Friday, July 27, 2018

களைகளைப் பறிக்கும்போது

நாளைய (28 ஜூலை 2018) நற்செய்தி (மத் 13:24-30)

களைகளைப் பறிக்கும்போது

விதைப்பவர் எடுத்துக்காட்டைத் தொடர்ந்து இயேசு வயலில் வளரும் களைகள் எடுத்துக்காட்டை முன்வைக்கின்றார். நிலத்தின் உரிமையாளர் நல்ல விதைகளைத் தன் நிலத்தில் விதைக்கிறார். ஆனால், அங்கே களைகளும் வந்துவிடுகின்றன. 'இது பகைவனின் வேலை' என அறிகின்ற தலைவன், அவற்றைப் பறிக்க முனைந்த தன் பணியாளர்களைத் தடுக்கின்றார். 'களைகளைப் பறிக்கும்போது ஒருவேளை நல்ல செடியையும் பறித்துவிடும் அபாயம் இருப்பதால் இப்போது பறிக்க வேண்டாம்' என்கிறார் தலைவர். ஆனால், இப்படி வளர விடுவதால் நல்ல செடிகளுக்கு உரிய தண்ணீரையும், உரத்தையும் களைகளும் எடுத்துக்கொள்கின்றனவே என்று நமக்குக் கோபம் வருகிறது.

தலைவரின் பார்வை வித்தியாசமாக இருக்கிறது. தன் வளம் அழிந்தாலும் பரவாயில்லை நல்லது தீயவற்றோடு தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் தலைவர்.

நீண்ட காலம் வளரவிடுவதால் களையின் இயல்பு மாறப்போவதில்லை. ஆனால் அது களையாகவே இருக்கும்.

ஆனால், இதை மனிதர்களுக்குப் பொருத்திப் பார்த்தால் பொருள் மாறுபடும். 'நல்லவர்கள்,' 'அல்லவர்கள்' என இரண்டு பேர் இருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். இருவரும் வளரும்போது ஒரு கட்டத்தில் அல்லவர் நல்லவராக வாய்ப்பு இருக்கிறது.

தலைவரின் இந்தப் பொறுமை போற்றுதற்குரியது. தன் நிலத்தில் வளரும் அனைத்தின்மேலும் உரிமை கொண்டாடுகின்றார் தலைவர். இது அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது. இந்த பெருந்தன்மையைப் பயன்படுத்தாத களைகள் அகற்றப்படும். எரிக்கப்படும்.

அவரின் பெருந்தன்மையில் நம் அன்றாடம் விடிகிறது - அது களைக்காக விடிகிறதா? அல்லது கோதுமைக்காக விடிகிறதா? நம் ஒவ்வொருவரும்தான் முடிவு செய்ய வேண்டும்.

1 comment:

  1. சிந்தனையளவில் எந்த மனிதருக்கும் ஒத்து வராத ஒரு விஷயத்தைப்பாடமாகச் சொல்கிறது இன்றையப்பதிவு. " தன் வளம் அழிந்தாலும் பரவாயில்லை; தீயவற்றோடு நல்லதும் தண்டிக்கப்பட்டுவிடாக்கூடாது என்பதில் கவனமாயிருக்கிறார் தலைவர்" என்பது மட்டுமே நம் மனம் ஏற்றுக்கொள்ளும் செய்தி.களை இறுதிவரை களையாகவே இருக்குமென்பதும்,ஆனால் அல்லவர் நாளடைவில் நல்லவராக வாய்ப்புள்ளது என்பதும் தந்தையின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.தலைவரின் பொறுமையையும்,பெருந்தன்மையையும் மீறி " நான் நல்லவளா"இல்லை "அல்லவளா" நான் "களையா" இல்லை "கோதுமையா"! எனும் கேள்வியும் கூடவே எழுகிறது.ஆனால் இந்தக்கேள்விக்கான பதிலை விடியும் பொழுது முடிவு செய்வதில்லை; நான் தான் முடிவு செய்ய வேண்டும்.என்னைச் சார்ந்துள்ள களையை...கறையை 'அவர்' கண்டிப்பாக்க் களைவார் எனும் நம்பிக்கையில்.விதைகளுக்குப் பின் களைகள். களைகளுக்குப்பின் கனிகளா? தந்தைதான் பதில் தர வேண்டும்.உலக நியதிக்கு மாற்றான ஒரு விஷயம் தான்.ஆனால் மாற்று கோணத்தில் யோசிப்பதும் ஒரு சுவாரஸ்யம் தான்,; வளர்ச்சிக்கு ஒரு வித்து தான் என்பதை மெய்ப்பிக்கும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete