Saturday, February 21, 2015

மனம் என்னும் பாலை

ஒவ்வொரு ஆண்டும் தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று நம் ஆண்டவராகிய இயேசு பாலைவனத்தில் சோதிக்கப்பட்ட நிகழ்வு நற்செய்திப் பகுதியாகத் தரப்படுகின்றது. இந்ந நிகழ்வை நாம் மத்தேயு (4:1-11), மாற்கு (1:12-13) மற்றும் லூக்கா (4:1-13) நற்செய்திகளில் வாசிக்கின்றோம். இந்த மூவரும் இந்த நிகழ்வைப் பற்றி எழுதுவதில் ஒருவருக்கொருவர் அதிகமாகவே மாறுபடுகின்றனர்.

மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் சாத்தான் இயேசுவை மூன்று வகைச் சோதனைக்கு உட்படுத்துவதாக எழுதுகின்றனர் (மத்தேயு 1-2-3 என்றும் லூக்கா 1-3-2 என்றும் வரிசையையும் மாற்றுகின்றனர்!). ஆனால் இன்று நாம் பார்க்கும் மாற்கு சாத்தான் செய்த சோதனைகளையும், இயேசுவோடு நிகழ்த்திய உரையாடல்களையும் பதிவு செய்யாமல், வெறுமனே இயேசு சோதிக்கப்பட்டார் என ஒரேமூச்சில் முடித்துவிடுகின்றார்.

அ. தூய ஆவியால் இயேசு பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆ. அங்கே அவர் நாற்பது நாள்கள் இருந்தார். அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்.

இ. அங்கு காட்டு விலங்குகளிடையே அவர் இருந்தார்.

ஈ. வானதூதர் அவருக்குப் பணிவிடை புரிந்தனர்.

(மாற்கு 1:12-13)

இந்த நற்செய்திப் பகுதியை அ, ஆ, இ, ஈ என பிரித்து எழுதினால் பொருள் எளிதாக விளங்குகிறது.
இவற்றில் அ-வும், இ-யும், ஆ-வும் ஈ-யும் முரண்படுகின்றன: எப்படி? பாலைநிலம் - காட்டுவிலங்குகள். சாத்தான் - வானதூதர். 

பாலைநிலம் என்றவுடன் வாசகருக்கு நினைவிற்கு வருவது இஸ்ராயேல் மக்கள். 40 நாட்கள் என்றவுடன் நினைவிற்கு வருவது அவர்களின் 40 ஆண்டு பயணங்கள். காட்டுவிலங்குகள் ஆதாமை நினைவுபடுத்துகின்றன. சாத்தானுக்கும் ஆதாமின் மனைவி ஏவாளுக்கும் உள்ள தொடர்பு நாம் அறிந்ததே. வானதூதர்கள் ஆதாம் இறந்தவுடன் அவரை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர் என்பது யூத நம்பிக்கை. ஆக, முதல் இஸ்ரயேலையும், முதல் ஆதாமையும் நினைவுபடுத்துகிறது இந்த நிகழ்வு. முதல் இஸ்ரயேல் யாவே இறைவனுக்கு எதிராக முணுமுணுத்தனர். ஆனால் இரண்டாம் இஸ்ரயேலாகிய இயேசு தன்னையே தாழ்த்திக் கொண்டார். முதல் ஆதாம் கீழ்ப்படியாமையால் பாவத்திற்குக் காரணமானார். ஆனால் இரண்டாம் ஆதாம் கீழ்ப்படிதலால் பாவத்தைக் போக்க வழிசெய்தார். ஆக, இந்த நிகழ்வு எழுதப்படுவதற்குக் காரணம் இயேசு புதிய ஆதாம் என்றும், புதிய இஸ்ராயேல் என்றும் காட்டுவதற்காகத்தான்.

இந்த நற்செய்தி நமக்குச் சொல்வது என்ன?

'பாலை'

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நான்கு நிலங்களை வகுக்கின்ற தமிழர் இந்த நான்கின் குணம் அற்ற நிலப்பகுதிக்கு பாலை என்று பெயர் வைத்து ஐந்து நிலங்களாகக் குறிப்பிடுகின்றனர். ஆக, 'ஒன்றும் இல்லாத நிலை'யே 'பாலை'.

நாம ஒருசில நேரங்களில் 'ஒரு மாதிரி இருக்கு!' என்று சொல்வோமே, அதுதான் 'பாலை'. ஒருவித தனிமையுணர்வு, வெறுமை இவையெல்லாம் இந்த உணர்வின் வெளிப்பாடுகள்தாம். தாமஸ் க்ரீன் என்பவர் 'வென் தெ வெல் ரன்ஸ் ட்ரை' (கிணறு வற்றும்போது!) என அழகாக எழுதுகின்றார். எல்லா நேரமும் நம் கிணற்றில் தண்ணீர் இருக்கும் என்றும், நம்மைச் சுற்றி மக்கள் இருந்து நம்மால் பயனடைவார்கள் என்றும், நம் அருகில் வந்து நிற்பார்கள் என்றும் நினைக்க முடியாதுதானே. கிணற்றில் தண்ணீர் இல்லையென்றால் அதைச் சீண்டுவார் எவருமில்லை. இப்படி உள்ளம் பாலைநிலம் போல வறண்டு இருக்கும் போது நாம் நினைத்துக்கொள்ள வேண்டியது இதுதான். என்ன? அங்கே வானதூதர்கள் நமக்குப் பணிவிடை புரிவார்கள். நம்மாலும் நமக்கு உதவியில்லை. நமக்கு அருகில் இருப்பவரும் நம்மைக் கண்டுகொள்வதில்லை. இந்த நேரத்தில் உதவி தருபவர் வானதூதர். இவர் ஒரு ஆளாக இருக்கலாம், நாம் எடுத்திருக்கும் வாழ்க்கை மதிப்பீடாக இருக்கலாம். அந்த நேரத்தில் 'டிங்' என அடிக்கும் வாட்ஸ்ஆப் மெசேஜாக இருக்கலாம். ஆதித்யாவில் வரும் காமெடி க்ளிப்பாக இருக்கலாம். ஒரே நொடியில் வாழ்க்கை மறுபடியும் இயல்பு நிலைக்குத் தொடங்கிவிடும். அன்று நண்பி ஒருவரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்: வாழ்க்கையில நமக்கு வர்ற பிரச்சினையெல்லாம் நாம முடிவெட்டுன முதல் நாள் போலத்தான். முதல் நாள் ரொம்ப வித்தியாசமா இருக்கும். ஆனா, நாலு நாளையில எல்லாம் பழகிடும்.
'பிசாசு'

இன்றைக்கு அலகை, சாத்தான் என்றெல்லாம் எழுதினால் புரியுமா என்று தெரியவில்லை. பேய், பிசாசு நமக்குப் பரிச்சயமான வார்த்தைகள். அதுவும் இன்றைக்கு பேய்கள் குறித்த கருத்தியலில் ஒரு பெரிய புரட்சியை சினிமா ஏற்படுத்தியுள்ளது. என்ன புரட்சி? 'சந்திரமுகி' வரை மற்றவர்களை அழிப்பவராக மட்டுமே இருந்த பேய். 'முனி' 'காஞ்சனா' மற்றும் 'அரண்மணை'யில் கொஞ்சம் ந்யூட்ரலாகிறது - அதாவது கெட்டவர்களை மட்டும் பழிவாங்கும் பேயாக மாறுகிறது. இன்று இன்னும் ஒருபடி போய், 'பிசாசு', 'டார்லிங்' என நல்லது செய்யும் பேயாக, காப்பாற்றும் பேயாக, ஏன் காதலிக்கின்ற பேயாக மாறிவிட்டது. பேயைப் பத்திச் சொல்லணும்னா, நம்ம எஸ்.ஜே. சூர்யா மாதிரி தான் சொல்லணும் - 'இருக்கு ஆனா இல்ல!'

'என்னை அறிந்தால்' அஜித் குமார் வார்த்தையில சொல்லணும்னா - 'ஒரு மெல்லிசான கோடு. கோட்டுக்கு அந்தப்பக்கம் இருந்தால் பேய். கோட்டுக்கு இந்தப்பக்கம் இருந்தால் வானதூதர்'. இந்தக் கோடு எவ்வளவு மெல்லிசு அப்படிங்கிறதுலதான் சிக்கல் இருக்கு. இந்த இரண்டு பக்கங்களும் நம்மில் இருக்கத்தான் செய்கின்றன. 

'டார்லிங்'ல வர்ற நல்ல பேயாகவும், இயேசுவுக்குப் பணிபுரியும் நல்ல வானதூதராகவும் நாம இருக்கலாமே!



3 comments:

  1. ஒன்றும் இல்லாத நிலையே 'பாலை'....உண்மையான வார்த்தை.இன்றைய பதிவில் வரும் அலகை, சாத்தான்,பேய்,...இவைகளையும் தாண்டி என்னை அதிகம் பாதித்தது இந்த 'பாலை' என்ற வார்த்தைதான்.என்னதான் வாழ்வின் ஆசீர்வாதங்கள் அனைத்தும் நம்மை சூழ்ந்திருந்தாலும் நம் உள்ளமெனும் கிணறும் வறண்டுபோகும் நேரங்களும் வரத்தான் செய்கின்றன.'வெறுமை' நம்மை வறுத்தெடுக்கும்போது என்ன செய்வது??!! தந்தையின் வார்த்தைகளில் 'வானதூதர்கள்' நமக்குப் பணிவிடை செய்கிறார்கள் என நம்புவோம்...ஆறுதல் பெறுவோம்....

    ReplyDelete
  2. Anonymous2/22/2015

    Yesu good morning. Reflection is good. When the well runs dry expression is good and meaningful. I too experience sometimes.hats off yesu.

    ReplyDelete
  3. Anonymous2/22/2015

    Yesu good morning. Reflection is good. When the well runs dry expression is good and meaningful. I too experience sometimes.hats off yesu.

    ReplyDelete