Saturday, October 29, 2016

காட்டு அத்திமரம்

எனது காட்டு அத்திமரம் எது?


காட்டு அத்திமரம் சக்கேயுவுக்கு இயேசுவைப் பற்றி முழுமையான பார்வையை வழங்கியது. மற்ற யாரும் பார்க்க முடியாது அளவிற்கு சக்கேயு இயேசுவை முழுமையாகப் பார்க்கின்றார். மேலும் காட்டு அத்திமரம் அவரை மற்றவர்களுக்கு மேலாக உயரச் செய்கிறது. நாம் எங்கிருந்து பார்த்தால் இயேசு முழுமையாகத் தெரிகிறார்? அல்லது எனக்கும் இயேசுவுக்கும் இடையே பார்வையை மறைக்கும் தடைகள் எவை? சக்கேயு மரத்தில் இருந்து இறங்கியபோது அவர் அனைவருக்கும் கேலிப்பொருளாகத் தெரிந்திருப்பார். ஆனால் அதைக் கண்டுகொள்ளவில்லை. தன் முகத்தை மறைத்துக்கொள்ளவில்லை. 'இல்லை! வேண்டாம் இயேசுவே!' என அழைப்பை மறுக்கவில்லை. 'இன்னொரு நாளைக்கு வாருங்கள்!' என்று இயேசுவிடம் சமரசம் செய்யவுமில்லை. இயேசுவைக் கண்டுகொள்ள நான் ஏறும் அத்திமரம் எது? அல்லது மற்றவர்கள் இயேசுவைக் காண நான் ஓர் அத்திமரமாக இருந்திருக்கின்றேனா.

1 comment:

  1. " அத்திமரம்"... இது நம் ஊர்களில் காணக்கிடைக்காத ஒருவகை மரம்.குட்டையான சக்கேயு அதன் உச்சி வரை ஏற முடிந்ததென்றால் அதுவும் ஒரு சிறிய மரமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.மனிதரால் வெறுத்து ஒதுக்கப்பட்ட வரிதண்டுபவரான சக்கேயு அத்திமரத்தில் ஏறியது இயேசுவின் மீது கொண்ட ஆவலால் அல்ல; எல்லோராலும் பேசப்படும் இந்த இயேசு யாரெனத் தெரிந்து கொள்ள வேண்டுமெனும் ஒரு ஆவலால் மட்டுமே.ஆனாலும் இயேசுவின் பார்வை பட்டு,அவர் கீழே இறங்கியது ஒரு புனிதராக! இவ்வுலகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒருவர் இயேசுவால் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்.இயேசு விரும்பி அவரது இல்லம் செல்கிறார். " நான் உன் வீட்டில் தங்க வேண்டும்" என்கிறார்.என் உள்ளம் எனும் இல்லத்தில் இயேசு தன் காலடிகள் பதிக்க நான் செய்ய வேண்டியது என்ன? நான் ஏற வேண்டிய அத்திமரம் எது? ' திருவருகை' காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நாம் யோசிக்க வேண்டிய தருணமிது.அது மட்டுமல்ல....நம்மைச் சுற்றியுள்ள மனிதரையும் அவர்களின் குறை நிறையோடு ஏற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கிறது இன்றையப்பதிவு.இறைவன் நம்மிடமுள்ள 'நிறை'களை மட்டுமே பார்க்கையில் நாம் ஏன் அடுத்தவரின் 'குறை'களை மட்டுமே பார்க்க வேண்டும்? "நான் இயேசுவை முகத்துக்கு முகம் காண ஏற வேண்டிய அத்திமரம் எது? மற்றவர்கள் இயேசுவைக்காண நான் ஒரு அத்திமரமாய் இருக்கிறேனா".... தந்தை எழுப்பும் இந்த வினாக்களுக்கு விடை தெரிந்தாலே போதும்..நாமும் புனிதராகும் நாள் தொலைவில் இல்லை.அழகானதொரு மனமாற்றத்திற்கு நம்மைத் தூண்டக்கூடிய பதிவிற்காகத் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்! அனைவருக்கும் ஞாயிறு வணக்கங்கள்!!!

    ReplyDelete