Monday, July 6, 2020

இலவசங்களுக்கு மதிப்பில்லை

இன்றைய (7 ஜூலை 2020) நற்செய்தி (மத் 9:32-38)

இலவசங்களுக்கு மதிப்பில்லை

நான் மதுரையில் ஒரு பணித்தளத்தில் இருந்தபோது, தன்னுடைய மகளுக்கு நர்ஸிங் படிக்க பணம் கட்ட வேண்டும் என்று கேட்டு ஒரு பெண் அந்தப் பணித்தளத்திற்கு வந்தார். அந்தப் பணித்தளத்தில் உதவிகள் செய்வதெற்கென்று ஒரு அமைப்பு இருந்தாலும், நான் அவருக்கு என்னுடைய சேமிப்பிலிருந்து கொஞ்சம் பணம் கொடுக்க முன்வந்தேன். நான் கொடுத்தபோது, 'இல்ல ஃபாதர்! அந்த ஆஃபிஸ்ல உள்ளவங்க வரட்டும். நான் அவர்களிடம் வாங்கிக் கொள்கிறேன்' என அவர் மறுத்தார். அவருடன் வந்திருந்த அவருடைய உறவினர், 'யோசிக்காத! சும்மா வாங்கு! இவங்க காசையா கொடுக்குறாங்க! நம்ம பேரைச் சொல்லி வெளிநாட்டுல இருந்து வாங்குறதத்தான கொடுக்கிறாங்க!' என்றார்.

தேவையில் இருப்பவர்களுக்கு நாம் செய்யும் உதவி சில நேரங்களில் தவறாகப் பார்க்கப்படுவதுடன், அங்கே நாமும் குற்றவாளிகள் ஆகிவிடக்கூடிய நிலையும் ஏற்படுவதுண்டு.

இந்த நிலை இயேசுவுக்கும் ஏற்பட்டது.

பேய்பிடித்து, பேச்சிழந்த ஒருவரைச் சிலர் இயேசுவிடம் கொண்டுவருகின்றனர். அவர் பேயை ஓட்டவே, பேச இயலாத அவர் பேசுகிறார்.

இந்த நிகழ்வு உடனடியாக இருவகை எதிர்வினைகளை ஏற்படுத்துகிறது:

ஒன்று, மக்கள் சிலர் வியப்படைகின்றனர். 'இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை' என்று சொல்லிக் கடவுளைப் புகழ்கின்றனர்.

இரண்டு, பரிசேயர் சிலர், 'இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்' என்கின்றனர்.

ஒருவேளை, இயேசு அந்தப் பேயை ஓட்டாமல் இருந்திருந்தால் அவருக்கு இந்தப் பட்டம் கிடைத்திருக்காது. ஆக, தானாக இயேசு உதவி செய்யப் போய், அந்த உதவி ஏற்றுக்கொள்ளப்படாததுடன், இயேசு மிகக் கொடூரமான இகழ்ச்சிக்கு உள்ளாகின்றார்.

இயேசுவைக் குற்றம் சுமத்திய பரிசேயர் ஒரு நொடி நினைத்துப் பார்த்திருப்பார்களா? ஏன் தங்களால் முடியவில்லை? - என்று அவர்கள் நினைத்திப் பார்த்திருப்பார்களா? தங்களால் முடியாத ஒன்றை இன்னொருவர் செய்துவிட்டார் எனில், அவரைப் பாராட்டவில்லை என்றாலும், அவரை இகழாமல் இருக்கலாமே? ஏன் அவர்களால் அப்படி இருக்க முடியவில்லை?

ஆனால், இயேசு அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

மக்கள் கூட்டத்தின் வியப்பையும், பரிசேயர்களின் இகழ்ச்சியையும் ஒரு நிலையில் எடுத்துக்கொள்கின்றார்.

மேலும், தொடர்ந்து அவர் மக்கள் கூட்டத்தின்மேல் பரிவு கொண்டு அவர்களுக்குச் செய்ய வேண்டியதைச் செய்ததுடன், அவர்களுக்குப் பணி செய்ய, அவர்கள்மேல் பரிவு கொள்ள இன்னும் ஆள்களை அனுப்புமாறு ஆண்டவரிடம் வேண்ட நம்மை அழைக்கின்றார்.

இயேசு நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

நான் நல்லவனா அல்லது கெட்டவனா என்பதை நான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, எனக்கு வெளியில் இருப்பவர் தீர்மானிக்கக் கூடாது. மேலும், எனக்கு வெளியில் இருப்பவரின் தீமை என்னுடைய நன்மைத்தனத்தை வரையறுக்கக் கூடாது (My goodness should not be defined by my neighbour's badness).

ஆக, இலவசங்கள் கொடுக்கப்படும்போதும், தேவையில் இருப்பவர்களுக்கு செய்யப்படும் உதவிகள் சுமைகளாகப் பார்க்கப்படும்போதும், நம் நன்மைத்தனத்தை நாம் நிர்ணயம் செய்ய வேண்டுமே தவிர, உதவிகள் அல்லது இலவசங்களைப் பெறுகிறவர்கள் அல்லர்.

பெறுகிறவர்கள்கூட அமைதியாக இருந்துவிடுவார்கள். ஆனால், அதைப் பார்க்கிறவர்கள்தாம் எதையாவது சொல்லிக் கொண்டிருப்பார்கள். அந்தப் பரிசேயர்கள்போல!

2 comments:

  1. உண்மைதான்! நம் சமுதாயத்தில் பல நேரங்களில் “Goodness is mistaken for weakness.தேவையில் உள்ள பலருக்கு அவர்கள் கேளாமலேயே உதவி செய்து.... “இருக்கிறது கொடுக்கிறார்கள்; இது என்ன பெரிய விஷயமா?” என்று பல சமயங்களில் இளிச்சவாய் பட்டம் வாங்கியவர்கள் பலர் இருப்பர். ஆனாலும் இதற்கெல்லாம் நாம் சோர்ந்து போக்க்கூடாது.யாரோ ஒருவர் என்னவோ சொன்னார் என்பதற்காகத் தகுதியுள்ள ஒருவருக்கு நம் உதவி மறுக்கப்படக்கூடாது என்பது என் திண்ணமான எண்ணம்.ஆனாலும் தந்தை சொல்வது போல் நன்மைத்தனத்தை நாம் நிர்ணயம் செய்ய வேண்டுமே தவிர,உதவிகள் அல்லது இலவசங்கள் பெறுகிறவர் அல்லர் என்பதும் சரியே! சுற்றி நின்று பார்ப்பவர்களின் பேச்சு நமக்குத் தேவையற்ற ஒன்று.
    “கொடுப்பதில் இன்பம் பெறுவதில் இல்லை”.... என்பதை நினைவூட்டும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete