Thursday, February 19, 2015

நான் விரும்பும் நோன்பு!

பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும்
தங்க இடமில்லாத வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும்
உடையற்றோரைக் காணும் போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும்
உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ
நான் விரும்பும் நோன்பு!
(எசாயா 58:7)

நாம் வாசிக்கும் பைபிள் கடவுளின் வார்த்தை என்பது எந்த அளவிற்கு உண்மையோ (!), அதே அளவிற்கு அது ஒரு இலக்கியம் என்பதும் உண்மை.

இரண்டாம் ஏற்பாட்டு எழுத்தாளர்கள் பெரும்பாலும் முதல் ஏற்பாட்டு நிகழ்வுகளையே எடுத்து, இரண்டாம் ஏற்பாட்டு நாயகன் இயேசுவுக்குப் பொருத்தி விடுகின்றனர். ஆக, இயேசு என்ற வரலாற்று நபர் கிறிஸ்து என்ற ஒரு நம்பிக்கை நபராக மாறுவதற்குக் காரணம் இந்த நற்செய்தியாளர்களும், மற்ற நூல்களை எழுதிய இயேசுவின் சீடர்களும் தான். அப்படியென்றால் இயேசு கடவுள் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம்! இதற்கு பதில் நீங்கள் தான் சொல்ல வேண்டும்!

நேற்றைய தினம் நாம் 'வாழ்வு', 'சாவு' என்று நமக்கு முன் இருப்பதாகவும், அவற்றில் ஒன்றை நாம் தேர்ந்து கொள்ள வேண்டும் என்றும் பார்த்தோம்.

இரண்டாம் ஏற்பாட்டு நற்செய்தியாளர்கள் முதல் ஏற்பாட்டு நிகழ்வுகளை அப்படியே திரும்ப எழுதியிருக்கிறார்கள் என்று சொன்னதற்கு இரண்டு உதாரணங்கள்:

அ. தொடக்கநூலும் யோவான் நற்செய்தியும்
தொநூ 1:1 - தொடக்கத்தில் கடவுள் ... ... அசைந்தாடிக் கொண்டிருந்தது.
யோவான் 1:1 - தொடக்கத்தில் வாக்கு இருந்தது... ... கடவுளோடு இருந்தார்.

இச 30:20 - அவரே உனது வாழ்வு. அவரே உனது நீடிய வாழ்வு.
யோவான் 1:4 - அவரிடம் வாழ்வு இருந்தது. அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது.

இச 30:16 - இப்படி இரு...அப்படி இரு...அப்போது நீ வாழ்வாய்.
யோவான் 21:31 - நம்பி அவர் பெயரால் நீங்கள் வாழ்வு பெறுவதற்காகவும் ... ...

ஆ. எசாயாவும் மத்தேயுவும்
எசாயா 58:7 - பசிக்கு உணவு, தங்குவதற்கு இடம், உடையற்றவருக்க உடை,

மத்தேயு 25:31-46 - பசியாய் இருந்தேன் உணவு கொடுத்தீர்கள். ஆடையின்றி இருந்தேன். நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள். அன்னியனாக இருந்தேன். என்னை ஏற்றுக்கொண்டீர்கள்.

இரண்டாம் ஏற்பாட்டு நற்செய்தியாளர்கள் அடிப்படையில் தங்கள் விவிலியமான எபிரேய விவிலியத்தை நன்றாக அறிந்தவர்கள். ஆகையால் தான் அவர்கள் அவற்றோடு இயேசுவையும், அவரின் போதனைகளையும் இணைக்கின்றனர்.

ஆகவே, விவிலியம் படிக்கும் போது நாம் அது ஒரு மனித இலக்கியம் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். எல்லாமே பழசோட ரீமேக்கிங் அப்படின்னா, இறுதித் தீர்ப்பு இருக்காதா, நம்மள வலப்பக்கம், இடப்பக்கம் பிரிக்க மாட்டாங்களா அப்படியெல்லாம் கேட்கக் கூடாது. ஏன்னா, இதெல்லாம் இல்லன்னாலும் நாம தான் 'இதை நம்புகிறேன்!' அப்படின்னு சொல்லிட்டோம்ல. அதனால, அதை நம்பிக்கையாகவே வைத்துக்கொள்வோம்.

சரி. இன்றைய சிந்தனைக்கு வருவோம்.

'நோன்பு'

இதைப் புரிந்து கொள்ளப் பயன்படும் இன்னொரு வார்த்தை 'விரதம்'. 'விரதம்' என்னும் சொல்லின் மூலம் 'வ்ரதா' என்னும் சமஸ்கிருதச் சொல். அதன் அர்த்தம், 'ஆன்மீக வாக்குறுதி'. என் நண்பர் ஒருவரின் பெயர் வரன் வரதன். இன்றுதான் அவரது பெயரின் இரண்டாம் பகுதி புரிகிறது - 'ஆன்மீக வாக்குறுதியின் வரம்' அந்தப் பெயரின் பொருளாக இருக்க முடியும். 'வ்ரதா' என்பதை இன்னும் தோண்டிப் பார்த்தால் அதன் மூலம் 'வ்ர்ன்' என்னும் மூன்று எழுத்துகள். இதன் பொருள் - நான் தெரிவு செய்கிறேன். திருமண வரம் அல்லது வரன் என்பதும் இதிலிருந்துதான் வருகிறது. (அப்படின்னா நம்ம நண்பரோட பெயர் ஒரே பொருளைக் கொண்ட அடுத்தடுத்த இரண்டு வார்த்தைகள் தாம் போல. அவரிடமே சீக்கிரம் கேட்டு விடுவோம்!)

விரதம் என்பது ஏதாவது ஒரு குறிப்பிட்ட சடங்கை தன்னார்வமாக, ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குச் செய்வது. இதைச் செய்யக் காரணம் இப்படிச் செய்வதன் வழியாக ஒருவரின் இஷ்ட தெய்வத்தைத் திருப்திப்படுத்தி, அவரிடமிருந்து விரதமிருப்பவர் தான் வேண்டுவதைப் பெற்றுக்கொள்வது.

நம் இந்தியப் புராணங்களில் கூட 'காயிக வ்ரதா' (உடல் சார்ந்தது), 'வாச்சிக வ்ரதா' (வார்த்தை சார்ந்தது) மற்றும 'மானச வ்ரதா' (மனம் சார்ந்தது) என்று விரதங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

விரதத்தில் முக்கியம் தூய்மை. அதாவது, எந்த உணவும் உள்செல்லாமல் நாம் நம்மில் எப்படி இருக்கிறோமோ அப்படி இருப்பதுதான் விரதம்.

முதல் ஏற்பாட்டு எசாயா கடவுளுக்கு இந்த விரதம் பிடிக்கவில்லை என எழுதுகிறார். 'நீ உன்னையே பார்த்துக்கொண்டிருப்பதற்குப் பதில் உன் அருகில் இருப்பவரைப் பார்! அதுதான் நான் விரும்பும் விரதம்' என்கிறார் அவர்.

இதை வரலாற்றுப் பிண்ணனியோடு புரிந்து கொள்வோம். எசாயா 58 எழுதப்பட்ட ஆண்டு பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பின். அடிமைத்தனத்திலிருந்து வீடு திரும்பியவர்கள் உண்ண உணவில்லாமல், உடுக்க உடையில்லாமல், தங்குவதற்கு இடமில்லாமல் தெருக்களில் அலைந்து திரிகின்றனர். இவர்களுக்கு யார் உணவும், உடையும், இடமும் கொடுக்க வேண்டும்? ஏற்கனவே இவைகளையெல்லாம் வைத்திருக்கும் எருசலேம் வாசிகள் தான்! 'நீ குடுன்னா' யாராவது சும்மா குடுப்பாங்களா? இல்லை. சாமி கண்ணக்குத்தும், ரத்தம் கக்கிச் சாவ! அப்படின்னு பயமுறுத்துனாதான் குடுப்பாங்க. ஆகையால்தான் ஒரு சமூக மாற்றத்திற்கான விதையை விதைக்க எசாயா 'கடவுளைப்' பயன்படுத்திக்கொள்கின்றார்.

இன்றும் அடிமைத்தனத்திலிருந்து திரும்பியவர்கள் போல் தான் நம்ம ஊரும், நம்ம உலகமும் இருக்கின்றது. நாம் நோன்பு இருப்பது நமக்குப் பயன்தர வேண்டும், கேட்டது கிடைக்க வேண்டும் என்று மட்டும் இல்லாமல் தேவையில் இருக்கும் நம் சகோதர, சகோதரியைப் பார்த்து 'என்னப்பா நல்லா இருக்கிறியா?' என்று கேட்டாலே தவக்காலம் அருளின் காலம் தான்.



3 comments:

  1. "நீ உன்னையே பார்த்துக்கொண்டிருப்பதற்குப்பதில் உன் அருகில் உள்ளவரைப்பார்; அதுதான் நான் விரும்பும் விரதம்" ....அழகான, மனத்தில் பதியவைக்கவேண்டிய வார்த்தைகள்.தேவையிலுருப்போரைப் பார்த்து " என்னப்பா, நல்லாயிருக்கியா?' என்றாலே 'அருளின் காலம்' என்றால், நம்மையும்,நம்மிடம் இருப்பதையும் முகம் சுளிக்காமல் தேவையில் இருப்பவரோடு பகிர்ந்து கொள்வது இன்னும் மகத்தான விஷயமில்லையா? இதையும் கூட 'நோன்பின்'அடுத்த பரிணாம்மாகப் பார்க்கலாம்
    இல்லையா ஃபாதர்?


    ReplyDelete
  2. Anonymous2/20/2015

    Yesu good morning. Yesterday night itself I read it. It is so nice. As it is Friday it ll be useful for the homily. Thanks

    ReplyDelete
  3. Anonymous2/20/2015

    Yesu good morning. Yesterday night itself I read it. It is so nice. As it is Friday it ll be useful for the homily. Thanks

    ReplyDelete