Tuesday, July 31, 2018

வாங்கிக்கொள்கிறார்

நாளைய (1 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 13:44-46)

வாங்கிக்கொள்கிறார்

நாளைய நற்செய்தி வாசகத்திலும் இயேசுவின் விண்ணரசு பற்றிய உவமைகள் தொடர்கின்றன.

நிலத்தில் மறைந்திருந்த புதையல் மற்றும் அரிய வகையான முத்தைக் கண்டுபிடிக்கின்ற நபர்கள் தங்களுக்குள்ள யாவற்றையும் விற்றி நிலம் மற்றும் முத்தை வாங்கிக்கொள்கின்றனர்.

ஒருவர் சாதாரணமாக ஒரு இடத்தில் தோண்டுகிறார். அந்த இடத்தில் புதையல் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒருவர் தான் கண்ட புதையலை அப்படியே எடுத்துக்கொண்டு போயிருக்கலாம். இல்லையா? அவர் ஏன் போய் தனக்குள்ளதையெல்லாம் விற்று அந்த நிலத்தை வாங்க வேண்டும். ஒருவேளை இன்னும் அங்கே புதையல் கிடைக்க வாய்ப்பு இருக்கும் என்பதாலா? இந்த ஒரு காரணத்திற்காகத்தான் இருக்க முடியும். ஏனெனில் யாருக்கும் தெரியாமல் தோண்டியவர் யாருக்கும் தெரியாமல் புதையலை எடுத்துவிட்டு மீண்டும் குழியை மூடிவிடலாம் அல்லவா!

அதுபோல, வணிகர் ஒருவர் விலையுயர்ந்த முத்து ஒன்றைக் காண்கின்றார். கண்டவுடன் தமக்குள்ளதையெல்லாம் விற்று அந்த முத்தை உடைமையாக்கிக்கொள்கின்றார்.

மேற்காணும் இரண்டு உவமைகளும் இறையரசைப் பற்றி என்ன சொல்கின்றன?

அ. இறையரசைத் தேடுபவரே அதைக் கண்டுகொள்வார்.

ஆ. தேடி அதைக் கண்டுபிடித்த நபர் உடனடியாக செயலாற்ற வேண்டும்.

இ. தான் தேடிய இறையரசைப் பெற்றுக்கொள்ள தன்னிடம் இதுவரை இருந்த அனைத்தையும் விற்றுவிட (விட்டுவிட) வேண்டும்.

மேற்காணும் மூன்று நிலைகளில் ஒன்று குறைவுபட்டாலும் இறையரசு எட்டாக்கனியாகிவிடும்.

இதைத்தான் நாளைய முதல் வாசகத்திலும் பார்க்கிறோம்.

தனது இறைவாக்குப் பணியில் தான் சந்திக்கின்ற சவால்களைப் பற்றி ஆண்டவரிடம் முறையிடுகின்றார் இறைவாக்கினர் எரேமியா.

'நான் கடன் கொடுக்கவும் இல்லை. கடன் வாங்கவும் இல்லை. என்னை எல்லாரும் சபிக்கிறார்கள்.'

- கடன் கொடுப்பவர் தயை காட்டுகிறார். கடன் வாங்குபவர் தயை பெறுகிறார். ஆனால், காலப்போக்கில் கடன் வாங்கியவர் கடனைத் திருப்பிக் கொடுக்காதபோது கடன் கொடுத்தவரின் தயை மறைந்துவிடுகிறது. அதுபோல, கடன் வாங்கியவர் கடனைத் திருப்பிக் கொடுத்தாலும் அவர் யாரின் தயைiயும் தேவையில்லை என்று ஆகிவிடுகின்றார். ஆக, கடன்பட்டிருத்தல் அல்லது கடன் கொடுத்தல் அடுத்தவரின் கோபத்திற்கு நம்மை ஆளாக்கிவிடுகிறது.

'என் கை உன்மேல் இருந்ததால் நான் தனியனாய் இருந்தேன்.'

- இறைவனின் அழைப்பைப் பெறுபவர்கள் அனுபவிக்கும் தனிமையின் பொருளை நான் இங்கே காண்கிறேன். அதாவது, அவரின் கை உள்ள இடத்தில் வேறு எவரும் கையை வைக்க இயலாமல் போய்விடுகிறது. காலப்போக்கில் அதுவே அழைக்கப்படுபவருக்கு தனிமையைக் கொண்டுவந்துவிடுகிறது.

எரேமியாவின் இந்த முறையீட்டிற்கு இறைவன் சொல்வது ஒன்றே ஒன்றுதான்:

'பயனில நீக்கி, பயனுள பேசின், நீ என் இறைவாக்கினனாய் இருப்பாய்.'

- அதாவது, நீ பேசுவது, முறையிடுவது எல்லாம் தேவையற்றது. தேவையற்றதை விடுத்து தேவையான என்னை மட்டும் பற்றிக்கொள் என்கிறார் ஆண்டவராகிய கடவுள்.

கவனமாகத் தேடுதல் - வேகமாகச் செயலாற்றுதல் - உடனடியாக இழத்தல் இவை இறையரசைப் பெற்றுத்தருகின்றன.

2 comments:

  1. Nice Reflection Yesu. Thanks.

    ReplyDelete
  2. எரேமியா.... இவரைக்குறித்த விஷயங்களனைத்திலும் ஒரு சோக இழையோடுவதை நான் கவனித்துள்ளேன். இறையழைத்தலில் நிறைவு கண்ட அருட்பணியாளர்களின் யூபிலி நிகழ்வுகளில் கூட இவரைச்சார்ந்த சோகமான இசையைக்கேட்டுள்ளேன்.இதில் மிகவும் என்னைப்பாதித்திருப்பது அவரது " தனிமை" குறித்த உணர்வு தான்.இந்தத் தனிமை அவரை மட்டுமல்ல; அனைத்து அருட்பணியாளர்களையுமே ஆட்டுவிக்கக் கூடிய ஒன்றுதான்.இதைத்தான் தந்தையின் வரிகள் " அவரின் கை உள்ள இடத்தில் வேறு எவரும் கை வைக்க இயலாமல் போய்விடுகிறது" எனக் குறிப்பிடுகிறார். தந்தைக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்...' "பயனில நீக்கி,பயனுள பேசும் தங்களைப்போன்றவர்கள் இறைவனின் இறைவாக்கினராய் இருப்பீர்கள்; "தேவையற்ற மற்றதை விடுத்து என்னை மட்டும் பற்றிக்கொள்" என்று சொல்லும் ஆண்டவர் தங்களின் அருகில் இருக்கையில் தனிமைத்துயர் தங்களை என்ன செய்யும்? கடன் வாங்கியவர்,கடன் கொடுத்தவர் நிலையில் உள்ள எங்களைப்போன்றவர்களையே இறைவனின் திருக்கரம் தாங்கி நிற்கும் போது 'அவரின், அரசிற்காக அனைத்தையும் இழந்து நிற்கும் தங்களைப்போன்றவர்களை அவர் கைவிடுவாரா என்ன? களிகூறுங்கள்....தங்களைப்போன்றவர்களால் தான் இந்த உலகமே உய்வு கொள்கிறது!"அழகானதொரு பதிவு! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete