Thursday, July 30, 2020

புனித இஞ்ஞாசியார்

இன்றைய (31 ஜூலை 2020) திருநாள்

புனித இஞ்ஞாசியார்

இயேசு சபையின் நிறுவுனரும், 'ஆன்மீகப் பயிற்சிகள்' என்னும் ஆன்மீகப் பெட்டகத்தை திருஅவைக்கு வழங்கியவருமான, இனிகோ என்னும் லொயோலா நகர் புனித இஞ்ஞாசியாரின் திருநாளை இன்று நாம் கொண்டாடி மகிழ்கின்றோம். இந்தப் புனிதரைப் பற்றி எண்ணும்போது என்னுள் எழும் சில கருத்துக்களை இங்கே பதிவு செய்கிறேன்.

1. உன்னை நீயே ஆளுகை செய்யாதவரை நீ மற்றவர்களை ஆளுகை செய்ய முடியாது.

அல்லது நான் என்னையே வழிநடத்த இயலாதபோது எனக்கு அடுத்திருப்பவரை வழிநடத்த முயற்சி செய்தல் கூடாது. தன்னாளுகை அல்லது தன்னை வெல்தல் என்பது இனிகோவின் எழுத்துக்களில் அதிகம் தெரியக்கூடிய கருத்துரு. இவர் ஒரு படைவீரராய் இருந்ததால், வெற்றி கொள்தல் என்பதன் பொருள் இவருக்கு நன்றாகவே தெரிந்தது. என் கட்டுக்குள் அடங்காத எதுவும் என் ஆற்றலை விரயமாக்கிக்கொண்டே இருக்கும். அது என் உடலின் ஆற்றலை எடுப்பதோடு, நிறைய எண்ணங்களால் மனத்தை நிரப்பி என் கவனத்தைச் சிதறடிக்கும். இன்று, நான் என்னில் ஆளுகை செய்ய வேண்டியது எது?

2. பதறிய காரியம் சிதறிப் போகும்.

அவசரம் அறவே கூடாது. இனிகோ ஒருபோதும் தன்னுடைய உணர்வுகள் அல்லது உணர்ச்சிகள் அடிப்படையில் செயல்படவே இல்லை. எல்லாவற்றையும் தன் அறிவுக்கேள்விக்கு உட்படுத்தி, பார்வையை அகலப்படுத்தி, நிறுத்தி, நிதானமாக முடிவு செய்தார். நான் செய்கின்ற எல்லாவற்றிலும், 'நான் ஏன் இதைச் செய்கிறேன்?' என்ற கேள்வியே நிதானத்தின் தொடக்கம். இன்று நான் அவசரப்பட்டு முடிவெடுத்து பதறி நிற்கும் நிலைகள் இருக்கின்றனவா?

3. முக்கியமான தொடர்புகள் அவசியம்.

தலைமைத்துவம் என்பது நான் மற்றவர்மேல் ஏற்படுத்தும் தாக்கம். சாதாரண படைவீரரான இவர், கல்லூரிப் பேராசிரியரான சவேரியாருக்குச் சவால் விடுகின்றார். எப்படி? உறவால். நட்பால். தொடர்புகள் இல்லாமல் வாழ்க்கை இயலாது என்பதை அறிந்தவர் இனிகோ. தன்னுடைய சபையைச் சார்ந்தவர்கள் உலகின் எந்த மூலையிலிருந்தாலும், அவர்களுடன் கடிதத் தொடர்பில் இருந்தார். இதுவே, தொடர்புகளுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. இன்று நான் என் தொடர்புகளை எப்படி முதன்மைப்படுத்துகிறேன்?

4. தன்னாய்வு செய்தல்

'எக்ஸாமென்' (examen) அல்லது 'ஆன்ம சோதனை' என்பது இவருடைய ஆன்மீகப் பயிற்சிகளில் ஒன்று. மதிய உணவுக்கு முன்னும், இரவு உணவுக்குப் பின்னும் தன்னாய்வு செய்வது. என்னுடைய உடல், மனம், இதயம், எண்ணம், ஏக்கம், உணர்வு, தாக்கம் என அனைத்தையும் ஆய்வு செய்வது. நேரம் கடக்க கடக்க நானும் கடந்தால் நான் மிருகம். ஆனால், கடக்கும் நேரத்திலும் நான் நிற்க முடிந்து, பின்னால் சென்று யோசிக்க முடிந்தால் நான் மனிதன். தன்னாய்வு செய்யும் நேரம் என்னையே புதுப்பிக்கும் நேரம். நான் எத்தனை முறை தன்னாய்வு செய்கிறேன் ஒரு நாளில்?

5. தெரிவு செய்தல்

'தெரிவு செய்தல்' (discernment) என்பது இவருடைய இன்னொரு பயிற்சி. இதை பவுல் இப்படி எழுதுகிறார்: 'அனைத்தையும் சீர்தூக்கிப் பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். தீமையை விலக்குங்கள்' (காண். 1 தெச 5:21). இதுதான் தெரிவு செய்தல். என் வாழ்வின் முக்கிய முடிவுகள் உள்பட, எல்லா நேரங்களிலும் நான் தெரிவு செய்தல் அவசியம். இன்று நான் தெரிவு செய்கின்றேனா? அல்லது வருவதை அப்படியே ஏற்றுக்கொண்டு அலைக்கழிக்கப்படுகிறேனா?

6. நேரத்தைப் பயன்படுத்துங்கள்

வாழ்க்கையை அன்பு செய்பவர்கள் நேரத்தை வீணாக்கமாட்டார்கள். ஏனெனில், வாழ்க்கை என்ற ஓவியம் வரையப்பட்டிருப்பதே நேரம் என்ற துணியில்தான். தன் வாழ்வின் எல்லா நேரங்களையும் கற்றல், செபித்தல், கடிதம் எழுதுதல், என எதையாவது செய்துகொண்டே இருந்தார். அவரின் செயல்கள் அவருடைய வாழ்வையும், மற்றவர்களின் வாழ்வையும் புதுப்பித்தன. என் ஓய்வு அல்ல, என் செயலே நான் யார் என்பதை எனக்கும் மற்றவர்களுக்கும் உணர்த்தும். இன்று என் நேர மேலாண்மை எப்படி இருக்கிறது?

இறுதியாக,

'எல்லாம் இறைவனின் அதிமிகு மாட்சிக்கே!' (Ad Majorem Dei Gloriam!)

இதுவே தான் படைக்கப்பட்டதன் நோக்கம் என அறிந்தார் இனிகோ.

2 comments:

  1. கத்தோலிக்கத் திருஅவையின் ஆலமரமான இயேசுசபை நிறுவனர் “புனித இனிகோ எனும் இஞ்ஞாசியார்” குறித்த சிறப்புக்களைப் பட்டியலிட்டுள்ளதைத்தாண்டி, அவரின் மேலான குணங்கள் ஒருவரை எவ்விதத்தில் பாதித்தல் வேண்டும் என்பதை ஒரு ‘ஆன்ம சோதனையாகவே’ பாவித்து நம்மையும் அதில் இணைந்து கொள்ள அழைப்பு விடுக்கிறார் தந்தை. தன்னாளுகை அல்லது தன்னை வெல்தல், கையிலெடுத்த காரியத்தில் ஒரு நிதானம்,தன் சபையைச்சார்ந்தவர்களிடம் காட்டிய உறவு மற்றும் நட்பு,ஒரு மிருகத்தினின்று மனிதனை வேறுபடுத்திக்காட்டும் ஆன்ம சோதனை,அனைத்தையும் சீர்தூக்கிப்பார்த்து நல்லதை மட்டுமே பற்றிக்கொள்ளல்,நம்மை மற்றவருக்கு உணர்த்துவது ஓய்வு அல்ல செயலே ! என்பது...இவற்றுக்கெல்லாம் கொடுமுடியாக “செய்வதனைத்தும் இறைவனின் மாட்சிக்கே!” இந்த இறுதியான வேதவாக்கை மனத்தில் வைத்தாலே போதும்...மற்றதனைத்தும் அதனதன் இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளும்.இதில் என்னை மிகவும் ஈர்த்தது....” பதறிய காரியம் சிதறிப்போகும்” என்பதே! மிகச்சிறியவற்றிற்காகக் கூட என் கட்டுப்பாட்டை இழந்துவிடும் நான் இப்பொழுதெல்லாம் நின்று நிதானமாக “ நான் ஏன் இதைச்செய்கிறேன்?” என்று என்னையே கேள்விகேட்க ஆரம்பித்துள்ளேன். அப்படியும் கூடத் தவறிய தருணங்கள் ஏராளம்.ஆனால் வெற்றிகண்ட நேரங்களும் உண்டு என்பதைப்பெருமையாகச் சொல்லிக்கொள்கிறேன்.இதன் சூத்திரதாரி தந்தைக்கு என் நன்றிகள்!
    இயேசு சபை அருட்பணியாளர்களுக்கும், புனித இனிகோவின் மதிப்பீடுகளை வாழ்ந்துகாட்ட நினைக்கும் அனைவருக்கும் திருவிழா வாழ்த்துக்கள்! தந்தைக்கு நன்றியும்! பாராட்டும்!

    ReplyDelete