Sunday, July 29, 2018

மாவு முழுவதும்

நாளைய (30 ஞாயிறு 2018) நற்செய்தி (மத் 13:331-35)

மாவு முழுவதும்

இரண்டு மாதங்களுக்கு முன் இறையன்பு அவர்கள் எழுதிய  'இரவல் வாங்குதல்' பற்றிய கட்டுரையை வாசித்தேன். கிராமங்களில் இருந்து, இன்னும் சில கிராமங்களில் இருக்கும், சில பழக்கங்களில் ஒன்று 'உறைக்கு தயிர் வாங்குதல்.' வீட்டில் பால் மிஞ்சியவுடன் - அது மிகக் கொஞ்சமாக இருந்தாலும் - அதைத் தயிராக மாற்றி பொருளாதாரப் புரட்சி செய்பவர்கள் நம் அம்மாக்கள். சுடவைத்த பாலில் எதிர்வீட்டிலிருந்து வாங்கி வந்த டீஸ்பூன் அளவு தயிர் ஊற்றப்பட்டு மூடி வைக்கப்படும். காலையில் திறந்து பார்க்கும்போது அது தயிராக உறைந்திருக்கும்.

என்ன ஆச்சர்யம்?

வீடு பூட்டப்பட்டாலும், ஜன்னல்கள் அடைக்கப்பட்டாலும், விளக்குகள் அணைக்கப்பட்டாலும், வீட்டில் இருப்பவர்கள் தூங்கினாலும் பாலில் விழுந்த உறைத்தயிர் வேலை செய்துகொண்டிருக்கிறது. 'யாரும் என் வேலையைப் பார்க்கவில்லை' என்ற வருத்தம் அதற்கு இல்லை. 'நான் வேலை செய்வதை யாரும் பாராட்டுவதில்லை' என்று அது தன் வேலையை பாதியில் நிறுத்திக்கொள்வதில்லை.

உறைத்தயிர் அந்தப் பாலில் செய்யும் வேலைக்கு ஐந்து குணங்கள் உண்டு:

அ. யார் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் அது தன் வேலையைச் செய்துகொண்டிருக்கும்.
ஆ. அதன் வேலையை யாரும் நிறுத்திவைக்க முடியாது.
இ. அது புளிப்பேற்றிய தயிரை யாரும் திரும்ப பாலாக மாற்ற முடியாது.
ஈ. அது செயலாற்றியவுடன் பால் தன் இயல்பை முற்றிலும் இழந்து தயிராக - புதிய இயல்பைப் பெற்று - மாறுகிறது.
உ. அது தன் இயல்பை இழந்து, தான் கெட்டுவிடாமல் நின்று, அடுத்தவருக்குப் பயன்படுகிறது.

நிற்க.

உறைத்தயிருக்கு பதில் புளிப்புமாவு, பாலுக்குப் பதில் மாவு என உருவகத்தைக் கையாண்டு இறையரசின் மையப்பொருளை விளக்குகின்றார் இயேசு. பெண் ஒருவர் கொஞ்சம் புளிப்புமாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் கலக்க அது விடியுமுன் புளிப்புமாவாகி அப்பத்திற்குத் தயாராகிறது.

இப்படி உருவகப்படுத்தும் இறையரசும் மேற்காணும் ஐந்து குணங்களைப் பெற்றிருக்கும்:

அ. யார் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் இறையரசு தன் வேலையைச் செய்துகொண்டிருக்கும்.
ஆ. இறையரசின் வேலையை யாரும் நிறுத்திவைக்க முடியாது.
இ. அது செய்த வேலையை யாரும் மீண்டும் பழைய நிலைக்குத் திருப்ப முடியாது.
ஈ. தான் தொடர்பில் இருக்கும் அனைத்தின் இயல்பையும் அது மாற்றிவிடும்.
உ. அடுத்தவருக்குப் பயன்தருதலையும், அடுத்தவரின் நலனையும் அது தன் இலக்காகக் கொண்டிருக்கிறது.


1 comment:

  1. நான் கூட வாசித்திருக்கிறேன்...இறையன்பு அவர்களின் " இரவல் வாங்குதல்" எனும் கட்டுரையை.நம் எளிய மக்களின் எதார்த்த வாழ்க்கையைப் பாடும் கவிதை அது. ஆனால் அதை வாசிக்கையில் எனக்கு அதிலிருந்த பால் மற்றும் தயிர் தவிர வேறொன்றும் தோன்றவில்லை.ஆனால் தந்தைக்கு....!!? உறைத்த தயிர் புளிப்பு மாவையும், பாலானது மாவையும் நினைவு படுத்தியுள்ளது. Great! இரண்டு விடயங்களிலும் உள்ள ஒப்புமைகளைத் தந்தை பட்டியலிட்டிருப்பினும் என் மனத்தைத் தொட்டது அந்த 'உ' எனும் பகுதியே! என்றைக்கு ஒரு மனிதனோ / பொருளோ அடுத்தவருக்குப் பயன்படுகிறதோ, அன்று தான் அப்பொருள்/ மனிதனின் பிறவிப்பயன் மட்டுமல்ல,அத்துடன் சேர்ந்து தந்தை குறிப்பிடும, அத்தனை விஷயங்களும்அதை/ அவனை வந்தடையும். பால் தயிராக மாறும் வெகு இயல்பான விஷயம் கூட தந்தைக்கப் பல 'உன்னதங்களை' நினைவு படுத்துகிறதே! எப்படி? யோசிக்கிறேன்; வியப்பு மேலீட்டால் உறைந்து போகிறேன்.வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete