Thursday, July 26, 2018

பாறைப் பகுதிகளில் விதை

நாளைய (27 ஜூலை 2018) நற்செய்தி (மத் 13:18-23)

பாறைப் பகுதிகளில் விதை

நாளைய நற்செய்தி வாசகத்தில் விதைப்பவர் எடுத்துக்காட்டை வாசிக்கின்றோம். இதை வாசிக்கும் ஒவ்வொரு பொழுதும் என்னுள் ஒரு நெருடல் எழுவதுண்டு. விதைகள் சரியாகப் பலன் கொடுக்காமல்போவதற்கு யார் காரணம்? விதைகளா? இல்லை! விதைகள் விழுந்த இடங்களா? இல்லை. விதைப்பவர்தான் காரணம் என்பேன் நான்.

விதைப்பவருக்குத் தன் கண்முன் இருக்கின்ற நிலம் தெரியும். அப்படியிருக்க அவர் பாதைகளிலும், முட்செடிகளுக்குள்ளும், பாறைகள்மேலும் ஏன் விதைகளைத் தூவ வேண்டும்? விதைகள் அந்த அளவிற்கு மதிப்பற்றுப் போய்விட்டனவா அவருக்கு? எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் விதைகளை அவர் அலைக்கழிக்கலாமா?

சரி. அவருக்கு விதைக்கத் தெரியவில்லை என்ற நிலையில் நற்செய்தி வாசகத்தைப் பார்ப்போம்.

பாறைமீது விழுந்த விதைகள் மேல் எனக்கு எப்போதும் ஒரு பாசம் உண்டு. ஏனெனில் என் வாழ்வை நான் அப்படித்தான் பார்க்கிறேன்.

பாதையோரத்தில் விழுந்த விதைகளுக்கும், முட்செடிகள் நடுவே விழுந்த விதைகளுக்கும் ஆபத்து விதைகளுக்கு வெளியே இருக்கின்றது. ஆனால், பாறைமீது விழுந்த விதைகளுக்கு ஆபத்து அவைகளுக்கு உள்ளேயே இருக்கிறது. அதாவது, ஆழம் தெரியாமல் வேர் விடுவார்கள் இவர்கள். பின் அந்த இடத்தில் ஆழம் செல்ல வழியில்லை என்றவுடன் வாடிப்போவார்கள். வேகமாக வளர்வார்கள். வேகமாக சாய்வார்கள். எதிலும் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்.

இன்றைக்கு உள்ள நம் வாழ்க்கை ஓட்டம் நம்மை பாறைமேல் விழுந்த விதைகள்போலத்தான் ஆக்கியிருக்கிறது. கடவுள் நம்பிக்கையில் ஆழமில்லை. மனித உறவுகளில் ஆழமில்லை. நாம் செய்யும் செயல்கள் நமக்கே போரடிக்கின்றன. தடுமாற்றம் அதிகமாக இருக்கின்றது.

ஆனால், சிறிது காலமே என்றாலும் இனிது வாழ்தலும் பயன்தருமே.

2 comments:

  1. பாராட்டுக்கள். வித்தியாசமான சிந்தனைகள். பாறை மீது விழுந்த விதைமீது தந்தைக்கு பாசம் இருந்தாலும், சிந்தனையில் ஆழமும் அர்த்தமும் உள்ளது. Bravissimo.

    ReplyDelete
  2. எதையுமே வித்தியாசமாகப் பார்க்கும் தந்தை இன்றைய விவிலியப்பகுதியையும் அப்படியே பார்க்கிறார்.விதைத்தவர் சரியாக விதைக்கவில்லையாம்! "ஆடத்தெரியாத நங்கை அரங்கம் கோணல்"என்று சொன்ன கதையாக இல்லை?( தந்தைக்கு கோபம் வேண்டாம். இந்த இடத்திற்குப் பொருத்தமாக இருந்ததால் சும்மா கிட்டிங்..அவ்வளவுதான்..)எங்கே விதைக்கப்பட்ட விதைகள் எனினும் அவற்றிற்கு உள்ளேயோ,வெளியேயோ இருந்து வரப்போகிற ஆபத்து நிஜம்.எப்படி இதை மேற்கொள்வது? எங்கிருந்தேனும்,யார்வழியேனும், எப்பொழுது வேண்டுமானாலும் நம்மீது விதைகள் தூவப்படலாம்.அவ்விதைகளை நாம் உள் வாங்கிக்கொள்ளவும்,பயன்தரவும் நம்மனத்தை எப்பொழுதுமே பண்படுத்தி வைத்திருப்பதுவே விவேகம் என நினைக்கிறேன்.இறைவனோ,பிறரோ இல்லை நாமோ நமக்காகப்பல முயற்சிகள் எடுக்கலாம்.இந்த முயற்சிகள் அனைத்தும் விழலுக்கிறைத்த நீராக மாறாமல் இருக்க நம் மனமாகிய நிலத்தைப் பண்படுத்தி வைப்போம்; பலன் பெறுவோம்." தடுமாற்றம் மிக்க வாழ்க்கை எனினும்,அதுவுமே சிறிது காலமே எனினும் இனிது வாழ்தலும் பயன் தருமே" தந்தையின் டச்! வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete