Monday, July 30, 2018

எங்களுக்கு விளக்கிக் கூறும்

நாளைய (31 ஜூலை 2018) நற்செய்தி (மத் 13:36-43)

எங்களுக்கு விளக்கிக் கூறும்

மக்கள் கூட்டத்திற்கு பல உவமைகள் வழியாகப் போதித்த இயேசு தன் வீடு திரும்புகிறார். அவருடைய வீட்டிற்குள் திருத்தூதர்களும் உடன்வருகின்றனர்.

ஒவ்வொருவரின் வீடும் அவரவருக்கு உலகமே.

ஊர், உலகை எல்லாம் சுற்ற வரும் ஒவ்வொரு மாலையும் திரும்புவது தன் வீட்டிற்குத்தான்.வீடு திரும்புவது மிக அழகிய அனுபவம். அவர் வீட்டிற்குள் இருக்கும் நிகழ்வை கொஞ்சம் கற்பனை செய்து பார்க்கலாம்.

கையில் கொண்டு போன கைப்பை, தேய்ந்த காலணிகள், காலில் தூசி, முகத்தில் வியர்வை, முழங்கால் வலி என வீட்டிற்குள் நுழைந்தவர் தன் கைப்பையை வீட்டின் உள்ளே உள்ள ஒரு கட்டையில் மாட்டிவிட்டு, வீட்டிற்குள் ஓரமாக இருக்கும் தொட்டியில் நீர் முகந்து பாதங்களைக் கழுவி, முகத்தைத் தழுவி, ஒரு துண்டால் துடைத்துக்கொண்டே சுவரில் சாய்ந்துகொண்டு அமர்வார். அவருடைய தாய் அவருக்கு சூடாக ஏதாவது குடிக்கக் கொடுப்பார். உடன் வந்த திருத்தூதர்களும் அப்படியே அவருடன் அமர்ந்திருப்பார்கள். எல்லாம் கொஞ்சம் சாந்தமானவுடன், 'ரபி, ஒரு டவுட்!' என்று கேட்டிருப்பார்கள்.

'வயலில் தோன்றிய களைகள் பற்றிய எடுத்துக்காட்டை எங்களுக்கு விளக்கிக் கூறும்!' என்கின்றனர்.

சீடர்களின் இந்த ஆர்வம் எனக்குப் பிடித்திருக்கிறது.

சிலர் உடனே எதையும் புரிந்துகொள்வர்.

சிலர் புரியவில்லையென்றாலும் தங்களுக்குப் புரிந்ததாக சொல்வர்.

சிலர் புரிந்தால் என்ன, புரியாவிட்டால் என்ன என அமைதியாக இருப்பார்கள்.

ஆனால், சீடர்கள் தங்களுக்குப் புரியவில்லை என்பதை மிகவும் அழகாகவும், உரிமையோடும் சொல்கிறார்கள். இயேசுவும் அவர்களுக்கு உவமையின் பொருளை விளக்குகின்றார்.

இந்த நாள்களில் நான் வகுப்புகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

'எனக்குப் புரியல!' என்று யாராவது கேட்கும்போது சில நேரங்களில் எனக்கு கோபம் வருவதுண்டு. அந்தக் கோபம் அவரை நோக்கியதாக இல்லாமல், என்னை நோக்கியே இருக்கும். என்னால் ஏன் புரியுமாறு சொல்ல முடியவில்லை! என நான் அந்த நேரங்களில் கேட்டுக்கொள்வதுண்டு.

'எனக்குப் புரியல!' என்று சொல்வதற்கு நிறைய தைரியம் வேண்டும். ஏனெனில் புரிய வைக்கும் ஆசிரியர் நம்மேல் எரிச்சல் படவும், கோபப்படவும் அங்கே வாய்ப்புக்கள் உண்டு.

சீடர்களின் இந்தத் தைரியத்தை நாம் இன்று கற்றுக்கொள்வோம்.

இரண்டு நாள்களுக்கு முன் டுவிட்டரில் ஒரு இளவல் பதிவிட்டிருந்தார்: 'வாழ்க்கை வாழை இலையில ஊத்துன இரசம் மாதிரி இருக்கு. எங்க போகுதுன்னே தெரியல!'

நாமும் இயேசுவின் வீட்டிற்குள் சென்று வாழ்வில் நமக்குப் புரியாதவற்றை, 'எனக்கு கொஞ்சம் விளக்கிக் கூறும்' என்று கேட்கலாமே!

1 comment:

  1. இன்றையப்பதிவில் இயேசுவையும,அவர் சீடர்களையும் தாண்டி என் கண்ணில் பட்டது " வாழ்க்கை வாழை இலையில் ஊத்துன இரசம் மாதிரி இருக்கு. எங்க போகுதுன்னே தெரியல" என்ற அந்த இளைவலின் பதிவு தான்.அந்த சந்தேகம் அவருக்கு மட்டும் தானா? இல்லை இன்னும் பலருக்கும் உள்ளது.ஏன்இருக்காது? கேட்பது கிடைப்பதில்லை; நினைப்பது நடப்பதில்லை; உறவுகள் ஒட்டுவதில்லை..இப்படி எத்தனை எத்தனையோ பிரச்சனைகள் பல இளவல்களின் வாழ்க்கையைத் திசை திருப்பிக்கொண்டிருக்கின்றன.ஆம்! " எனக்குப் புரியல" என்று சொல்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும் தான்.ஆனால் ஆசிரியையான என்னுடைய மாணாக்கர்களில் பலருக்கு இந்த தைரியம் இருப்பதில்லை.யாருக்கெல்லாம் புரியவில்லை என்ற கேள்விக்கும் பதில் இருக்காது.ஆனால் புரியாதவர்கள் பலர் உள்ளனர் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த உண்மை.ஏன்..எனக்கே கூட பல நேரங்களில் என்னை வருத்தும் விஷயங்களை புரிந்து கொள்ளவோ..ஒத்துக்கொள்ளவோ முடிவதில்லை.கை கொடுக்கிறார் தந்தை.." இயேசுவின் வீட்டிற்குள் சென்று வாழ்வில் நமக்குப்புரியாதவற்றை " எனக்குக் கொஞ்சம் விளக்கிக் கூறும்" என்று கேட்கலாமே" என்று. கண்டிப்பாகக் கேட்கலாம்..... அவராவது நமக்குப் புரியவைப்பார் எனும் நம்பிக்கையில்!
    இயேசு வீட்டிலிருக்கும் நிகழ்வை ஒரு சுவை மிகுந்த நிகழ்வாக கண்முன் கொணர்ந்த தந்தைக்கு ஒரு சபாஷ்!!!


    ReplyDelete