Thursday, February 19, 2015

உன் கையை நீட்டி

'வாழ்வையும், சாவையும் உனக்கு முன்பாக வைக்கிறேன்!' (இச 30:15)

'உன்மேல் இன்று நான் விண்ணையும் மண்ணையும் சான்றாக அழைத்து, வாழ்வையும் சாவையும், ஆசியையும், சாபத்தையும் வைக்கிறேன்' (இச 30:19)

'உனக்கு முன் நீரையும் நெருப்பையும் அவர் வைத்துள்ளார். உன் கையை நீட்டி உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள்!' (சீஞா 15:16)

நாளைய முதல் வாசகத்தின் தொடக்கத்தில் வரும் 'வாழ்வு, சாவு' என்ற வார்த்தைகள் மேற்காணும் மூன்று இடங்களில் விவிலியத்தில் வருகின்றன.

நேற்று நாம் விட்ட இடத்தில் இருந்து தொடங்குவோம். 'உங்கள் தந்தை' என்ற இரண்டு வார்த்தைகளை நாம் சிந்தித்தோம். கடவுளை நம் தந்தை என அழைப்பதில் இரண்டு சிக்கல்கள் உள்ளன:

அ. உருவகம். விவிலியத்தில் உள்ள உருவகங்களை நாம் பயன்படுத்தும்போதும், மற்றவர்களுக்குச் சொல்லும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எல்லா உருவகங்களும் எல்லாருக்கும் பொதுவானவையாக்க முடியாது. எடுத்துக்காட்டாக, என் அப்பா ஒரு குடிகாரர் என வைத்துக்கொள்வோம். தினமும் குடித்துவிட்டு வந்து என் அம்மாவையும், என்னையும் அடித்து, எந்தவொரு வேலைக்கும் சொல்லாமல், என் குடும்பத்தைக் கண்டுகொள்ளாமல், கண்ட இடங்களில் கடன் வாங்கிக்கொண்டு, வம்பை இழுத்துக்கொண்டு இருக்கிறார் எனவும் வைத்துக்கொள்வோம். இப்போது யாராவது ஒருவர் கடவுள் 'உன் தந்தை' என்று என்னிடம் சொன்னால் உடனடியாக என் மனது 'என் தந்தையைத்தான்' நினைத்து, அதோடு கடவுளை ஒப்பிட்டுப் பார்த்கத் தொடங்கும். ஆக, கடவுள் என் தந்தை என்பது கடவுளைக்குறித்த எதிர்மறை எண்ணத்தைக் கூட என்னில் விதைக்கலாம். ஒருவேளை கடவுள் 'உங்கள் தாய்' என்ற உருவகம் எனக்குச் சிறப்பாகப் பொருந்தலாம். ஆகவே, உருவகங்களை மிகக் கவனமாக நாம் உபயோகிக்க வேண்டும்.

ஆ. சுதந்திரம். கடவுள் என் தந்தை என்றால், என் சுதந்திரம் அதில் எந்த அளவு இருக்கிறது? கடவுளே என் வாழ்வின் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வாரா? அவரது இஷ்டப்படிதான் எல்லாம் நடக்குமா? எல்லாமே ஏற்கனவே திட்டமிடப்பட்டவையா? நான் என் தந்தை ஆட்டுவிக்கும் ஒரு பொம்மையா? எனது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு இடமில்லையா? என்றெல்லாம் நாம் கேட்க முடியும்.

இந்த 'ஆ' விற்கு விடையாக வருவதுதான் இன்றைய நம் சிந்தனைப்பகுதி:

'வாழ்வையும், சாவையும் உன் முன் வைக்கிறேன். நீ கைநீட்டி தேர்ந்துகொள்!'

கடவுள் நம் தந்தை நமக்கு 'சாய்ஸ்' கொடுக்கிறார். 'இது' அல்லது 'அது' என்று நாம் தான் தெரிவு செய்ய வேண்டும். ஆக, கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவில் 'பொறுப்புணர்வோடு கூடிய சுதந்திரம்' இருக்கின்றது. எல்லாம் விதி! என்று சொல்வதற்கு இடமில்லை. மதிக்கும் அங்கே நிறைய இடம் இருக்கிறது.

வாழ்வு என்றால் என்ன?

முதல் ஏற்பாட்டில் வாழ்வு என்பதற்கான அர்த்தம் மூன்று வகைகளில் முன்னேறுகிறது:

அ. கட்டளைகளைக் கடைப்பிடிப்பது. 'தோரா' என்று சொல்லப்படும் முதல் ஐந்து நூல்கள் 'பத்துக் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதை' வாழ்வு என்று முன்வைக்கின்றன. யாரெல்லாம் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறார்களோ அவர்கள் வாழ்வைத் தெரிந்து கொள்கிறார்கள். யாரெல்லாம் கடைப்பிடிக்கவில்லையே அவர்கள் சாவைத் தெரிந்து கொள்கிறார்கள்.
ஆ. சமூக நீதி. 'நெவிம்' என்று சொல்லப்படும் இறைவாக்கு நூல்களில் 'சமூக நீதி' என்பது வாழ்வு என முன்னிறுத்தப்படுகிறது. யாரெல்லாம் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் களைய முயல்கிறார்களோ, யாரெல்லாம் தங்கள் சகோதர, சகோதரிகளை நீதியோடு நடத்துகிறார்களோ அவர்கள் வாழ்வைத் தெரிந்து கொள்கிறார்கள். மற்றவர்கள் சாவைத் தெரிந்து கொள்கிறார்கள்.

இ. மாசற்ற கையும், தூய இதயமும். 'கத்துவிம்' எனப்படும் எழுத்து நூல்கள் (திருப்பாடல்கள், யோபு உள்ளிட்டவை) ஒருவரின் தனி மனித நாணயத்தையும், ஒழுக்கத்தையும் வாழ்வின் அளவுகோலாக முன்வைக்கின்றன.

இரண்டாம் ஏற்பாட்டில், இந்த மூன்றையும் தாண்டி இயேசு தன் புதிய கட்டளையின் வழியாக 'வாழ்வு' என்ற சொல்லுக்கு புதிய அர்த்தம் கொடுக்கின்றார்:

'நான் உங்களை அன்பு செய்தது போல, நீங்கள் ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள்!'

ஆக, அன்பு என்ற ஒன்றையொட்டிய அனைத்தும் வாழ்வு. அதிலிருந்து நீங்கும் அனைத்தும் சாவு.

நம் முன்பின் தெரியாதவர்களைப் பார்த்து ஒரு சின்ன புன்முறுவல் செய்யும் போது,

'நய்-நய்'னு சொல்லிக்கிட்டிருக்கும் நம்ம குழந்தைக்கு அருகில் அமர்ந்து அது சொல்ல வருவதைக் காதுகொடுத்துக் கேட்கும்போது,

தேவையில் இருக்கும் ஒருவருக்கு நாம் உதவிக்கரம் நீட்டும்போது,

பிறரைப் பற்றி இல்லாத பொல்லாதது பேசாமல் மௌனமாக இருக்கும்போது,

நம்மைச் சுற்றி நடக்கும் அரசியல், சமூக நிகழ்வுகளைக் குறித்து 'இது ஏன்?' என்று நாம் கேட்கும்போது,

'நான் வேண்டுவது எதுவும் கிடைக்கவில்லையென்றாலும்' கடவுள் மேல் கோபப்படாமல் 'என் தந்தை' என்று அவரை அழைக்கும் போது,

இப்படி நாம் தினமும் வாழ்ந்து கொண்டேதான் இருக்கின்றோம். தொடர்ந்து வாழ்வை மட்டுமே தேர்ந்து கொள்வோம்.


1 comment:

  1. இன்றைய வலைப்பதிவின் தொடக்கத்தில் வரும் இசையாஸின் வரிகள் என் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தவை ..பல காரணங்களுக்காக.ஆம்..நம் தந்தை ஒரு 'ரிங் மாஸ்டர்'அல்ல; அவர் நம் சுதந்திரத்தையும் மதிப்பவர்' என நமக்கு உணர்த்தும் வரிகள்.' வாழ்வின்' அர்த்தம் என்ன வென்று சொல்லும் இறுதிவரிகள்...இவை போதுமே நாம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறோம் என்பதை நமக்கு உணர்த்த.தந்தையே எளிய வரிகளில் பெரிய விஷயங்களைக்கூறியிருக்கும் தங்களை இறைவன் ஆசீர்வதிக்கட்டும்!!!

    ReplyDelete