Monday, October 31, 2016

பால்குடி

'எனக்கு மிஞ்சின அரிய, பெரிய செயல்களில் நான் ஈடுபடுவதில்லை.
மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது.
தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது.'
(காண். திபா 131)

இன்று காலை திருப்பலியில் வாசிக்கப்பட்ட இந்த திருப்பாடல் வரிகள் என்னைத் தொட்டன.

நேற்று மாலையிலிருந்து மனத்தில் ஒரு போராட்டம். வாழ்க்கையில் என்ன சாதிச்சிட்டோம்? ஏறக்குறைய 35 வருடங்கள் வாழ்ந்தாயிற்று? இங்கிருந்து போகும்போது எதை விட்டுச் செல்வேன்? நான் போகும் பாதை சரிதானா? இன்னும் நான் என்ன செய்ய வேண்டும்? என்னைப் பிறர் எதற்காக நினைவுகூறுவார்கள்? - இப்படி நிறைய கேள்விகள்.

இந்தக் கேள்விகளோடு தூங்கப்போன எனக்கு இன்று காலை மேற்காணும் வரிகளைக் கேட்டது இதமாக இருந்தது.

அறைக்கு வந்து இந்தப் பாடலை எபிரேயத்தில் வாசித்தேன்.

'தாய்மடி தவழும் குழந்தை' என்பதற்குப் பதிலாக அங்கே 'பால்குடி மறந்த குழந்தை' என்று இருக்கிறது.

இங்கே இரண்டு விடயங்கள் கவனிக்கத்தக்கவை:

அ. பால்குடி மறப்பது (weaning)

பால்குடி மறப்பது அல்லது மறக்கச் செய்வது குழந்தையின் வாழ்வில் மிக முக்கியமான பருவம். தாயின் வயிற்றில் தொப்புள்கொடி வழியாக தன்னை அவளோடு இணைத்துக் கொள்ளும் குழந்தை, பிறந்தவுடன் அவளின் மார்புக் காம்பு வழியாக தன்னை இணைத்துக் கொள்கிறது. பால் குடிக்கும் பருவம் வரை அது தன்னை தன் தாயின் ஒரு பகுதியாகவே பார்க்கிறது. ஆனால், இப்படி அது தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தால் அதன் வளர்ச்சி பாதிக்கப்படும். பால்குடி மறக்கச் செய்தல் தாயின் மிகப்பெரிய வேலை. ஏனெனில் தன்னிடமிருந்து தன் குழந்தையைப் பிரிக்கும் அந்த முயற்சி அவளுக்கும் வலிக்கும். ஆனாலும் அவள் தன் குழந்தைக்காக அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். தாயைவிட குழந்தைக்கு வலி அதிகம். இனி அது எல்லாவற்றையும் தன் சொந்த முயற்சியில் செய்ய வேண்டும். தன்னைத் தானே வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் அதன் உள்ளத்தில் ஒரு போரட்டம் இருக்கும். தாயுடன் இருக்க முடியாதா? தனியாக என்ன செய்வது? என்ற கேள்விகள் எழும். மற்றொரு பக்கம் 'என்னால் எல்லாம் முடியும்' என்ற எண்ணமும் அதற்கு இருக்கும். இந்தப் போராட்டத்தில் அது தன் அமைதியை இழக்கும். அப்படி இழக்கும் அந்த குழந்தைக்கு தாய்மடி ஆறுதல் தரும்.

இத்தகையை அமைதியை இறைவன் தனக்கு தர வேண்டுகிறார் தாவீது.

ஆ. வலுவற்ற நிலை (weak)

இதுதான் மிகவும் கொடியது. தன் தாயின் மார்பும் தனக்கும் இல்லை, தன்னாலும் தன் கால்களால் நிற்க முடியாது என்ற வலுவற்ற நிலையில் குழந்தை இருக்கும். 'நான் எங்கே போவேன்?' 'எனக்கென்று யார் இருக்கா?' என்ற கேள்வி உள்ளத்தில் எழும். இந்தக் கேள்விகள் நமக்கும் எழும்போதுதான் நாம் நிறைய உறவுகளையும், பணத்தையும், புகழையும் சம்பாதிக்க நினைக்கிறோம். அவர்கள் அல்லது அவைகளில் நம் பாதுகாப்பை தேடுகிறோம். நாம் வயது வந்தவர்கள். இவற்றை சம்பாதிக்க நம்மால் முடியும். ஆனால் குழந்தைக்கு முடியுமா? இல்லை. அது மறுபடி தன் தாயின் மடியில்தான் கிடக்க வேண்டும். ஆக, எல்லாவற்றையும் அள்ளி அணைத்திட வேண்டும் என்ற அம்பிஷன் இருந்தாலும், மனம் அமைதி வேண்டுமெனில் அது இறைமடியை நாட வேண்டும்.

'எனக்கு மிஞ்சின அரிய, பெரிய செயல்களில் நான் ஈடுபடுவதில்லை.
மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது.
பால்குடி மறந்த குழந்தையென என் நெஞ்சம் அமைதியாயுள்ளது!'

1 comment:

  1. உண்மைதான்...இன்று காலை வாசிக்கப்பட்ட திருப்பாடல்131ன் வரிகள் அதைக்கேட்டவர்களுக்கு ஒரு இதமான தாலாட்டாய் இருந்திருக்கும்."ஆண்டவரே என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை; என் பார்வையில் செருக்கு இல்லை; என்னை மிஞ்சின அரிய பெரிய செயல்களில் நான் ஈடுபடுவது இல்லை." சம்பந்தப்பட்டவரை ஆத்தும சோதனைக்கு அழைக்கும் வரிகள். தன்னை சுய ஆய்வு செய்த எவரும் தழுவிக்கொள்ளும் நிலைதான் " பால்குடி மறந்துவிட்ட குழந்தையின் அமைதியானநிலை" பால்குடி மறக்கும் குழந்தை மற்றும் அதன் தாய் இவர்களின் கையறு நிலையை ஒரு பெண்ணை விட அழகாக சித்தரித்துள்ளார் தந்தை.இதில் யார்வலி சிறிது,பெரிது என எடை போட இயலாது.அந்த வலியை உணர்ந்து கொள்ளும் தாயைவிட,என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தாயின் மடிச்சுகம் காணும் குழந்தையின் நிலை ஒரு வகையில் ஆனந்தமானது.ஒன்றுமில்லாத நிலையில் எல்லாவற்றையும் சம்பாதித்து விட வேண்டுமென்று நினைக்கும் மனத்தைவிட அந்த நிலையிலும் இறைமடியை நாடும் மனம் மட்டுமே 'அமைதி' காண முடியும் என்கிறார் தந்தை.தந்தையே! சொந்த மண்ணைவிட்டுப் பிரிந்து முழுதாக ஒருநாள்கூட ஆகவில்லை.அதற்குள் இத்தனை சிந்தனை ஓட்டங்களா தங்கள் மனத்தில்? தாங்கள் சத்தமாக சிந்திப்பதும் கூட ஒரு அழகுதான்.தங்களின் மனது எழுப்பும் கேள்விகளுக்கு மற்றவரும் பதில் கண்டறிய அவை துணை செய்யுமே! அழகானதொரு,என் மனதுக்கு நெருக்கமான இந்தப் பதிவிற்காகத் தங்களுக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete