Saturday, February 14, 2015

வெள்ளை நிறத்தில் ஒரு காதல்

இந்தத் தலைப்பு சில வருடங்களுக்கு முன் நான் படித்து ரசித்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் 'காவி நிறத்தில் ஒரு காதல்' என்பதன் தழுவல். தலைப்பு மட்டும் தான்! மேட்டர் சொந்தமானது! சரியா?

நாளை காதலர் தினம்.

வழக்கமாக காதலர் தினத்திற்கு சொல்லப்படும் ஒரு துணுக்கு என்ன தெரியுமா?

'பிப்ரவரி 14 காதலர் தினம் அன்று ரொம்ப ஆட்டம் போடாதீங்க. ஏன்னா இன்னையிலயிருந்து சரியா 10 மாசத்துல குழந்தைகள் தினம் வந்துடும் (நவம்பர் 14)!'

இந்த ஆண்டு வாட்ஸ்ஆப்பில் வலம் வரும் இதையொட்டிய துணுக்கு:

'ஜனவரி 14 பொண்ணுங்க பசங்களுக்கு பொங்கல் குடுப்பாங்க.
பிப்ரவரி 14 பொண்ணுங்க அதே பசங்களுக்கு அல்வா கொடுப்பாங்க!'

நாளைக்கு நம்ம ஊருல பார்க், பீச்சுனு நம்ம காவி கட்சிக்காரங்க தாலியோட திரிவாங்க. லவ்வர்ஸை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பார்கள். அல்லது கழுதைக்கும் யாருக்குமாவது திருமணம் செய்து வைத்து காதலர் தினத்திற்கு தங்கள் எதிர்ப்பைக் காட்டுவர்கள். அவங்களோட ஆர்க்யுமென்ட் என்னன்னா, வலண்டைன்ஸ் டே எனப்படும் காதலர் தினம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாம்.

'காதலர் தினம்' வேண்டுமானால் இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், காதல் இறக்குமதி இல்லையே. இராமன் சீதையின் மேலிருந்த காதலால் தானே வில்லை முறித்து அவளை மணந்து கொண்டார். காதல் இல்லாமலா திருவள்ளுவர் 'காமத்துப்பால்' என்று தன் திருக்குறளில் பெரிய இடத்தை ஒதுக்கினார்? அல்லது காதல் இல்லாமல் தான் 'அகநானூறு' வந்ததா? நம் மண்ணின் இலக்கியங்கள் மட்டுமல்ல, அனைத்து இலக்கியங்களையும், ஓவியங்களையும், நாடகங்களையும், சமய நூல்களையும் அலங்கரிக்கும் ஒரு வார்த்தை 'காதல்'. பைபிளின் 'இனிமைமிகு பாடலும்' காதலின் உச்சம்.

வெளிநாட்டு தயாரிப்போ, நம்ம மோடி சொல்ற மாதிரி 'மேக் இன் இந்தியா' தயாரிப்போ, நாளை காதலர் தினம். அவ்வளவுதான்!

காதல் அப்படின்னாலே சிலர் முகம் சுளிப்பார்கள். 'ஏன் ஃபாதர் இதப்பத்தியெல்லாம் பாதர் பண்றார்?' என்று கூட கேட்பார்கள். காவிநிறத்தில் காதல் இருக்க முடியுமென்றால், நான் அணியும் வெள்ளை நிறத்திலும் காதல் இருக்க முடியும் என்பதே என் வாதம்.

என் காதலைத் தேடுவதற்கு முன், காதல் பற்றிய சில புரிதல்களைப் பார்க்கலாம்.

காதலைப் பற்றி நமக்கு நேரடியான பாடத்தைத் தருவது சினிமா. இதுவரை வந்திருக்கிற தமிழ் சினிமாக்களை எடுத்துப் பார்த்தால் 99.9 சதவிகம் காதல் பற்றியவைதான்: திருமணத்திற்கு முன் காதல், திருமணத்திற்குப் பின் காதல், இணைந்த காதல், பிரிந்த காதல், நட்பில் தொடங்கி காதலில் கனியும் காதல், காதலில் தொடங்கி நட்பாய் மாறும் காதல், கள்ளக்காதல், நல்ல காதல், ஒருதலைக் காதல், பொருந்தாக் காதல், ஒரு காதல் தோற்றால் மறு காதல், காதலினால் வரும் மோதல், கண்டதும் காதல், காணாமலே காதல், கடிதவழி காதல், அண்ணி மேல் காதல், கொழுந்தன் மேல் காதல், வெளிநாட்டுக் காதல் என ஏறக்குறைய காதலின் எல்லாப் பரிமாணங்களையும் வைத்து விட்டார்கள்.

இந்தச் சினிமா காதலைப் பற்றி நமக்குத் தந்திருக்கும் தவறான புரிதல்கள் மூன்று:

அ. ஐ லவ் யூ. நாம யாரையாவது பார்த்து 'ஐ லவ் யு' அப்படின்னு சொன்னா அது காதல் என்றும், அல்லது காதலர்கள் மட்டும்தான் இந்த 'ஐ லவ் யு' சொல்ல முடியும் என்றும், 'ஐ லவ் யு' சொல்லிவிட்டால் உடனே திருமணம் எனவும் பலர் நினைக்கின்றனர். இந்தக் கருத்து முற்றிலும் தவறானது. 'ஐ லவ் யு' சொல்லாமலும் காதல் இருக்கலாம். காதல் இல்லாமல் இருக்கும் இடத்திலும் 'ஐ லவ் யு' சொல்லலாம். நான் இப்பொழுதெல்லாம் யாரிடமும் தொலைபேசி உரையாடலை நிறைவு செய்யும் போது 'லவ் யு' என்றே சொல்லி முடிக்கின்றேன். இது என் அமெரிக்க அம்மாவிடம் நான் கற்றது. அதாவது நாம் ஃபோன் பேசுவதே அன்பின் வெளிப்பாடுதான் என்றாலும் அந்த அன்பை நிறைவாக்கி இரண்டே வார்த்தைகளில் நிறைவு செய்யத்தான் இந்த 'லவ் யு'. இப்படி 'லவ் யு' சொன்னதால் 'அப்புறம் எதுக்கு எனக்கு 'ஐ லவ் யு' சொன்னீங்க?' என்று நான் ஒரு பொண்ணிடம் மாட்டிக் கொண்ட நிகழ்வும் உண்டு.

ஆ. காதல் செய்தால் திருமணம் செய்ய வேண்டும். இது இரண்டாவது மித். அதாவது காதலிக்கும் எல்லாரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். நம்ம ஊருல நட்புக்கும் காதலுக்கும் உள்ள கோடு மிகவும் மெல்லியது. அதிலும் ஒரு பையன் மற்றொரு பெண்ணிடம் பேசினால், பழகினால், சிரித்தால், முத்தமிட்டால் அதை இன்னும் நாம் காதல் என்று மட்டும்தான் பார்க்கப் பழகியிருக்கிறோம். இதுல 'சொல்வதெல்லாம் உண்மை' போன்ற டிவி பஞ்சாயத்து நிகழ்வுகளைப் பார்க்கும் போது, 'பழக்கம்' என்ற ஒரு நல்ல உணர்வை 'கள்ளக்காதல்' என்று கொச்சைப்படுத்துகிறார்கள் இந்த பஞ்சாயத்துக்காரர்கள். 'நீ எனிய லவ் பண்றீல! அப்ப என்னயக் கல்யாணம் பண்ணிக்கோ!' என்று ஒருவர் மற்றவரைப் பார்த்துக் கேட்கப்படும் கேள்விக்கு பெரும்பாலும் மௌனமே பதிலே இருக்கிறது. திருமணத்தில் முடியாத காதல் அனைத்தும் தோல்வி என்றே சொல்லப்படுகிறது இந்தச் சினிமாவில். திருமணத்தில் முடியாமல் வாழ்நாள் முழுவதும் வெற்றியோடு இருக்கும் சக்தியும் காதலுக்கு உண்டு.

இ. காதல் வேறு. காமம் வேறு. என்னைப் பொறுத்தவரையில் காதலும், காமமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை. ஒன்றில்லாமல் மற்றொன்று இருக்க முடியாது. காதல் உயிர் என்றால் காமம் உடல். நாமெல்லாரும் வானதூதர்களோ, தேவதைகளோ அல்லர். நமக்கென்று உடல்கள் இருக்கின்றன. இந்த உடலின் சுரப்பிதான் காதல் என்ற உணர்விற்கே காரணம். ஆக, உடலை அன்பு செய்யாமல் உள்ளத்தை மட்டும் அன்பு செய்வது என்பது இயலாதது. ஆக, காதல் இருந்தால் காமம் இல்லை என்று சொல்வதும், காமம் இருந்தால் அங்கே காதல் இருப்பதில்லை என்று சொல்வதும் பொய்.

சரி! என்னதான் சரியான புரிதல்?

காதலின் மையமாக இருப்பது 'அடுத்தவரின் நலனை விரும்புவது!'. இது எந்த உறவில் இருந்தாலும் அது காதல் தான். ஆக, அம்மா மகனையும், அப்பா மகளையும், சகோதரன், சகோதரியையும், தலைவன் தொண்டனையும், கடவுள் பக்தனையும், பக்தன் கடவுளையும், நண்பன் நண்பியையும், குழந்தை பெற்றோரையும், ஆசிரியர் மாணவரையும் காதலிக்க முடியும் - அதாவது, அடுத்தவரின் நலனை விரும்ப முடியும். ஆக, இந்த நாள் இளைஞர்-இளைஞிகளுக்கான அல்லது பதின்பருவத்தினருக்கான நாள் மட்டுமல்ல. இது காதலர் திருநாள் என்று சொல்வதை விட காதல் திருநாள் என்றே நான் சொல்வேன்.

இப்படிக் காதலை மொத்தமாக 'நலம் விரும்புதல்' அல்லது 'அன்பு' என்று சொன்னாலும், காதலின் அர்த்தம் 'அதையும் தாண்டிப் புனிதமானதாகவே' இருக்கின்றது.

காதல் என்ற உணர்வு தனிநபர் சார்ந்தது. அதை நாம் வெளியடையாளங்களை வைத்துத் தீர்மானிக்க முடிவதில்லை. அந்த உறவின் வெளியே நிற்கும் ஒருவருக்கும் அது புரிவதில்லை.

உங்க முதல் காதல் உங்களுக்கு நினைவிருக்கிறதா?

எனக்கு நல்லா நினைவிருக்கிறது.

அப்போது எனக்கு வயது பதினென்று. ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம். சத்திரப்பட்டியில் உள்ள அரசினர் மேனிலைப்பள்ளி. இருபாலர் பள்ளி. பள்ளித் தொடங்கி இரண்டு மாதங்கள் கழித்து எங்களுக்கு புதிய சயன்ஸ் டீச்சர். அவங்க பேரு எஸ்தர் கமலா. அவங்க ரெண்டாவது மகள் 'டயானா டாரதி'. டீச்சரும் மகளும் சிங்கப்பூரிலிருந்து திரும்பி வந்தவங்க. எல்லாரும் சடையும் ரிப்பனுமாய் வரும்போது இந்த டயானா மட்டும் பாப் கட்டிங்கும், ரீத்துமாய் வந்து நின்றாள். ரொம்ப நீளமும் இல்லாமல், ரொம்பக் குட்டையும் இல்லாமல் பச்சை கலர் ஸ்கர்ட், ஒருநாள் ஸ்டார் நெக், ஒரு நாள் பாய்ஸ் நெக், ஒரு நாள் ரௌன்ட் நெக் என்று வெள்ளை வெளேரென்று சட்டை. அந்தச் சட்டையின் ஓரத்தில் அவளின் உடலைக் காயப்படுத்திவிடக்கூடாது என்று கவனாமாய் இருக்கும் 'லேஸ்'. கொஞ்சம் முடியை முன்னால் விட்டு, சைடு வகிடு எடுத்து தலை சீவி, ஒரு நாள் பட்டையாய், ஒரு நாள் மெல்லிய இழையாய் பொருந்தி நிற்கும் கறுப்பு ரீத். இந்த ரீத்து தலைமுடியைத் தாங்குகிறதா, அல்லது தலைமுடி ரீத்தைத் தாங்குகிறதா என்று பார்ப்பவர்களையே குழப்பி விடுவாள் இந்த டயானா. இரண்டு மாதங்கள் லேட்டாக வந்ததால் என் எல்லா பாட நோட்டுக்களையும் அவளிடம் கொடுக்கச் சொல்லி 'காப்பி பண்ணச்' சொன்னாங்க எங்க பழனியம்மா டீச்சர். அந்த நேரத்தில் உருவான ஒருவிதமான ஈர்ப்பு. இதைக் காதல் என்று சொன்னால் தாஜ்மகால் கூட நம்பாதுதான்! இருந்தாலும் 'லைட் எரிஞ்சி, மணி அடிச்சது' மாதிரி இருந்துச்சு. இன்டர்வெல்லில் மிட்டாய் கொடுப்பது, அவள் பேசினால் மட்டும் போர்டில் பெயரை எழுதாமல் இருப்பது, அவளின் பேனாவிற்கு இங்க் அடைத்துக் கொடுப்பது, அவளின் புத்தகங்களுக்கு ப்ரவுன் ஷீட் போட்டுக் கொடுப்பது என்று என் காதல் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்தது. அவளின் ரீத்தை நான் நிறைய முறை தொடவும் முயற்சித்திருக்கிறேன். ஒருவேளை அந்த வயதில் இதுவும் காமம் தான். அவள் சி.எஸ்.ஐ என்பதால் நான் ஆறு மாதங்கள் என் அத்தையோடு அவள் போகும் கோவிலுக்குத் தான் போனேன். ஆறாம் வகுப்பில் லேட்டாய் சேர்ந்தவள், ஏழாம் வகுப்பில் சீக்கிரமாய் டி.சி. வாங்கிட்டு சிங்கப்பூர் போயிட்டா. இன்றும் ராஜபாளையும்-சத்திரப்பட்டி சாலையில் பஸ்சில் செல்லும் போதெல்லாம், வேலாயுதபுரத்தில் இருக்கும் 'அன்பகம்' என்ற அவள் இருந்த வாடகை வீட்டின் பக்கம் கண்கள் செல்லவே செல்கின்றன.

அந்தக் காதலுக்குப் பின் இன்று எத்தனை காதல்கள் வந்தாலும் மனம் அந்த அனைவரிலும் டயானாவைத் தான் பார்க்கிறது.

நாம் மனிதர்களைத் தான் காதல் செய்ய வேண்டும் என்பதல்ல. ராமானுஜத்திற்கு கணிதத்தின் மேல் காதல். ஐன்ஸ்டீனுக்கு இயற்பியின் மேல் காதல், டார்வினுக்கு பூச்சிகளின் மேல் காதல், டாவின்சி ஓவியத்தின் மேல் காதல். மைக்கேலாஞ்சலோவிற்கு சிற்பத்தின் மேல் காதல். ஷேக்ஸ்பியருக்கு நாடகத்தின் மேல் காதல். காதல் என்பது ஒரு உன்னதமான உணர்வு. அடுத்தவரின் நலனை மட்டும் தேடும் உணர்வு.

ஆதலினால் காதல் செய்வீர்!

வெள்ளை நிறத்தில் ஒரு காதல் - அன்றும், இன்றும், என்றும்!


4 comments:

  1. 'வெள்ளை நிறத்தில் ஒரு காதல்'...அழகான தலைப்பு. ஒரு 'முனைவர்' பட்டம் கொடுக்குமளவுக்கு விஷயங்களத் தந்திருக்கிறீர்கள்ஃபாதர்! என்னைப்பொறுத்த வரை நம் புராணங்களிலும்,இலக்கியங்களிலும் பேசப்பட்ட காதல் எல்லாம் அதன் அர்த்தத்தையும்,புனித்த்தையும் தொலைத்து நாட்களாகிவிட்டன.இன்று நாம் பார்ப்பதெல்லாம் 'கண்டிஷனல்' காதல்.தான் விரும்பியவள் தன்னை விரும்பாத காரணத்தால் அவள் மீது 'ஆசிட்' எறிபவன் கூட அதையும் 'காதலின் வெளிப்பாடு' என்றுதான் கூறுகிறான்.தறிகெட்டு ஓடும் மனத்தை நெறிப்படுத்த வரும் ஒரு மென்மையான ஒரு உண்ர்வு தான் 'காதல்'.மைல்கள் இடைவெளி இருப்பினும் ஒருவர் அடுத்தவரை மயிலிறகாய் வருடிக்கொடுக்கும் ஒரு டானிக் தான் 'காதல்'.இது உடல் சார்ந்ததல்ல; உள்ளம் சார்ந்தது.இந்தப்புரிதல் இருப்பின் யாரும் யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம்.என்ன சொல்றீங்க ஃபாதர்???

    ReplyDelete
  2. Anonymous2/14/2015

    Dear Yesu Happy Valentin day. Today we celebrate our parish feast

    ReplyDelete
  3. Anonymous2/15/2015

    Padre oggi tu hai scritto bei pensieri

    ReplyDelete
  4. How did the feast go IAS? Who presided over the feast mass? Have a blessed Sunday.

    ReplyDelete