Monday, July 27, 2020

அருள் புலம்பல்

இன்றைய (28 ஜூலை 2020) முதல் வாசகம் (எரே 14:17-22)

அருள் புலம்பல்

தமிழ் பக்தி இலக்கியங்களில், 'அருள் புலம்பல்' என்ற ஓர் இலக்கிய வகை உண்டு. அடியார் ஒருவர் இறைவனின் திருமுன் தன் நிலை பற்றியோ, அல்லது இறைவனின் கதாபாத்திரத்தை தான் ஏற்று இந்த உலகம் பற்றியும் பாடும் பாடல்தான் அருள் புலம்பல். இவ்வகை அருள்புலம்பல் தொடக்கத்தில் தன்னைப் பற்றியதாக அல்லது இறைவனைப் பற்றியதாகத் தொடங்கினாலும், பாடல் தொடங்கிய சில அடிகளில், அடியாரும் இறைவனும் ஒன்றெனக் கலந்து, இருவரும் இணைந்து ஒன்றாகிவிடுவர்.

எடுத்துக்காட்டாக,

'ஓத எளிதோ? ஒருவர் உணர்வரிதோ?
பேதம்அற எங்கும் விளங்கும் பெருமையன்காண்.

வாக்கும் மனமும் கடந்த மனோலயன் காண்!
நோக்க அரியவன் காண்! நுண்ணுயிரில் நுண்ணியன் காண்!

சொல்லுக்கு அடங்கான் காண்! சொல்லிறந்து நின்றவன் காண்!
கல்லுள் இருந்த கனல்ஒளிபோல் நின்றவன் காண்!

... ... ...'

என இறைவனை மையமாக வைத்துத், தொடங்கும் பட்டினத்தார் சில அடிகளில்,

'சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நான் அறியேன்.
அம்மா! பொருள் இதுஎன அடைய விழுங்கினண்டி!

பார்த்த இடம் எல்லாம் பாரமாகக் கண்டேன்டி!
கோத்த நிலைகுலைத்த கொள்கை அறியேண்டி!

பத்தி அறியாமல் பாழில் கவழ்ந்தேன்டி!
ஒத்தஇடம் நித்திரை என்று ஒத்தும் இருந்தேண்டி!

... ... ...'

எனப் பட்டினத்தாரை மையமாக வைத்துத் தொடர்ந்து, அது அவர் தன்னைப் பற்றிப் புலம்புவதாக மாறுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில், தன் சொந்த மக்கள் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்படப் போவதை அறிந்த இறைவன், அவர்களை நினைத்துப் புலம்புகின்றார்:

'என் மக்களாம் கன்னி மகள் நொறுங்குண்டாள். அவளது காயம் மிகப் பெரிது. வயல்வெளிகளுக்குச் சென்றால், இதோ! வாளால் மடிந்தவர்கள்! நகரில் நுழைந்தால், இதோ! பசியால் நலிந்தவர்கள்!'

ஆனால், சட்டென்று அது மக்களின் புலம்பலாக மாறிவிடுகிறது:

'நீர் யூதாவை முற்றிலும் புறக்கணித்துவிட்டீரா?
சீயோனை உம் உள்ளம் வெறுத்துவிட்டதா?
நாங்கள் குணமாக முடியாதபடி ஏன் எங்களை நொறுக்கினீர்?'

அவர்களின் புலம்பல், இறுதியில் மன்றாட்டாக நிறைவுபெறுகிறது:

'நாங்கள் உம்மையே எதிர்நோக்கியுள்ளோம். ஏனெனில், இவற்றை எல்லாம் செய்பவர் நீரே!'

இந்த அருள்புலம்பலில், என்னை ஒரு சொல்லாட்சி மிகவே கவர்ந்தது: 'இறைவாக்கினரும் குருக்களும் தங்களுக்கு முன்பின் தெரியாத நாட்டில் அலைகின்றனர்!'

இதன் பொருள் என்ன?

தங்களுக்குத் தெரிந்த நாட்டில் மட்டும்தான் இறைவாக்கினருக்கும் குருக்களுக்கும் பெருமை. தெரியாத நாட்டில் அவர் மற்றவரைப் போல ஒருவர்தான். நம்மை மற்றவருக்குத் தெரியும்வரைதான் பெருமை, புகழ், அடையாளம் எல்லாம். அவர் மறந்துவிட்டால், அல்லது நம்மைத் தெரியாதவர்கள் நடுவில் நாம் வெறும் எண்தான். இது தெரியாமல் பல நேரங்களில் நாம், 'நான் யார் தெரியுமா?' என்று பெருமைப்பட்டுக் கொண்டே நிற்கிறோம்.

இஸ்ரயேலின் இறைவாக்கினர்களும் குருக்களும் தங்கள் இறைவனை மறந்ததால், இப்போது அடையாளம் இழந்து நிற்கின்றனர்.

இன்று என் வாழ்வில் நான் எழுதும் அருள்புலம்பல் எது?

2 comments:

  1. ‘ அருள் புலம்பல்’.... முற்றிலும் புதியதொரு வார்த்தை. இறைவனோ மக்களோ யார் புலம்பினாலென்ன? அந்தப்புலம்பல் அவர்களை ஆற்றுப்படுத்துவதாயிருப்பின்?” நம்மைச்சுற்றியிருப்பவர்கள் நம்மை மறந்து விட்டால்...அல்லது நம்மைத்தெரியாதவர்கள் மத்தியில் நாம் வெறும் எண்தான்”.... எத்தனை மகத்தான உண்மை!
    என் வாழ்வில் நான் எழுதும் அருள்புலம்பல்? எத்தனையோ! எதைச்சொல்வது? அல்லது எதை விடுவது?
    வாழ்வைப்புரட்டிப்போடும் விஷயங்களையும் பூவின் மென்மையோடு தரும் தந்தைக்கு வாழ்த்துக்கள்! நன்றிகள்!!

    ReplyDelete
  2. “ இணைந்த கரங்கள்”.........எதையும் செய்ய வல்லவை!

    ReplyDelete