலையில் நான் இருப்பது.

சீடர்கள் தங்கள் செயலால் பேயை ஓட்டிவிடலாம் என நினைத்தனர். ஆனால் அவர்களின் செயல் அதற்குப் போதுமானதாக இல்லை. 'நம்புகிறவனுக்கு எல்லாம் ஆகும்!' என்கிறார். இங்கே நம்புபொருள் இறைவனாக இருத்தல் வேண்டும்.

இருந்தாலும்,

நம்பிக்கை என்பது ஒய்ஃபை சிக்னல் போல. சில நேரங்களில் ரொம்ப ஸ்ட்ராங்காக இருக்கும். எல்லா இணைப்பும் ரொம்ப வேகமாக இருக்கும். வேலை எளிதாக முடியும். சில நேரங்களில் 'மினுக்,' 'மினுக்' என்று மெதுவாக மின்னிக்கொண்டிருக்கும். எதுவும் இணையாது. எந்த வேலையும் முடிவுபடாது. ஆனாலும், இணைப்பில் நாம் இருக்க வேண்டும்.

அவருடைய இணைப்பில் இருந்தால் எந்தவொரு இணைப்பும் இனிதே என எண்ணுவதும் நம்பிக்கையே.

1 comment:

  1. " நம்பிக்கை தானே வாழ்க்கை!" நம் செவிகளுக்குப் பழக்கமானதொரு வாக்கியம். நாம் ஒரு குறிப்பிட்ட கடையை நம்பிவிடின் அவர்கள் பித்தளையைத் தங்கம் என்று கொடுத்தால் கூட ஐயம் கொள்ள மாட்டோம்.இங்கே இயேசு 'மலை பெயரும்' என்று சொல்வதெல்லாம் நம்பிக்கை கொள்வதன் அழுத்தத்தை,அவசியத்தை நமக்கு உணர்த்துவதற்காக இருக்கலாம்' இதை 'உயர்வு நவிற்சி அணி' என்று கூட சொல்லலாம்.அழுத்தமாகச் சொல்கிறார் தந்தை...ஆம்! " இறைவனால் இது முடியும்" என்று நம்புவதுதான் நம்பிக்கை. நாம் கேட்பது கிடைக்கலாம்; கிடைக்காமலும் போகலாம்...ஆனால் " அவருடைய இணைப்பில் இருந்தால் எந்தவொரு இணைப்பும் இனிதே என எண்ணுவதும் நம்பிக்கையே! இதற்கு மேல் அப்பீல் ஏது?

    "அப்படி நடந்தால் உலகத்தில் எந்நேரமும் நிலநடுக்கங்களும், அதிர்வுகளும் தான் இருக்கும்.ஒரே நிமிடத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தமிழகத்திற்குத் திருப்பி நாமும் கொஞ்சம் பருவ மழை பெற்றுக்கொள்ளலாம்." இரசிக்கும் படியான தந்தையின் நகைச்சுவை உணர்வுக்கு வாழ்த்துக்கள்!"

    ReplyDelete