Monday, February 2, 2015

அர்ப்பணமும், மறு அர்ப்பணமும்

'மணமானவர் தன் பெண்ணைக் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
மணமாகாதவர் ஆண்டவரைக் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.' என்று தூய பவுலடியாரின் வார்த்தைகளை (காண்க. 1 கொரிந்தியர் 7:32-35) இன்றைய திருப்பலியில் இரண்டாம் வாசகம் வாசித்துக் கொண்டிருந்தபோது, இன்றைக்கு பவுலடியார் இதே பகுதியை எழுதினால்

'மணமானவர் தன் பெண்ணைக் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். மணமாகாதவர் எல்லாப் பெண்களையும் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்' என்று எழுதுவாரோ என நினைக்கத் தோன்றியது.

நாளை பிப்ரவரி 2. ஆண்டவராகிய இயேசுவை அவர்களின் பெற்றோர் எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த திருநாள். இந்த நாளை அர்ப்பணித்தவர்களின் நாள் என்று திருஅவை அழைக்கிறது. அதாவது, கிறிஸ்துவின் பணிக்காக தன்னை அர்ப்பணித்தவர்களின் அர்ப்பணத்தைக் கொண்டாடும் நாள் இந்நாள்.

இந்த நாளை நல்லமுறையில் கொண்டாடவும், இந்த நாளில் என்னையே இறைவனுக்கு மறுஅர்ப்பணிப்பு செய்யவும் முடிவெடுத்து நேற்றைய தினம் பாவசங்கீர்த்தனத்திற்கு சென்றேன். நான்கைந்து மாதங்களாக ஒப்புரவு வழிபாட்டிற்கே போகவில்லை. போகக் கூடாது அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. ஒப்புரவின் இறுதியில் அந்த அருட்பணியாளர் திபா 18 ஐ வாசிக்கச் சொன்னார். என்ன ஒரு கோஇன்சிடன்ஸ். இந்தத் திருப்பாடல் தான் வருகிற சனிக்கிழமை தேர்வில் நாங்கள் எபிரேய மொழியிலிருந்து இத்தாலியனுக்கு மொழிபெயர்ப்பு செய்யும் திருப்பாடல்.

ஏற்கனவே தெரிந்த திருப்பாடல் என்றாலும் மீண்டும் எடுத்து வாசித்தேன்!
அதில் என்னைத் தொட்ட மூன்று வசனங்களை மட்டும் எடுத்து இந்த அர்ப்பணிப்பின் நாளோடு இணைத்து இன்று சிந்திக்க விழைகிறேன்:

அ. ஐ லவ் யூ ஆண்டவரே, ஏனெனில் நீயே என் ஆற்றல்! (திபா 18:1)

'அன்பு செய்கிறேன்' அப்படின்னு மொழி பெயர்த்தா ரொம்ப ரெலிஜியசா இருக்கும். அதனால 'ஐ லவ் யூ' அப்படின்னு மட்டும் வைத்துக்கொள்வோம். இங்கே பயன்படுத்தப்படும் வினைச்சொல்லின் ஆச்சர்யம் என்னவென்றால், இந்தச் சொல் எபிரேய பைபிள் முழுவதும் வேறு எந்த இடத்திலும் பயன்படுத்தப்படவில்லை. மேலும், மனிதன் ஒருவன் கடவுளைப் பார்த்து 'ஐ லவ் யூ' அப்படின்னு சொல்லும் இடம் இது ஒன்று மட்டும்தான். கடவுள் மனிதனைப் பார்த்துச் சொல்லும் இடங்கள் நிறைய இருக்கின்றன. அதாவது, இந்தப் பாடலின் பின்புலம் எதிரியின் கையிலிருந்து தாவீது பெற்ற விடுதலை. அந்த விடுதலையின் காற்றை சுவாசிக்கின்ற தாவீதுக்கு எந்த அளவுக்கு எதிரிகளின் கஷ்டம் இருந்திருக்கிறது பாருங்கள். இவ்வளவு நாள் இந்த எதிரிகளை அழிப்பதற்காக தன்னையும், தன் படைகளையும் மட்டுமே அன்பு செய்து கொண்டிருந்தார் தாவீது. இன்று எதிரியும் இல்லை. ஆக படைகளும் தேவையில்லை. இனி முழுமையாக கடவுளை அன்பு செய்யலாம். கடவுளுக்கு எவ்வளவோ பண்புகள் இருந்தாலும் கடவுளை ஆற்றல் என்று சொல்கின்றார்.

எனக்கு நேத்து வரைக்கு திருமணம் முடிக்காமல் இருப்பது ஒரு குறையாகவும், இயற்கைக்கு முரணானதாகவும் நினைக்கத் தோன்றியது. ஆனால், நேற்று இரவே நான் இனி இப்படி நினைக்கப் போவதில்லை என முடிவு செய்துவிட்டேன். திருமணம் முடித்த ஒருவருக்கு ஆற்றல் எங்கிருந்து வருகிறது? தன் பார்டனரிமிருந்து அல்லது அவர்களுக்கு இடையே இருக்கும் காதலில் இருந்து. நானே நிறைய நேரங்களில் என் ஆற்றலை ஏதாவது பார்ட்னர் வைத்துக்கொள்வதில் தேடியிருக்கிறேன். 'அவங்க கூட இருந்தா நல்லா இருக்கும்!' 'இவங்ககூட இருந்தா நல்லா இருக்கும்!' ஆனா நாளின் இறுதியில் உட்கார்ந்து யோசித்தால் இவர்களிடம் நான் ஆற்றலைப் பெற்றதை விட, ஆற்றலை இழந்த தருணங்கள் தான் அதிகமாக இருக்கும். அர்ப்பண நிலையில் இருப்பவர்களின் கன்னிமை என்று சொல்வது இதுதான் - ஆண்டவர் மட்டுமே ஆற்றலாக இருக்க வேண்டும். 'கன்னிமை' - இதெல்லாம் வாய்ப்புக் கிடைக்காதவன் பேசுற பேச்சு, செக்சும் ஓரு பாடி லேங்வேஜ்தான், கைகுலுக்குற மாதிரி தான் - இப்படி நிறைய சமரசங்கள் செய்யப்படுவது பற்றி நான் கேள்விப்பட்டதுண்டு. ஆனால், கன்னிமைக்கு சமரசமே இல்லை. நேத்து எங்க பிரஃபஷர் கிட்ட கேட்டேன். என்னைவிட ரெண்டு வயசு மூத்தவர். ஆஸ்டிரியாக் காரர். ஆஸ்ட்ரியன் பொண்ணுங்கலாம் அழகா இருப்பாங்களே! நீங்க உங்க ஊருக்குப் போகும் போது பார்ப்பீங்களா! அப்டின்னு கேட்டேன். ரொம்ப கூலா சொன்னார்: 'அவங்கதான் அழகு அப்படின்னு நினைக்கிற வரைக்குத் தான் அவங்களைப் பார்க்கத் தோணும். அவங்கள விட இன்னொரு அழகை நாம் பார்த்துட்டா அப்புறம் அவங்களைப் பார்க்கணும்னு தோணாது. நான் என்னோட குருத்துவத்துல அந்த அழகைப் பார்த்துட்டேன். அதனால அவங்க எனக்க இப்போ பெரிசா தெரியல. எப்பவும் நாம கீழ இருந்து மேல போகணுமே தவிர, மேல இருந்து கீழ வரக்கூடாது.' ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது.

கன்னிமைக்கு சோதனை வரும்போதெல்லாம், ஆண்டவரே என் ஆற்றல் என்பதை நான் நினைவுகூற வேண்டும் என்பதே எனது முதல் செபம்.

ஆ. அவர் என் கால்களை மானின் கால்களைப் போலாக்குகின்றார். உயர்ந்த இடத்தில் என்னை நிலைநிறுத்துகின்றார் (18:33)

இந்த வசனத்தை அபக்கூக்கு 3:19லிம் வாசிக்கலாம். அதாவது தன் கால்கள் தன் எதிரிகளின் வலைகளில் சிக்கிங்கொண்டதாக 4-5 வசனங்களில் கதறி அழும் தாவீது, ஆண்டவர் தந்த விடுதலையை அனுபவித்தவுடன் ஒரு பெரிய மலை உச்சியில் எந்த ஒரு நெருக்கடியும் இல்லாதவாறு தான் நிற்பதாக எழுதுகின்றார்.

அர்ப்பண வாழ்வின் இரண்டாம் வாக்குறுதி: எளிமை. அதாவது, ஏழ்மை. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆனால், நாம் எளிமை என்ற இப்போதைய பயன்பாட்டுச் சொல்லையே எடுத்துக்கொள்வோம். 'நாளைக்கு நமக்கு என்ன நடக்கும்?' - இந்தக் கேள்வி தரும் பயம் தான் இந்த இரண்டாவது வாக்குறுதிக்கு பெரிய சவால். நாளைக்கு என்னைய யாரு மதிப்பா? என்னய யாரு பாத்துக்குவா? இந்த இரண்டு கேள்விகள் தாம் இந்த வாக்குறுதியோடு என்னை சமரசம் செய்து கொள்ள வைக்கிறது. மாசம் மாசம் வாங்குற சம்பளத்துல ஃபீஸ் கட்டினது போக கொஞ்சம் சேர்த்து வைக்கணும் அப்படின்னு நினைக்கிறதே இந்த வாக்குறுதிக்கு எதிரான செயல்தான்.

நான் இந்த விடுமுறையில திருச்சிக்குப் போனேன். சத்திரம் பேருந்து நிலையத்தின் அருகில் வசந்தம் ஓட்டல். மணி காலை 11:00. காலைச்சாப்பாடு சாப்பிடலாம் என போனால் கொஞ்சப் பேர் அந்நேரமே மதியச் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இருந்தாலும் தோசை ஆர்டர் செய்தேன். நான் சாப்பிடுவதையே ஒரு பாட்டி பார்த்துக் கொண்டிருந்தது. தலையில் பிளாஸ்டிக் கவரை தொப்பி போல அணிந்திருந்தார். அவரும் அங்கே வேலை செய்பவர் என உறுதியானது. எனக்கு முந்தைய டேபிளின் எச்சில் இலைகளை அகற்றிக் கொண்டிருந்தார். நான் சாப்பிட்டு முடித்து கைகழுவித் துடைக்கும் நேரம் என் டேபிளுக்கு வந்தார். வந்தவர், 'என்ன தம்பி! ஊருக்குப் போய்ட்டு வர்றீங்களா? காலேஜ் தொடங்கிட்டாங்களா!' அப்படின்னார். பக்கத்துல செயின்ட். ஜோசப் காலேஜ் இருந்ததால் என்னையும் அந்தக் கல்லூரி மாணவர் என நினைத்திருக்கிறார். நான் பதில் ஒன்றும் சொல்லாமல் மெல்லியதாகச் சிரித்தேன். சர்வருக்கு டிப் கொடுத்துவிட்டு இவருக்கும் கொடுத்தேன். 'போய்ட்டு வாங்க!' என்றார். உங்க பேரு? - ஆரோக்கிய மேரி. வயது என்ன? - 67 என்றார். பேருந்தில் வந்து அமர்ந்த போது என் மனசு முழுவதும் அவர்தான் இருந்தார். 67 வயசுல ஒரு பாட்டி அன்றாடம் வேலை செய்தால் தான் சாப்பாடு. இந்த மாதிரி எத்தனையோ ஆரோக்கிய மேரிட்ட தான நாம காணிக்கை வாங்குறோம். சாப்பிடுறோம். பயணம் செய்றோம். அப்படி இப்படி நிறைய எண்ண ஓட்டம் இருந்தது.

நான் வாங்குற ஒவ்வொரு பைசாவுக்கும் பின்னாலும் எத்தனையோ ஆரோக்கிய மேரிகளின் வியர்வைதான் இருக்கின்றது. அந்த வியர்வைக்கு நான் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும். எளிமை அப்படிங்கிறது நான் சிம்பிளா இருக்குறதுல தான் இருக்கு அப்படின்னு நினைக்கிறத விட அவங்களோட என்னை எந்தளவுக்கு ஐக்கியமாக்க முடியுது அப்படிங்கிறதுலதான் தெரியும். மற்றொரு பக்கம், என்னதான் வறுமை, ஏழ்மை நம்மை வறுத்தினாலும், கடவுள் போதும் அப்படின்னு அர்ப்பணம் செய்துட்டா அவர் நம் கால்களையும் மான்களின் கால்களைப் போலாக்குவார் - இதுதான் என் இரண்டாம் செபம்.

இ. ஆண்டவரே, நீர் என் விளக்குக்கு ஒளியேற்றுகின்றீர். நீர் என் இருளை ஒளிமயமாக்குகின்றீர்! (திபா 18:28)

கடவுள் அணைந்து கிடந்த தன் விளக்கில் ஒளியேற்றுவதாகப் பாடுகின்றார் தாவீது. எதிரிகள் பின்னால் ஓடிக்கொண்டேயிருந்ததால் ஒருவேளை தன் விளக்கை அவர் கவனிக்க முடியாமல் அது அணைந்து போயிருக்கலாம். அல்லது அவர் அதை கண்டுகொள்ளாமல் விட்டிருந்ததால் விளக்கு அணைந்திருக்கலாம். ஆனால், இறைவன் இவரின் இருளை அகற்றுகின்றார்.

அர்ப்பணிப்பு நிலையின் மூன்றாம் வாக்குறுதி: கீழ்ப்படிதல். அதாவது இதில் ஆயருக்கு கீழ்ப்படிவதும், புரொவின்சியலுக்குக் கீழ்ப்படிவதும் முதன்மையானதல்ல. ஒருசிலர் ஆயரின் திருவுளம் தான் கடவுளின் திருவுளம். நம்ம புரொவின்சியல் என்ன நினைக்கிறாங்களோ. அதுதான். கடவுள் அவர் வழியா தான் பேசுறார். இப்படியெல்லாம் சொல்வாங்க! ஏன் ஆயர் வழியா பேசுற கடவுள் நம்ம வழியா பேச மாட்டாரா? இன்னைக்கு மறைமாவட்டம் மற்றும் துறவற இல்லத்தில் எடுக்கப்படும் முடிவுகள் எல்லாம் இறைவனின் திருவுளம் அப்படின்னு நான் சொல்ல மாட்டேன். 'காசு எடுக்கலன்னா நீ ரத்தம் கக்கி சாவ' அப்படின்னு வடிவேல் ஜோக்ல பயம் காட்டற மாதிரி வேணா இந்த இறைத்திட்டத்தையும், இறைத் திருவுளத்தையும் நாம சொல்லிக்கலாம். இதுக்காக, ஆயரையும், புரொவின்சியலையும் தவறு எனச் சொல்லவும் முடியாது. அதே இடத்துல நாம இருந்தாலும் நம்ம முடிவுகளையும் பலர் அல்லது பல சூழ்நிலைகள் நிர்பந்திக்கலாம்.

கீழ்ப்படிதல் அப்படிங்கிறத எப்படிப் புரிஞ்சக்கலாம் அப்படின்னா? எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்வதுதான் கீழ்ப்படிதல். உதாரணத்திற்கு, நம்ம வீட்டுல வேலைக்கு ஒரு பையன் இருக்கான்னு வச்சிக்குவோம். அவன் இன்னைக்கு மதியம் சினிமா போகனும்னு நினைக்கிறான். ஆனா, நாம காலையில கூப்பிட்டு மதியம் இன்னைக்கு தோட்டத்துல ஒரு வேலை இருக்குனு சொல்றோம். அவனுக்கு முகம் சுருங்கிடுது. 'ச்சே! நம்ம ஆசையில ஒரு லாரி மண்ண அள்ளி; போட்டுட்டானே!' அப்படின்னு நம்மள அவன் திட்டுவான். இருந்தாலும் தோட்டத்துக்கு வேலைக்குப் போயிடுவான். ஏன்? பயம். ஆனா, வேலையை ஒழுங்கா பார்ப்பானா? நினைப்பு ஃபுல்லா 'ஐ' படம் எமி மேல தான் இருக்கும். ஆனா, இந்தப் பையன் சினிமா போகனும் அப்படிங்கிற எதிர்பார்ப்பு இல்லாம இருந்தா இந்நேரம் சந்தோசமா இருப்பான். (சின்ன டைவர்சன்: 'ஐ' பட சுருக்கம் இதுதான் - ஒரு பொண்ணு நிமிர்ந்து அழகா நிற்கறதுக்காக - ஐந்துபேர் தங்கள் உருவங்களை இழந்து போறாங்க!)

ஆக, எதிர்பார்ப்புகள் குறைந்து, வருகிற சர்ப்ரைசஸை மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது எனது மூன்றாம் செபம்.

வாழ்த்துகள்!

3 comments:

  1. அழகான பதிவு." அர்ப்பண வாழ்க்கை".... அழகான வார்த்தை. துறவறமோ, இல்லறமோ, எல்லோரது வாழ்க்கைக்குமே அர்த்தம் கொடுப்பது இந்த ' அர்ப்பணிப்பு' தான்.தந்தையே தாங்கள் இந்த 18 ம் திருப்பாடலைக் கையாண்டுள்ள விதம் மிக அழகு.அன்பு, எளிமை, கீழ்ப்படிதல்...இவற்றை துறவறத்தார் வாக்குறுதிகள் என்ற பெயரில் தங்கள் வாழ்க்கையுடன் இணைத்துக் கொண்டாலும்,இவற்றைத் தங்கள் வாழ்வின் வழிகாட்டிகளாகப் பார்க்கும் இல்லறத்தாரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.தன்சக மனிதனின் மகிழ்ச்சிக்காக வாழும் எவருமே வாழ்வது ' அர்ப்பண வாழ்க்கைதான்'.தந்தையே! இந்நாளில் தங்களின் 'அர்ப்பண வாழ்வு' சிறக்கவும், தாங்கள் மேற்கொண்டுள்ள வாக்குறுதிகளைப் பின்பற்றுவதில் இறைவனின் திருக்கரம் தங்களை வழிநடத்தவும் சிறப்பாக செபிப்பேன்.திருநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. Anonymous2/03/2015

    After reading your reflection I had to read psalm 18 and enjoyed prayerful reading of it. Love to read more Yesu

    ReplyDelete
  3. Anonymous2/03/2015

    After reading your blog i had to read psalm 18. I really enjoyed prayerful reading of it.

    ReplyDelete