Monday, August 27, 2018

கொசுவை வடிகட்டி

நாளைய (28 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 23:23-26)

கொசுவை வடிகட்டி

மறைநூல் அறிஞர் மற்றும் பரிசேயர்களை இயேசு கடிந்துகொள்ளும் பகுதி நாளைய நற்செய்தி வாசகத்திலும் தொடர்கிறது. இங்கே இயேசு அவர்களின் பிரச்சினையாகச் சுட்டிக்காட்டுவது என்னவென்றால், அவர்களின் முதன்மைப்படுத்தாத நிலை. அதாவது, முதன்மையானதை முதன்மையானதாக வைக்க அவர்கள் மறுத்தனர்.

எப்படி?

முதன்மையாக இருக்க வேண்டிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப்பிடிக்காமல், புதினா, சோம்பு, சீரகம் போன்றவற்றில் பத்தில் ஒரு பங்கு கொடுப்பது பற்றி ஆராய்கின்றனர்.

உணவைத் தூய்மையாக உண்பதற்கு அதன் உட்புறம் தூய்மையாக இருக்க வேண்டும். முதன்மையான உள்புறத்தைக் கண்டுகொள்ளாமல் வெளிப்புறத்தைப் பற்றி அக்கறை கொள்கின்றனர்.

இவ்வாறாக, சின்னஞ்சிறிய கொசுவை வடிகட்டி அதிலிருந்து தப்பிவிட்டதாக நினைப்பவர்கள் பெரிய பெரிய ஒட்டகங்களையே விழுங்கிக்கொண்டிருந்தார்கள்.
நாளை நாம் தூய அகுஸ்தினாரின் திருநாளைக் கொண்டாடுகிறோம். இவரை ஆயராகவும், மறைவல்லநராகவும் கொண்டாடுகிறது திருஅவை. நாம் இன்று பின்பற்றும் நிறைய இறையியல் கோட்பாடுகளுக்கு வித்திட்டவர் இவரே. 'ஒவ்வொரு புனிதருக்கும் ஒரு இறந்தகாலம் உண்டு, ஒவ்வொரு பாவிக்கும் ஒரு எதிர்காலம் உண்டு' என்ற இவரின் வார்த்தைகள் இவரிலேயே நிறைவேறின.

தன் 'ஒப்புகைகள்' என்ற நூலில் இவர் இறைவன் முன்னும், மனிதர்முன்னும் தன் மனம் திறக்கின்றார். இவரிடம் மூன்று பண்புகள் என்னை மிகவும் கவர்கின்றன.

அ. தன்அறிவு

இவர் தன் வாழ்வில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் சீர்தூக்கிப் பார்க்கிறார். தன்னறிவு பெற்றவர்களால்தான் இப்படி செய்ய முடியும். அதாவது, 'இதுதான் நான்' என்று அவர் தன் வலிமை, வலுவின்மை, சிரிப்பு, அழுகை, நிறைவு, குறைவு, கொடை, இழப்பு, நண்பர்கள், தனிமை என வாழ்வின் எல்லாவற்றையும் தன்னைத் தனக்கு வெளியே இருந்து பார்க்கிறார்.

ஆ. அறிவு

இவர் பேச்சுக்கலையின் ஆசிரியராக இருக்கின்றார். இவர் அதற்காக நிறைய புத்தகங்களைப் படித்திருக்க வேண்டும். இவரின் நூல்களை வாசிக்கும் போது இவர் மேற்கோள்கள் காட்டும் விதம் ஆச்சர்யமாக இருக்கிறது. எங்கோ, எப்பொழுதோ பயின்றதை சரியான இடத்தில் மேற்கோள் காட்டுகின்றார். இவரின் எழுத்துக்களே ஒரு ஷெல்ப் இருக்கிறது என்றால், இவர் எழுதுகிற நேரம் போக எவ்வளவு படித்திருப்பார். மேலும், இவர் வெறும் புத்தகங்களைப் படித்தவர் அல்லர். மாறாக, வாழ்வில் தான் எதிர்கொள்ளும் ஒவ்வொருவரையும் புத்தகமாக பார்க்கின்றார்.

இ. துணிவு

'நான் எழுதும் இந்த நூலை பல ஆண்டுகள் கழித்து வாசிக்கும் உம் அடியார் என்னைப் பற்றி என்ன நினைப்பார்?' என்ற கேள்வியை அடிக்கடி தன் 'ஒப்புகைகள்' நூலில் கேட்கின்றார் இவர். மேலும், தன்னை அறிந்த இவர் தன் சக மனிதரிடத்திலிருந்து தன்னை ஒளித்துக்கொள்ளவும் விரும்பவில்லை.

ஏன்?

இவர் இறைவனை முதன்மைப்படுத்தினார். தன் தாயின் கண்ணீர், இறப்பு, தன் நண்பனின் இறப்பு, இழப்பு, தன் நிறைவேறாத திருமணம், தன் முறிந்த உறவு அனைத்தையும் இறைவனில் பார்க்கின்றார். ஆக, 'எல்லாவற்றிலும் இறைவனைப் பார்ப்பதைவிட', 'இறைவனில் எல்லாவற்றையும் பார்க்கின்றார்.' இதுதான் புனித நிலை.

இறைவனில் எல்லாவற்றையும் பார்க்கும்போது நாம் யாரையும் எளிதாக எடை போடவோ, எள்ளி நகைக்கவோ மாட்டோம். நாளைய முதல் வாசகத்தில் தூய பவுல் சொல்வது போல, 'நாம் கடவுளால் ஊக்கம் ஊட்டப்பட்டு, நல்லதையே சொல்லவும்,செய்யவும் உறுதிப்படுத்தப்படுவோம்.'


2 comments:

  1. " தூய அகுஸ்தினார்" இவரைப்பற்றிய செய்திகளைத் தந்தை வழி கேட்டும், அவரைப்பற்றிய தந்தையின் எழுத்துக்களைப் படித்துமே அவரின் இரசிகையாகிப் போனவள் நான்." ஒவ்வொரு புனிதருக்கும் ஒரு கடந்த காலம் உண்டு; ஒவ்வொரு பாவிக்கும் ஒரு எதிர்காலம் உண்டு" எத்தனை உண்மையான வார்த்தைகள்!இவரைப்பற்றித் தந்தை குறிப்பிடும் விஷயங்கள் மிக இயல்பானவை. தன்னையே நிர்வாணமாக்கித் தன் நிறை குறைகளைத் தனக்கு வெளியே இருந்து அலசுவதும்,புத்தகங்களைப் படிப்பது மட்டுமின்றி எங்கோ,என்றோ படித்ததைத் தன் எழுத்துக்களில் மேற்கோள் காட்டுவதும்,தன் எழுத்துக்களைப் படிப்பவர்கள் தன்னைக்குறித்து என்ன நினைக்கக்கூடும் என்ற அஞ்சாமையும் தான் இவரில் விஞ்சி நிற்கும் விஷயங்களாகத் தந்தை குறிப்பிடுகிறார் இவரின் ' ஒப்புகைகள்' எனும் நூலைப்படித்து விட்டு.அவரது அத்தனை எதிர்மறை குணங்களையும் தாண்டி இன்று "இறையியல் கோட்பாடுகள் அனைத்திற்கும் வித்திட்டவர் அவரே" எனும் நிலைக்கு இறைவன் அவரை உயர்த்தியிருக்கிறார் எனில் அத்தனையும் அவரின் அன்னை மோனிக்கா அவருக்காக வடித்த கண்ணீருக்கான பரிசு. அடுத்தடுத்த நாட்களில் தாய்க்கும்,மகனுக்கும் திருஅவை விழா எடுக்கும் பாக்கியம் யாருக்குக் கிட்டும்!
    தூய அகுஸ்தினாரின் நற்குணங்களில் பலவற்றை நான் தந்தையில் பார்க்கிறேன்.இவருக்கும் கூட பல தனித்துவங்களைப் பரிசாகத் தந்துள்ளார் இறைவன். வாழ்த்துக்கள்! "உண்மை" எனும் பண்பு நம்மில் கடுகளவேனும் இருந்தால் கூட,நம்மை மலையாக உயர்த்த வல்லவர் நம் விண்ணகத்தந்தை என்பதே தூய அகுஸ்தினாரின் வாழ்வு நமக்குச் சொல்லும் செய்தி.தந்தையும்,தந்தையைப்போல இன்னும் பல அருட்பணியாளர்களும் தூய அகுஸ்தினாரின் வழியில் திரு அவையின் "தூண்" களாக மாற வேண்டுமென்பதே என் போன்ற " மோனிக்கா" க்களின் விருப்பம்; செபம். " ஒப்புகைகள்" முழுமையாகப் படிக்கக் காத்துக்கொண்டிருக்கிறேன். தந்தைக்கு என் வாழ்த்துக்களும்!! செபங்களும்!!!

    ReplyDelete
  2. Today,I could sense rev fr.Yesu Karunanidhi

    in St.Augustine in certain aspects....
    Especially, scholastic, intellectual, knowledge ( reading books) & foremost united ( more aptly, blended) in Christ...

    No wonder fr.Yesu is a living saint for me.

    ReplyDelete