Thursday, July 16, 2020

அத்திப் பழ அடை

இன்றைய (17 ஜூலை 2020) முதல் வாசகம் (எசா 38)

அத்திப் பழ அடை

நோய்வாய்ப்படுதல் ஒரு கொடுமையான அனுபவம். மூன்று விடயங்களுக்காக இது ஒரு கொடுமையான அனுபவம்:

அ. நோய் தருகின்ற வருத்தம் அல்லது துன்பம். நாம் எவ்வளவுதான் மாத்திரை, மருந்துகள் எடுத்தாலும், நம்முடைய இருத்தல் மற்றும் இயக்கத்தில் ஒருவகையான அசௌகரியத்தை நோய் ஏற்படுத்துகிறது.

ஆ. நோய் உருவாக்கும் சார்புநிலை. மற்றவர்களைச் சார்ந்து வாழும் நிலைக்கு நோய் நம்மைத் தள்ளிவிடுகிறது. மருத்துவர், செவிலியர், உணவு தருபவர், அருகே அமர்ந்து பணிவிடை செய்பவர் என எல்லாரும் நம்மைச் சூழ்ந்து நிற்பது நமக்கு நல்லது எனத் தெரிந்தாலும், அவர்களைச் சார்ந்திருக்க நம்முடைய தான்மை நம்மை அனுமதிப்பதில்லை.

இ. நோயின்போது கிடைக்கும் ஓய்வின் விளைவு. ஓய்வு உடலுக்கு நலம் தந்தாலும், உள்ளத்தை அமைதிப்படுத்தினாலும், அந்த ஓய்வின்போது, நம் வாழ்வில் நிறைய எண்ணங்கள் ஓடும். நாம் செய்த தவறுகள் நம் மனத்திற்கு வரும். நம் தவறுகளுக்காக நாம் தண்டிக்கப்பட்டுவிட்டோமா என்ற குற்றவுணர்வு வரும். கடவுள் இருக்கிறாரா என்ற எண்ணம் வரும்.

மேற்காணும் ஒரு கொடுமையான அனுபவத்தை இன்றைய முதல் வாசகத்தில் எதிர்கொள்கிறார் எசேக்கியா. 'எசேக்கியா நோய்வாய்ப்பட்டு சாகும் நிலையில் இருந்தார்' என வாசகம் சொல்கிறது. ஆனால், எந்த வகை நோய் என்று இங்கே குறிப்பிடப்படவில்லை. ஆனால், இங்கே பயன்படுத்துகின்ற மருத்துவ முறையை வைத்துப் பார்க்கும் போது, போர்க்களத்தில் பட்ட காயம், அல்லது தன்னுடைய வயது மூப்பால் பெற்ற புண் அல்லது காயத்தால் அவர் கஷ்டப்பட்டார் என்பதை நாம் உணர முடிகிறது. ஏனெனில், எசாயா, 'ஓர் அத்திப்பழ அடையைக் கொண்டுவந்து பிளவையின்மேல் வைத்துக் கட்டுங்கள்' எனக் கூறுகின்றார். காய வைக்கப்பட்ட அத்திப்பழ அடை, புண்களின் எரிச்சல், அரிப்பு, மற்றும் நீர்கோர்த்தலைக் குணமாக்க வல்லது என்பது அன்றைய எகிப்திய மருத்துவம்.

ஆனால், கொஞ்ச நாள்களுக்கு முன் இதே எசாயா, எசேக்கியா அரசனிடம், 'நீர் உம் வீட்டை ஒழுங்குபடுத்தும். ஏனெனில், நீர் சாகப் போகிறீர், பிழைக்க மாட்டீர்!' என்கிறார். 'உம் வீட்டை ஒழுங்குபடுத்தும்' என்று கடவுள் வெகு சிலருக்கே வாய்ப்பு கொடுக்கிறார். எனவே, வீட்டை நாம் எப்போதும் ஒழுங்குபடுத்தி வைத்தல் அவசியம். ஒழுங்குபடுத்துதல் என்பது, இங்கே, அரச காரியங்களை ஒழுங்குபடுத்துவதையும், கருவூலம் மற்றும் படை இரகசியங்களை மற்றவர்களுக்குச் சொல்வதையும் குறிக்கிறது.

எசேக்கியா உடனடியாக ஆண்டவரிம் மன்றாடுகின்றார். ஆண்டவர் அவருடைய செபத்தைக் கேட்கின்றார். 'உன் விண்ணப்பத்தைக் கேட்டேன். உன் கண்ணீரைக் கண்டேன். உனக்கு நலம் தந்தேன்' என விடை தருகின்றார். மேலும் பதினைந்து ஆண்டுகள் அவருக்கு அளிக்கின்றார். இதன் அடையாளமாக, 'சாயும் கதிரவனின் நிழல் கதிரவக் கடிகையில் பத்துப் பாத அளவு பின்னிடச் செய்கின்றார்.'

எசாயாவின் பின்வரும் பாடலே அருள்பணியாளர்களின் கட்டளை செபத்தில், இரண்டாம் வாரம் செவ்வாய்க் கிழமை காலைச் செபமாக வருகிறது:

'என் வாழ்நாள்களின் நடுவில் இவ்வுலகை விட்டுச் செல்ல வேண்டுமே!
... ...
என் உறைவிடம் மேய்ப்பனின் கூடாரத்தைப் போல பெயர்க்கப்பட்டு என்னைவிட்டு அகற்றப்படுகிறது.
நெசவாளன் பாவைச் சுருட்டுவதுபோல என் வாழ்வை முடிக்கிறேன்.
தறியிலிருந்து அவர் என்னை அறுத்தெறிகிறார்.
காலை தொடங்கி இரவுக்குள் எனக்கு முடிவு கட்டுவீர்.
... ...
என் தலைவரே, நான் உம்மையே நம்புகின்றேன்.
எனக்கு உடல்நலம் நல்கி நான் உயிர்பிழைக்கச் செய்வீர்.
இதோ, என் கசப்புமிகு அனுபவத்தை நலமாக மாற்றினீர்!'

நம் வாழ்நாளின் குறுகிய நிலையை நாம் எண்ணிப்பார்க்க, நம் நோயும் இயலாமையும் நமக்கு வாய்ப்பளிக்கிறது.

எசேக்கியா தன் நோயின் காலத்தில், தன்னைப் பார்க்காமல், இறைவனைப் பார்த்தார்.

இறைவன் அவருடைய கண்ணீரைக் கண்டார், மன்றாட்டைக் கேட்டார்.

நம் கண்ணீரைக் காண்பவரும், நம் மன்றாட்டைக் கேட்பவரும் அவரே!

'ஏனெனில், அவரே நம்மைக் காண்கின்ற இறைவன்!' (காண். தொநூ 16:13)

3 comments:

  1. எசேக்கியா தன் நோயின் காலத்தில்,தன்னைப் பார்க்காமல்,இறைவனைப் பார்த்தார்.

    இறைவன் அவருடைய கண்ணீரைக் கண்டார்;மன்றாட்டைக் கேட்டார்.

    நம் கண்ணீரைக் காண்பவரும்,மன்றாட்டைக் கேட்பவரும், "அவரே".

    "ஏனெனில்,அவரே நம்மை காண்கின்ற இறைவன்!"

    இதுவே என் செபமாகிவிட்டது.
    நன்றி🙏

    ReplyDelete
  2. பள்ளிப்பருவத்தில், பள்ளிவாசலருகே அமர்ந்து திண்பண்டங்கள் விற்ற பாட்டிமாரிடம் அத்திவடை வாங்கி சாப்பிட்ட ஞாபகம் பசுமையாக இருக்கிறது.ஆனால் ஏசாயாவின் பிளவைக்கு அது மருந்தாகவும் பயன்பட்டிருக்கிறது என்பது புதிய செய்தி.
    நோய்வாய்ப்படுதலின் கொடுமையை அட்சரம் பிசகாமல் விவரிக்கிறார் தந்தை.மருத்துவ வசதிகள் எத்தனை இருப்பினும்,கூப்பிடும் குரலுக்கு நம் முன்னே பெற்றாரும்,உற்றாரும் வந்து நிற்பினும் படுக்கையில் படுத்திருப்பவர் அனுபவிக்கும் தனிமையும்,வெறுமைமையும் சம்பந்தப்பட்டவர் மட்டுமே அறிந்த ஒன்று.தந்தை குறிப்பிடுவது போல சிலசமயங்களில் குற்ற உணர்ச்சியும் நம்மைக் குறுகுறுக்க வைத்துவிடும்.இங்கேதான் தோழனாக வந்து தோள் கொடுக்கிறார் ஏசாயா. மனம் உடையவில்லை; உடல் வெதும்பவில்லை; இறைவனை சபிக்கவில்லை.ஆனால் பிள்ளைக்குரிய உரிமையுடன் இறைவனுக்குக் கட்டளயிடுகிறார்.

    “என் தலைவரே நான் உம்மையே நம்புகிறேன்.
    எனக்கு உடல்நலம் நல்கி நான் உயிர்பிழைக்கச்செய்வீர்
    இதோ,என் கசப்புமிகு அனுபவத்தை நலமாக மாற்றினீர்!”

    இறைவனும் தந்தைக்குரிய வாஞ்சையோடு அவரின் கண்ணீரைக்கண்டார்; மன்றாட்டைக்கேட்டார்.எசேக்கியாவின் கண்ணீருக்கு இளகிய இறைவன் நம் கண்ணீருக்கு இளகாதிருப்பாரோ? கண்டிப்பாக நம் கண்ணீரைக்காண்பார்; மன்றாட்டைக்கேட்பார்.ஏனெனில்...

    “ நம்மைக் காண்கிற இறைவன் அவரே!”
    தவிக்கும் உள்ளத்தைத் தாலாட்டும் ஒரு பதிவு.தந்தைக்கு நன்றிகள்!!!




    ReplyDelete