Sunday, February 8, 2015

தறியின் ஓடுகட்டையினும்!

என் உறைவிடம் மேய்ப்பனின் கூடாரத்தைப் போல் பெயர்க்கப்பட்டு
என்னைவிட்டு அகற்றப்படுகிறது.
நெசவாளன் பாவைச் சுருட்டுவதுபோல் என் வாழ்வை முடிக்கிறேன்.
தறியிலிருந்து அவர் என்னை அறுத்தெறிகிறார்.
(எசாயா 38:12)

வாழ்வு மற்றும் இறப்பு பற்றிய உருவகங்கள் விவிலியத்தில் ஏறக்குறைய 60 இருக்கின்றன. அவற்றில் எனக்கு மிகவும் பிடித்த உருவகங்கள் மேற்காணும் இரண்டு: மேய்ப்பனின் கூடாரம், நெசவாளனின் பாவு - தறி.

இன்று நாம் திருப்பலியில் வாசித்த முதல் வாசகத்திலும் 'தறி' என்ற உருவகம் வருகிறது:

'என் நாள்கள் தறியின் ஓடு;கட்டையினும் விரைந்தோடுகின்றன' (யோபு 7:6). நேரமிருந்தால் யோபு 7 முழுவதையும் வாசியுங்கள். கொஞ்சம் பயமாக இருக்கும். ஆனால், வாழ்வின் எதார்த்தத்தை மிக அருமையாக பதிவு செய்திருக்கின்றார் ஆசிரியர்.

யோபு நூலின் 'தறி'க்கும் எசாயா நூலின் 'தறிக்கும்' வித்தியாசம் இருந்தாலும், வாழ்நாள்களில் ஓடிக்கொண்டிருக்கின்ற ஒரு தறியை கடவுள் அறுத்தெறிகின்றார் என இரண்டையும் நாம் இணைத்துப் பார்க்கலாம்.

தறி பார்த்திருக்கீங்களா? தறி பார்க்க வேண்டுமென்றால் இராஜபாளையத்திலிருந்து ஆலங்குளம் செல்லும் வழியில் உள்ள சத்திரப்பட்டி என்ற ஊருக்குச் செல்லுங்கள். கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதிகளிலும் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், சரியாகத் தெரியவில்லை. தறியில் இரண்டு வகை உண்டு: ஒன்று, கைத்தறி. மற்றொன்று விசைத்தறி. எங்க அப்பா கூட பிறந்த சித்தப்பாவின் வீடு சத்திரப்பட்டியில் தான் இருந்தது. அவர்கள் வீட்டிற்கு முன்புறம் இருந்த வீட்டில் தறி ஒன்று இருந்தது. நான் சின்ன வயதில் விடுமுறைக்கு அவர்கள் வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம் அந்த தறி வைத்திருப்பவர்களின் வீட்டிற்குச் சென்று வேடிக்கை பார்ப்பது வழக்கம். விசைத்தறியை நான் முதன் முதலாக பார்த்தபோது எனக்கு வயது பத்து. ஆறாம் வகுப்பு முடிந்து ஏழாம் வகுப்புக்குக் கடந்து போகும் மே மாதம் (1991-92) விடுமுறை நாட்களில் எனக்கும், என் நண்பன் கடற்கரைக்கும் ஒரு ஆசை. இந்த லீவுல வேலை பார்க்கலாமே! சம்பளம் வாங்கும் காசுல புத்தகம் வாங்கலாமே! சத்திரப்பட்டியில் உள்ள செந்தில்முருகன் டெக்ஸ்டைல்ஸ் என்ற கம்பெனியைத் தேர்ந்தெடுத்தோம். ராஜபாளையம் பக்கம் டெக்ஸ்டைல்ஸ் என்றால் ரெண்டு அர்த்தம் உண்டு: ஒன்று, துணிக்கடை. அதாவது நாம் பயன்படுத்தும் ஆடைகளைத் தைப்பதற்கான துணிகள் வாங்கும் இடம். இரண்டு, பேண்டேஜ், துண்டு, காடாத்துணி போன்றவைகளை உற்பத்தி செய்யும் இடம். நான் வேலைக்குச் சேர்ந்த இடம் இரண்டாம் வகை. உயரம் கம்மியாக இருந்ததால் எனக்கு தினக்கூலி 3 ரூபாய் என்றும், கடற்கரைக்கு 4 ரூபாய் என்றும் சொன்னார்கள். சேர்த்த இரண்டாவது நாளே கடற்கரையை வேறு ஓர் கம்பெனிக்கு மாற்றி விட்டார்கள். இந்தக் கம்பெனியில் நான் பார்த்த வேலை மூன்று: ஒன்று, பேக்கிங் சாக்குகளை பிரித்து அடுக்குவது, பேண்டேஜ் பாக்கெட்டுகளுக்கு லேபிள் ஒட்டுவது. மூன்று, லாரியில் ஏற்றப்படும் பேண்டேஜ் மூட்டைகளின் மேல் முகவரி எழுதுவது. இன்றும் இந்த டெக்ஸ்டைல்ஸ் இருக்கின்றது. ஆனால், ஆறுமுகா க்ரூப்ஸ் வாங்கிவிட்டதாகச் சொன்னார்கள். இங்கே ரோமில் மருத்துவமனை சர்வீஸ் போன போது குவிக்கப்பட்டிருந்த பேண்டேஜ்களில் செந்தில் முருகன் டெக்ஸ்டைல்ஸ் என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தேன். ஆக, இன்றும் அங்கே யாரோ லேபிள் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பேண்டேஜ், சீசன் துண்டு (சிலர் குற்றாலத் துண்டு என்றும் சொல்வார்கள்!) மற்றும் காடாத்துணி செய்யப்படும் முறை இதுதான். பாவு என்று சொல்லப்படும் பெரிய இரும்பு ரோலில் நூல் இருக்கும். இந்த நூல் நெடுக்கு வசமான நூல். இந்த நெடுக்கு வச நூலிற்குள் நுழைந்து குறுக்கு வச நூலைக் கொடுப்பதுதான் நம் தறியின் ஓடுகட்டையின் வேலை. எந்தக் கலரில் நமக்கு குறுக்கு வச நூல் வேண்டுமோ அந்தக் கலர் நூலை தறியின் ஓடுகட்டையில் ஏற்றி ஓட விட வேண்டும். தறியின் ஓடுகட்டைக்குத் தேவை நல்ல ஓட்டம். நல்ல ஓட்டத்திற்குத் தேவை பலமான சக்கரம். ஓடவும் வேண்டும். நூலும் அறுந்துவிடக் கூடாது. மிக முக்கியமான வேலையைத் தான் இந்தத் தறியின் ஓடுகட்டை செய்கிறது.

'தறியின் ஓடுகட்டையை' எசாயா மற்றும் யோபு நூலின் ஆசிரியர்கள் உருவகமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றால் தறியின் பயன்பாடு கிறிஸ்து பிறப்புக்கு முன் ஏறக்குறைய 700 வது ஆண்டிலேயே இருந்திருக்கின்றது. ரொம்ப ஆச்சர்யமா இருக்குல!

இந்தத் தறியின் ஓடுகட்டை நம் வாழ்க்கைக்குச் சொல்லும் பாடம் மூன்று. அதுவே வாழ்க்கையின் எதார்த்தமும் கூட.

அ. ஓடுகட்டைக்கென்று ஒரு எல்லை உண்டு. ஒரு கட்டுப்பாடு உண்டு. எனக்கு சர்க்கரம் இருக்கிறது என்பதற்காக ஆது எல்லா இடத்திற்கும் ஓட முடியாது. அப்படி ஓடினால் தையல் சரியாக விழாது. அதன் ஓட்டம் நாலு இன்ச்சும், 4 அடியும் உள்ள கட்டையின் மேல் தான் இருக்க வேண்டும். நம் வாழ்க்கையிலும் பாருங்களேன். நமக்கென்று ஒரு எல்கை இருக்கும். அந்த எல்கைக்குள் தாம் இருக்க முடியும். காலம் மற்றும் இடம் என்ற இரண்டு முக்கிய இயற்கை விதிகளால் நாம் கட்டப்பட்டிருக்கிறோம். 1981 லிருந்து 2031 வரை என் ஓடுகட்டை ஓட வேண்டுமென்றால், அவ்வளவு தான் ஓட முடியும். இந்த ஆண்டுகளில் இந்தந்த இடங்களில் தான் நான் இருக்க முடியும் என்றால் இங்கு மட்டும் தான் இருக்க முடியும். தான் ஆசைப்படும் இடம் ஓடுகட்டைக்குக் கிடைக்காவிட்டாலும் அது அங்குதான் ஓட வேண்டும்.

ஆ. ஓடுகட்டையின் ஓட்டம் முன்னும் பின்னும். முன்னும் பின்னும் ஓடுவது எனக்கு போரடிக்கிறதோ என்று நிற்கவோ, நான் நேர போகிறேன் என்ற பாய்ந்து சுவரில் முட்டவோ செய்தால் ஆபத்து கட்டைக்குத் தான். நம்ம வாழ்விலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அப்புறம் பாருங்களேன் நாமளும் சபை உரையாளர் மாதிரி சொல்ல ஆரம்பிச்சுடுவோம்: 'இந்த உலகில் புதியது என்று எதுவும் இல்லை!' ஆம் நான் இன்று பார்த்ததைத் தான் நாளை பார்ப்போம். ஏதோ ஒருவகையில் வாழ்க்கையில் நாம் அனுபவித்த ஒன்றைத் தான் வேறு ஒன்றாகப் பார்க்கிறோம். உதாரணத்திற்கு, தமிழ் சீரியலை பாருங்களேன். 'சித்தி' என்ற மெகாதொடர் கதைதான் 'தெய்வம் தந்த வீடு'. கொஞ்சம் பேக்ரவுண்ட், கேரக்டர்ஸ் சேன்ஜ் அவ்வளவு தான். அல்லது விஜய் டிவி சூப்பர் சிங்கர் பாருங்களேன்: பாட்டும், பாடுபவரும் மட்டும் தான் வேறு. மற்றபடி கான்செப்ட் ஒன்றுதான். அன்னைக்கு நம்ம கையில டெலிஃபோன் இருந்துச்சு. இன்னைக்கு செல்ஃபோன் இருக்கு. ஆனா, ரெண்டுலயும் காசு இருந்தா தான் பேச முடியும். பிறந்தப்ப பேபி சேர்ல போனோம், படிக்கிறப்ப சைக்கிள்ல போனோம், அன்னைக்கு பைக்ல போனோம். இன்னைக்கு கார்ல போறோம் - எல்லாம் சக்கரம் தான், ஸ்டரக்சர் தான் வேற.

இ. ஓடுகட்டையின் ஓட்டம் நெசவாளன் கையில். ஓடுகட்டை ஒரு இன்ஸ்டுருமென்ட். அவ்வளவுதான். அதைப் பயன்படுத்துபவர் நெசவாளன் தான். நெசவாளன் தான் அதன் ஓட்டத்தை கூட்டவோ, குறைக்கவோ, நிறுத்தவோ முடியும். இவ்வளவு பாவை நான் நெய்திருக்கிறேன். நானே என் ஓட்டத்தை முடிவு செய்து கொள்கிறேன் என்று தறியால் சொல்ல முடியாது. நம் வாழ்விலும் நாம் எல்லா முடிவுகளையும் எடுத்தாலும், நம் உடல், வளர்ச்சி, நோய் போன்ற முடிவுகளை நம்மால் எடுக்க முடிவதில்லையே. எனக்கு இந்த வாரம் சனிக்கிழமை காய்ச்சல் வரும் என்று நம்மால் சொல்ல முடியுமா? நான் அடுத்த முறை ஷாம்பு போட்டு குளிக்கும் போது ஐந்து முடிகள் கொட்டும் என்று நம்மால் சொல்ல முடியுமா? 'ஒவ்வொரு முறை நாம் நம் டைரியில் ட்டு-டு லிஸ்ட் எழுதும் போதும், டைரியில் அப்பாய்ன்ட்மெண்ட் குறிக்கும் போதும் கடவுள் சிரிப்பார்!' என்று சொல்வார்கள். என்ன தான் எழுதினாலும் நம் ஓட்டம் நின்றுவிட்டால் எந்த அப்பாய்ண்;ட்மென்டிற்கு நாம் போக முடியும்? ஓடுகட்டையின் தேவை முடிந்தால் அந்தத் தறிக்கு பாவில் இடமில்லை. என் கலர் நல்லா தான இருக்கு. இன்னும் கொஞ்சம் சிகப்புலயே நெய்தா நல்லா தான இருக்கும் என்று நாம் சொல்ல முடியாது. சிகப்பு நூல் இவ்வளவு தான் ஓட வேண்டும். பச்சை நூல் இவ்வளவு தான் ஓட வேண்டும். அப்படியிருந்தால் தான் நெசவாளன் நினைத்த டிசைன் பாவில் வரமுடியும்.

ஆக, ஓடுவது எவ்வளவு நாளோ! ஓடும் வரை நம் கோட்டில் சரியாக ஓடினால் போதும். நம் கோடு, நாம் வந்த பாதை என இறுக்கம், சோர்வு வந்தாலும் நாம் எதற்காக பாவில் ஏறினோமோ அந்த வேலையை முடித்து விடுவோம்.

'என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும் விரைந்தோடுகின்றன!'


3 comments:

  1. இன்றையப்பதிவு...இறைவனின் திட்டத்திற்கு நம்மைக்கையளித்து வாழ்க்கை நம் கரம்பிடித்து நடத்திச்செல்லும் திசையில் நடப்பதுதான் விவேகம் என்பதைத் தறியின் செயல்பாட்டோடு ஒப்பிட்டுக்கூறியிருப்பது அருமை.ஆனால் இந்தத் 'தறி', 'பாவு'..இவர்களுக்கும் மேலாக என்னை இன்று கவர்ந்தது ஒரு 10 வயதுச் சிறுவனின் பொறுப்புணர்ச்சியும்,வாழ்க்கையை அவன் அக்கறையோடு பார்த்த விதமும் தான்.தன் சக வயது தோழரெல்லம் விடுமுறையை வேறு விதமாகும் கழிக்க இவன் தான் வாங்கும் சம்பாத்தியத்தில் புத்தகம் வாங்குதைப்பற்றி யோசிக்கிறான்.இன்று தான் கடந்து வந்த திசையைத் திரும்பிப்பார்த்து அதைப் பகிரங்கமாகப் பகிர்ந்து கொள்ளும் இவர் இன்றையத் தலைமுறையினருக்கு ஒரு எடுத்துக்காட்டு.தந்தையே! தாங்கள் தொடவேண்டிய உயரங்கள் இன்னும் இருக்கின்றன.இறைவன் தங்களை வழிநடத்துவாராக!

    ReplyDelete
  2. Anonymous2/09/2015

    Good morning Yesu. I remember that I have listened to you earlier the story of a pencil in HIS hand. Similarly today you have nicely brought out the spinning instrument. Here is your handmade Lord. Le thy will be done unto me.

    ReplyDelete
  3. Thanks IAS for the wishes. How are the novena celebrations on? Have a good day.

    ReplyDelete