Saturday, February 28, 2015

திரும்பி வராத ஈசாக்கு!

விவிலிய விளக்கங்களுக்குப் பயன்படும் பல செயல்முறைகளில் ஒன்றின் பெயர் 'உருவகப்படுத்துதல்' (allegorizing). ஒன்றின் அர்த்தத்தை மற்றொன்றின் வழியாக அறிந்து கொள்வது. எ.கா. நோவாவின் தண்ணீர் திருமுழுக்கின் உருவகம் என்று சொல்வது. பழைய செயல் ஒன்றை புதிய செயலோடு ஒப்பிட்டுப் பார்த்துப் பொருள் கொள்வது. இது மிகவும் எளிதானது. இதன் வழியாக எதையும் யாருக்கும் எளிதாகப் புரிய வைத்துவிட முடியும். ஆனால், இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இல்லாத ஒரு அர்த்தத்தை நாம் இங்கே புகுத்துகிறோம். நோவாவிற்கு அவர் அனுபவித்த வெள்ளம் பிற்காலத்தில் திருமுழுக்காக மாறும் என்று தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை. மேலும், இந்த அர்த்தம் ரொம்ப 'சிம்ப்ளிஸ்டிக்காகவும்' (simplistic) மாறிவிடுகிறது.

நாளை நாம் வாசிக்கவிருக்கும் முதல் வாசகம் 'ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிடும்(!) நிகழ்வு' (தொநூ 22). இந்த நிகழ்வை பல நேரங்களில் இயேசுவின் கல்வாரிப் பலியோடு உருவகப்படுத்திப் பார்க்கிறோம்:

1. ஆபிரகாம் - வானகத் தந்தை.
2. ஈசாக்கு - இயேசு
3. பணியாளர்கள் - சீடர்கள்
4. விறகுக்கட்டை - சிலுவை மரம்
5. மோரியா மலை - கல்வாரி மலை
6. மூன்று நாள் பயணம் - மூன்று நாள் பாடுகள், இறப்பு

இந்த ஆறு ஒப்புமைகள் வழியாக இயேசுவையும், ஈசாக்கையும் உருவகப்படுத்துதல் வழக்கம். ஆனால், இந்த ஆபிரகாமிற்கும், ஈசாக்கிற்கும், பணியாளர்களுக்கும் இயேசு என்று ஒருவர் பிற்காலத்தில் வருவார் என்றும் தாங்கள் அவரின் முன்னோடிகள் என்றும் தெரியுமா? தெரிந்திருக்கும் வாய்ப்பு மிக மிக மிக குறைவு.

இந்த உருவகப்படுத்துதலில் ஏழாவது ஒன்றும் இருக்கின்றது. அதுதான் இயேசுவுக்கு அதிகம் பொருத்தமானது. அது என்னவென்றால், எப்படி ஈசாக்கு மொரியா மலையிலிருந்து வீடு திரும்பவில்லையோ, அப்படியே இயேசுவும் கல்வாரி மலையிலிருந்து தன் வீடு திரும்பவில்லை.

ஆபிரகாம் ஆட்டைத் தானே பலியாகக் கொடுத்தார். ஈசாக்கு இறக்கவில்லையே? என்று சொல்றீங்களா?

வாங்க தொநூ 22ஐப் பார்ப்போம்.

'மூன்றாம் நாள் ஆபிரகாம் கண்களை உயர்த்தி அந்த இடத்தைத் தூரத்திலிருந்து பார்த்தார். உடனே ஆபிரகாம் தம் வேலைக்காரர்களை நோக்கி, 'நீங்கள் கழுதையோடு இங்கேயே காத்திருங்கள். நானும், பையனும் அவ்விடம் சென்று வழிபாடு செய்தபின் உங்களிடம் திரும்பி வருவோம்' என்றார்' (தொநூ 22:4-5)

'பின் ஆபிரகாம் தம் வேலைக்காரரிடம் திரும்பி வந்தார். அவர்கள் ஒன்று சேர்ந்து பெயேர்சேபாவுக்குத் திரும்பிச் சென்றார்கள். அங்கேயே ஆபிரகாம் வாழ்ந்து வந்தார்.' (தொநூ 22:19)

தொநூ 22:5ல் தானும் தன் மகனும் திரும்பி வருவோம் என்று வேலைக்காரர்களிடம் சொல்லிவிட்டுச் சென்ற ஆபிரகாம் தான் மட்டுமே திரும்பி வருகின்றார். ஆபிரகாம் மட்டுமே திரும்பி வந்ததை மூன்று வாக்கியங்களாகக் குறிப்பிடுகிறார் ஆசிரியர்: 'திரும்பி வந்தார்', 'திரும்பிச் சென்றார்கள்', 'வாழ்ந்து வந்தார்'. ஈசாக்கு என்ன ஆனார்? (ஈசாக்கு இறக்கவில்லைதான். ஏனெனில் தொநூ 24ல் ஈசாக்கின் திருமண நிகழ்வு நடைபெறுகிறது) பின் எதற்காக இந்தக் கதையின் ஆசிரியர் ஈசாக்கு திரும்பி வருதலை எழுதவில்லை?

இந்தக் கதாசிரியர் மிகச் சிறந்த ஞானியாக இருந்திருக்க வேண்டும். இந்தக் கதையின் நோக்கம் என்ன? இந்தக் கதை ஆபிரகாமுக்கான சோதனை என்று சொல்வதை விட, கடவுளுக்கான சோதனை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், இந்த நிகழ்வில் அல்லது இந்தச் சோதனையில் ஈசாக்கு ஒருவேளை இறந்துவிட்டால் கடவுள்தான் வாக்குத்தவறியவராக அல்லது பொய்யராக மாறிவிடுவார். கடவுள்தான் 'உன் சந்ததி என்றென்றும் இருக்கும்!' (தொநூ 12:1-3) என்று வாக்குக் கொடுத்திருக்கிறாரே. ஈசாக்கு இறந்து விட்டால் சந்ததி எப்படி இருக்கும்? ஆக, கடவுள் கண்டிப்பாக ஈசாக்கைப் பலியிட அனுமதித்திருக்க மாட்டார்.

இந்த நிகழ்வின் வழியாக நான் கற்றுக்கொள்வது இரண்டு:

அ. கடவுள் ஆபிரகாமிற்குக் கொடுத்த தன் வாக்குறுதியைக் காப்பாற்றிவிட்டார். ஆனால், ஆபிரகாம் வேலைக்காரர்களுக்குக் கொடுத்த தன் வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை. 'நாங்கள் இருவரும் திரும்பி வருவோம்' என்று சொன்னவர் தான் மட்டுமே திரும்பி வருகின்றார். ஆக, நம் கடவுள் தான் கொடுக்கும் வாக்குறுதியில் ஒருபோதும் தவறுவதேயில்லை. கடவுளின் இந்த நிலையான தன்மையைக் குறிக்கத்தான் அவரை முதல் ஏற்பாட்டில் பல இடங்களில் 'பாறை' என அழைக்கிறார்கள் (இச 32:4,13,30-31, திபா 18:2). நாம் தான் பல நேரங்களில் நாம் வாக்குறுதிகளில் தவறிவிடுகிறோம். கடவுள் நாம் பொக்கிசமாய்ப் பாதுகாக்கும் நம் அன்பு மகனை பலியாகக் கேட்டாலும், கண்டிப்பாக அவர் மலையின் அந்தப்பக்கமிருந்து ஒரு ஆட்டுக்குட்டியை ஏற்றிக்கொண்டு வருவார். இது இன்று என் அருட்பணி வாக்குறுதியையும் ஆய்வு செய்து பார்க்க அழைக்கிறது. இந்த நாட்களில் எங்கள் பங்கில் வீடுகளை சந்தித்து ஆசீர் வழங்கி வருகிறோம். ஒவ்வொரு வீட்டின் 'பெட்ரூமில்' தீர்த்தம் தெளிக்கச் செல்லும் போதும், 'ச்சே! நமக்கு வாழ்க்கை ஃபுல்லா சிங்கிள் கட்டில்தான்! டபுள் காட் சான்சே இல்லை!' என்று தோன்றும். (மதுரைக்கு வந்தவுடன் சும்மாவாவது ஒரு டபுள் காட் வாங்கணும்!). ஆனால், இந்த வாசகம் நான் கொடுத்த வாக்குறுதிக்கு வலுசேர்க்கிறது. கடவுளின் பிரசன்னத்தில் ஒன்றை இழக்கத் துணியும் போது அதை மிகவும் வியப்பான விதத்தில் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம்தானே!

ஆ. ஈசாக்கு உயிரோடு இருக்கிறார் என்று ஆபிரகாமிற்குத் தெரியும். ஆனால் வேலைக்காரர்களுக்குத் தெரியாது. ஆபிரகாமும், வேலைக்காரர்களும் இரண்டு வகை விசுவாசத்தைக் குறிக்கிறார்கள். ஆபிரகாம் விசுவாசம் அசையாத விசுவாசம். வேலைக்கார விசுவாசம் 'பேய்மெண்ட்' விசுவாசம், அதாவது 'கூலிக்கு மாரடிக்கும் விசுவாசம்!'. ஆபிரகாம் போல விசுவாசம் இருந்தால்தான் நமக்கு ஈசாக்கும் கண்ணுக்குத் தெரிவார், அவர் குறிக்கும் இயேசுவும் கண்ணுக்குத் தெரிவார். வேலைக்காரர் போல விசுவாசம் இருந்தால் நமக்கு ஈசாக்கும் தெரிவதில்லை, இயேசுவும் தெரிவதில்லை. இந்த விசுவாசம் நம் வாழ்க்கையையும் பாதிக்கிறது. ஆபிரகாம் போல நான் இருந்தேனென்றால் எல்லாவற்றிலும் என் கடவுளை நம்புவேன். வேலைக்காரர் போல இருந்தேனென்றால் எப்பப் பார்த்தாலும் முணுமுணுத்துக்கொண்டு, என்னிடம் இல்லாததைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பேன். ஆபிரகாமைப் பாருங்களேன். தன் முழுமையான கையறு நிலையில் இருக்கிறார். ஈசாக்கும் ஒருவேளை இறந்துவிட்டால், தன்னால் அடுத்த குழந்தையை உருவாக்க முடியுமா? சாராவுக்கு என்ன பதில் சொல்வார்? இவ்வளவு துன்பத்திலும் அமைதி காக்கிறார். வேலைக்கார மனநிலை அப்படியல்ல. 'கூலி தந்தால் வேலை!' அவ்வளவுதான். இந்த மனநிலையில் நான் இருக்கும்போது என் செயல் ஒவ்வொன்றிலும், 'இதில் என்ன கிடைக்கும்!' என்ற மனநிலை பிறந்துவிடும். பின் என் செயல்பாடுகளில் என் படைப்புத்திறனும் குறைந்துவிடும். விசுவாசத்தில் இந்த நிலை மிகவும் ஆபத்தானது. நான் வேண்டியது கிடைத்தால் செபிப்பேன். அல்லது 'நோ!' சொல்லிவிடுவேன்.

'திரும்பி வராத ஈசாக்கு!' வீடு திரும்புவதும், திரும்பாததும் நம் கையில்!


2 comments:

  1. Anonymous3/01/2015

    தாங்கள், விசுவாசத்தைப் பற்றி விளக்கிய விதம் மிக அருமை. நன்றி

    ReplyDelete
  2. இயேசு, ஈசாக்கு இவர்களுக்கிடையே உள்ள ஒப்புமையை எல்லாம் தாண்டி என் மனத்தில் தைத்தது தந்தை அபிரகாமின் 'விசுவாசம்' தான். கையறு நிலையிலும் என் கடவுளை நம்புவேன் என்ற அவரது தளரா விசுவாசம்." வானத்து விண்மீன்களை விடவும்,கடற்கரை மணலை விடவும் உன் சந்ததியைப் பெருகச்செய்வேன்"என்று தந்தை அபிரகாமிடம் கூறிய இறைவன் நம் விசுவாசத்தைப் பார்த்து
    வியப்பாரா..இல்லை முகம் சுளிப்பாரா??!! சிந்தனைக் களஞ்சியத்தைப் புரட்டிப்போட்ட தந்தைக்கு ஒரு 'சபாஷ்!'.

    ReplyDelete