Sunday, August 19, 2018

நிறைவுள்ளவராக விரும்பினால்

நாளைய (20 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 19:16-22)

நிறைவுள்ளவராக விரும்பினால்

நாளைய நற்செய்தி வாசகத்தில் செல்வரான இளைஞர் ஒருவர் இயேசுவிடம் வருகின்றார். 18 முதல் 25 வயதுற்குட்பட்ட இந்த இளவலின் தேடல் என்னை எப்போதும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்குகிறது. இந்த வயசுல என்ன ஆசை இருக்கும் ஒரு இளைஞருக்கு? நல்ல வேலை, கைநிறைய சம்பளம், கைநிறைய மொபைல் ஃபோன், அந்த ஃபோனில் எந்நேரமும் இன்டெர்நட், பைக்கில் பின்னால் அமர ஒரு இளவல், நிறைய ஃபரண்ட்ஸ் என இப்படி நிறைய ஆசை இருந்திருக்க வேண்டும். இவற்றில் எது ஒன்றையாவது கேட்டிருக்கலாம். ஆனால், இவரின் ஆசை, 'நிலைவாழ்வு பெற நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?' எனக் கேட்கின்றார். ஆக, 25 வயதுக்குள் இந்த இளவல் இந்த முதிர்ச்சி பெற்றுவிட்டாரா? அல்லது வாழ்க்கையின் இன்பங்களை எல்லாம் அனுபவித்துவிட்டாரா? அல்லது இன்பங்களைத் துறந்துவிடலாம் என எண்ணிவிட்டாரா?

'நிலைவாழ்வு பெற நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?'

'கட்டளைகளைக் கடைப்பிடி'

'இவையெல்லாம் கடைப்பிடித்துள்ளேன்'

'இன்னும் என்ன குறைவுபடுகிறது?'

'நிறைவுள்ளவராக விரும்பினால் போய் விற்று ஏழைகளுக்குக் கொடும் ...'

இளைஞன் 'நிலைவாழ்வு பெறத்தானே' இயேசுவிடம் ஐடியா கேட்டான். ஆனால், இயேசு இங்கே 'நிறைவுள்ள வாழ்வு' பற்றி சொல்கிறாரே?

'குறைவில்தான் நிறைவு' என்ற புதிய புரிதலைத் தருகின்றார் இயேசு.

ஆனால், அந்த இளைஞன் 'வருத்தத்தோடு செல்கின்றான்'.

ஏன் வருத்தம்? இயேசுவின் ஐடியா ஏற்றுக்கொள்ள கடினமாக இருந்ததா?

'அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது' என நிகழ்வை நிறைவுசெய்கின்றார் மத்தேயு. அப்படி என்ன ஏராளமான சொத்து இருந்திருக்கும்?

'எங்கே புதையல் இருக்கிறதோ அங்கே இதயம் இருக்கும்' என்ற இயேசுவின் மலைப்பொழிவு வார்த்தைகள்படி, இந்த இளவலின் இதயம் சொத்தோடு இணைந்துகொண்டதோ?

நிற்க.

என்னைப் பொறுத்தவரையில் இந்த இளவலின் இந்தச் செய்கை பிடித்திருக்கிறது.

ஏனெனில், 'முடியும்' என்றால் 'முடியும்' என்றும், 'முடியாது' என்றால் 'முடியாது' என்றும் அவரால் முடிவெடுக்க முடிகிறது.

அதே நேரத்தில் ரொம்ப ப்ராக்டிக்கலாகவும் இருக்கிறார். 'சங்கம் செய்ய முடியாததை தங்கம் செய்ய முடியும்' என்று அறிந்திருக்கிறார் இளைஞர். 'பொன்னைவிட ஞானம் மேன்மையானது' என்று சொல்வதெல்லாம் விவிலியத்தில் மட்டும்தான். பொன் இருந்தால் ஞானியை அல்லது ஞானத்தை வாங்கிவிடலாம். இல்லையா?

'பாதி வழி வந்த இளைஞன் மீதி வழி வர முடியாத' இந்த இளைஞன் நமக்குச் சொல்வது என்ன?

'ஆம்' என்றால் 'ஆம்' என்றும் 'இல்லை' என்றால் 'இல்லை' என்று சொல்ல பழகிக்கொள்வது. அது கடவுளுக்கே என்றாலும்.

நாளைய முதல் வாசகத்தில் (எசே 24:15-24) இறைவன் எசேக்கியேல் வழியாகச் சுட்டிக்காட்டும் பிரச்சினை இதுதான். யாவே இறைவனுக்கு 'ஆம்' என்று சொல்லிவிட்டு, தங்கள் செயல்களால் 'இல்லை' என்று சொல்லிவிட்டனர்.

எசேக்கியேல் ஒரு விதிவிலக்கு. தன் இறைவாக்கு வேலைக்காக தன் 'கண்களுக்கு இன்பம் தரும்' மனைவியை இழக்கத் துணிகின்றார்.

நிறைவு என்பது மனதைப் பொறுத்தே. ஆனாலும், கொஞ்சம் ப்ராக்டிக்கலாவும் இருக்கணும்.


1 comment:

  1. " நிலை வாழ்வு" கேட்டு வந்த இளவலுக்கு இயேசு தர விரும்பியது "நிறை வாழ்வு". யாருக்கு எது இல்லையோ அதைத் தர விரும்புவதுவே இறை குணம்." என்ன தான் எனது தேவை?" என்று கூடத் தெரிந்து கொள்ள இயலா நிலையிலிருப்பது " மனித குணம்." பாதி வழி வந்த இளவலால் மீதி வழி வர இயலாமல் போனதற்குக் காரணம் அவன் ப்ராக்டிக்கலாக இருக்க விரும்பியதே என்கிறார் தந்தை. அதுவல்ல காரணம்...அவனது "பேராசையே" காரணம் என்பேன் நான். அவனிடம் இருக்கும் ஒரு நிறைவைக் குறித்த திருப்தியுடன் அடுத்த நிறைவை நோக்கிக் காலடி எடுத்து வைப்பவனே விவேகி.வயிறு முட்ட சாப்பிட்டாலும்,கழுத்து முட்ட சாப்பிட்டாலும்
    சாப்பாடு சென்று சேருமிடம் ஒன்று தானே! ," எசக்கியேல்" போன்றவர்கள் செயற்கரிய செயலைச்செய்யும்போது அவர்களை " விதிவிலக்கு" என முத்திரை குத்தாமல் நாமும் அப்படி இருந்து பார்க்கலாமே என நினைப்பது தானே " நிறை வாழ்வுக்கு" வழி? எது ப்ராக்டிக்கல்என்பது கூட மனதைப் பொறுத்ததே! கொஞ்சம் நிறைவாழ்வை நோக்கியும் முதல் படி எடுத்து வைக்கப் பழகுவோமே!

    " சங்கம் செய்ய முடியாததைத் தங்கம் செய்யும்" தந்தை எங்கிருந்து இது போன்ற பழமொழிப் புதையலைத் தோண்டி எடுக்கிறார்? தெரியவில்லை. வாழ்த்துக்கள்!!!
    தங்கம்

    ReplyDelete