Wednesday, July 8, 2020

வெறும் மனிதனல்ல

இன்றைய (9 ஜூலை 2020) முதல் வாசகம் (ஓசே 11:1-4,8-9)

வெறும் மனிதனல்ல

நான் உரோமைக்குச் சென்ற புதிதில், ஒருநாள் சாலையின் ஓரத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எனக்கு எதிரே ஒரு தாய் தன் குழந்தையைக் கூட்டி வந்துகொண்டிருந்தார். அந்தக் குழந்தை முன்னே நடந்துகொண்டிருக்க, அதன் இடுப்பில் ஒரு கயிறு கட்டியிருந்தது. அந்தக் கயிற்றின் மறுபக்கத்தை அந்தத் தாய் தன் கைகளில் பிடித்திருந்தார். குழந்தையின் இடுப்பில் கயிற்றைக் கட்டி, அதைப் பிடித்துக்கொண்டே தாய்மார்கள் வருவதை நான் அன்றுதான் முதன்முதலாகப் பார்த்தேன். நம் ஊரில் குழந்தை முன்னால் நடக்க, தாய் பின்னால் நடப்பார். நம் ஊர்த் தாய்மார்கள் பிணைத்திருக்கும் கயிறுகள் ப்ளுடூத் கயிறுகள். குழந்தை தடம் மாறினால் உடனே போய்ப் பிடித்துக்கொள்வார்.

குழந்தையின் இடுப்பில் கயிற்றைக் கட்டி அதை நடத்திச் செல்வது இயல்பு என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது. இஸ்ரயேல் மக்களை மணமகள் அல்லது மனைவி என அழைத்த ஆண்டவராகிய கடவுள், இன்று, அவர்களை, 'மகன்' என அழைக்கிறார்.

'எகிப்திலிருந்து (அடிமைத்தனத்திலிருந்து) அவர்களை அழைத்து வந்தேன்' என்கிறார். அதாவது, இழுத்துச் செல்லப்பட்டவர்களை அழைத்து வருகின்றார் கடவுள்.

'பரிவு என்னும் கட்டுக்களால் அவர்களைப் பிணைத்து, அன்புக் கயிறுகளால் கட்டி அவர்களை நடத்தி வந்தேன்' என்கிறார்.

இங்கே, கட்டுக்கள் என்பது காயத்திற்கு இடப்பட்ட கட்டுக்கள் என்றும் சொல்லலாம். அல்லது குழந்தைகளைச் சுற்றிக் கட்டப்படும் துணி என்றும் சொல்லலாம். அன்புக் கயிறுகள் என்பதையும் அடிமைகளைக் கட்டியிருக்கும் கயிறுகள் என்றும், குழந்தைகளின் இடுப்பில் கட்டி நடை பழக்கப் பயன்படும் கயிறுகள் என்றும் சொல்லலாம்.

மொத்தத்தில், ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களோடு உடன் வழிநடக்கிறார்.

இறுதியாக,

இஸ்ரயேல் மக்கள் வழிதவறிச் சென்றாலும் அவர்கள்மேல் அவர் கோபத்தைக் காட்டவில்லை. இங்கே, 'கோபப்பட நான் மனிதல்ல, கடவுள்' என்கிறார்.

வழிதவறிச் செல்லும் குழந்தைகளைக் கடிந்துகொள்வது பெற்றோரின் இயல்பு. பெற்றோர்கள் கடிந்துகொண்டு, பின் குழந்தையைத் தழுவிக்கொள்கின்றனர். ஆனால், கடவுள் அப்படிச் செய்வதில்லை. அவர் கடிந்துரைப்பதே இல்லை. தழுவிக்கொள்ள மட்டுமே செய்கின்றார்.

மகாத்ரியா அவர்களின் 'உணர்வு முதிர்ச்சி' என்கிற காணொளியில், 'உணர்ச்சி நாடகம்' (Emotional Drama) பற்றிப் பேசுகிறார். அதாவது, நாம் உணர்ச்சிக் கொந்தளிப்பில் சில நாடகங்கள் நடிக்கிறோம். எப்படி? என் மகன் வீட்டிற்கு தன்னுடைய மதிப்பெண் அட்டையுடன் வருகிறான். இரண்டு பாடங்கள் தவறியிருக்கிறான். உடனே நான் அவன்மேல் கோபம் கொண்டு அவனை அடிக்கிறேன். பின் மதிப்பெண் அட்டையில் கையொப்பமிட்டு அவனைப் பள்ளிக்கு அனுப்புகிறேன். அவன்மேல் கோபம் கொள்வதற்குப் பதிலாக நான் நேரடியாக கையொப்பம் இட்டிருக்கலாமே? ஏன் இந்த உணர்ச்சி நாடகம். நம் உணர்ச்சி நாடகங்கள் பெரும்பாலும் நம் பாதுகாப்பு கவசங்கள். ஆனால், இவை ஆபத்தானவை. உணர்ச்சி நாடகங்கள் குறையக் குறைய உணர்வு முதிர்ச்சி பெருகும்.

பல நேரங்களில் உணர்ச்சி நாடகங்களால் நாம் நிறைய உறவுகளை இழந்திருக்கிறோம். அல்லது உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்திவிடுகிறோம்.

நாம் அனைவருமே ஒருவர் மற்றவரை அன்புக் கயிறுகளால் கட்டியுள்ளோம். அந்தக் கயிற்றின் பிடியிலிருந்து சில நேரங்களில் மற்றவர் நழுவும்போது, நாம் கடாமுடா என்று சண்டை போடத் தேவையில்லை. சற்று நேரம் காத்திருந்தாலே போதும். அவர்கள் மீண்டும் வழிமேல் வந்துவிடுவார்கள்.

இதுவே ஆண்டவராகிய கடவுள் நமக்குச் சொல்லும் உறவுப் பாடம்.

இதே பாடத்தையே இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 10:7-15), இயேசு தன் சீடர்களுக்குக் கற்றுக்கொடுக்கின்றார். பணி செய்யச் செல்லும் இடத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால் சண்டையிட வேண்டாம். மெதுவாக அடுத்த இல்லம் செல்லுங்கள் என்கிறார்.

உணர்ச்சி நாடகங்கள் நடத்த நாம் மனிதல்ல, கடவுள்! - என்று நாமும் சொல்லலாமே!

1 comment:

  1. அருமையான,உணர்ச்சிமிக்க,எழுச்சி தரும் ஒரு பதிவு.”அடிமைத்தனத்திலிருந்து வந்த இஸ்ரேல் மக்களை மட்டுமின்றி இன்றும் என்னையும்,உங்களையும் தன் ‘பரிவு’ மற்றும் ‘அன்பு’ எனும் கயிறுகளால் பிணைத்திருப்பவர் நம் இறைவன்; இவரால் நம்மேல் கோபப் பட முடியாது; ஏனெனில் கோபப்பட இவர் மனிதனல்ல” போன்ற வரிகள் அவர் தம் மக்களோடு இன்றும் உடன் வழி நடக்கிறார் என்பதை அழுத்திச்சொல்கின்றன.தொடர்கிறார் தந்தை.....”இதே அன்பை நம்மாலும் காட்டமுடியும்...நம் அன்புக்கயிறின் பிடியிலிருந்து யாரும் பிரிகையில் சற்று பொறுமை காப்பதன் மூலம்” என்கிறார் தந்தை.உறவுகள்...ஒரே இடத்தில் இருப்பதற்கல்ல...அவை தொடரப்பட வேண்டும்.அப்படிச் செய்யும்போது நாமும் கடவுளே! மனிதனைக் கடவுளாக வழிசொல்லும் ஒரு உணர்ச்சிப்பிழம்பான பதிவு. தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete