Tuesday, December 31, 2013

இன்று புதிதாய்ப் பிறந்தோம்!

"ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்.
உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன.
பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குகின்றன.
குன்றுகள் அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன.
புல்வெளிகள் மந்தைகளை ஆடையெனக் கொண்டுள்ளன.
பள்ளத்தாக்குகள் தானியங்களால் தங்களைப் போர்த்திக் கொண்டுள்ளன".
(திருப்பாடல் 65:11-13)

புதிய குழந்தை, புதிய மலர், புதிய ஆடை, புதிய மனிதர், புதிய இடம், புதிய வீடு, புதிய வாகனம், புதிய மனைவி – என புதியவைகள் மனித மனத்திற்கு மலர்ச்சியைக் கொடுக்கின்றன. இன்று புதிய ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கின்றோம் - ஒரு பக்கம் மகிழ்ச்சி, மற்றொரு பக்கம் தயக்கம். 'இனியாவது நல்லவர்களாக இருப்போம்' என நமக்கு நாமே வாக்குறுதிகள் கொடுத்திருப்போம். 'வருகின்ற ஆண்டாவது நன்றாக இருக்கட்டும்' என்று நம்பிக்கையோடு காத்திருப்போம். புதியவைகளை நமக்குப் பிடிக்கின்றன – ஏனென்றால் புதியவைகள் நமக்கு நம்பிக்கையைத் தருகின்றன. ஒரு சிலருக்கு புதியவைகளைக் கண்டால் பயமாகவும் இருக்கும். மகிழ்ச்சி, அச்சம், கலக்கம், தயக்கம், மலர்ச்சி, நம்பிக்கை என கலந்த உணர்வுகளைத் தருகின்றது புதிய ஆண்டு.

2014 - இதில் சிறப்பு என்ன? 1987 ஆண்டிற்குப் பிறகு ஆண்டின் நான்கு எண்களும் வெவ்வேறாக இருப்பது இந்த ஆண்டில்தான். ஆகையால் இந்த நான்கு எண்களைப் போல ஒவ்வொருவரும் தனித்தன்மை கொண்டவர்களாக வாழவும், பணவீக்கம் குறைந்து ரூபாய் மதிப்பு கூடி, எல்லாருக்கும் வேலை கிடைத்து, அமெரிக்க கனவுகள் நிறைவேறி, திருமணம், குழந்தை பாக்கியம் கைகூடி, நம் பிள்ளைகள் நன்கு படித்து, பசி, பட்டினி, சண்டைகள் மறைந்து, மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பி, 'திறப்பாங்களா, திறக்க மாட்டாங்களா?' னு இழுத்தடிக்கும் அணுவுலை மறைந்து, 24 மணிநேரமும் மின்சாரம் கிடைத்து, பாரக் ஒபாமாவிலிpருந்து, நம் பக்கத்து நாட்டு அதிபர் வரை நல்லாயிருந்து, பக்கத்து வீட்டு மாமியிலிருந்து, நம் பங்குச் சாமி வரை அனைவருக்கும் இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமையட்டும் என வாழ்த்துவோம்.

கிறிஸ்து பிறப்பு, புத்தாண்டையொட்டி நம் இல்லங்களைச் சுத்தப்படுத்தி அழகுபடுத்தியிருப்போம். சுத்தப்படுத்தும்போது நாம் ஒருசிலவற்றை பத்திரப்படுத்தியிருப்போம்;, ஒருசிலவற்றை 'தேவையில்லை' என்று தூக்கி எறிந்திருப்போம். ஒருசிலவற்றை 'ஐயோ! இது இங்கதான் இருக்கா' என்று பார்த்து ஆச்சர்யப்பட்டிருப்போம். புத்தாண்டிற்குள் நுழையும் நாம் இன்று எவற்றை வைத்துக்கொள்ள வேண்டும்? எவற்றைத் தூக்கியெறிய வேண்டும்? எவற்றை நினைத்து ஆச்சர்யப்பட வேண்டும்? என்று சிந்திப்போம்.

எவற்றை வைத்துக்கொள்ள வேண்டும்? நாம் வைத்துக்கொள்ள வேண்டியவை இரண்டு: 1) நமது வேர்கள். நாம் எங்கே தொடங்கினோம்? எப்படித் தொடங்கினோம்? என்பதை மறந்துவிடக்கூடாது. வேர்களை மறக்கின்ற மரம் நிலையாக நிற்க முடியாது. மரம் எவ்வளவு உயர்ந்தாலும், எவ்வளவு இனிய கனிகளைத் தந்தாலும், நாம் நீர் ஊற்றுவது வேர்களுக்குத்தான். நாம் இன்று என்ன நிலைக்கு உயர்ந்தாலும் நம் கசப்பான வேர்கள் என்றும் நம் நினைவில் நிற்க வேண்டும். 2) நம் இலக்கு. நாம் எதை நோக்கிப் போகிறோம்? இலக்கு தெளிவாக இல்லாதவர்களுக்கு எல்லா நாளும் ஒரே நாள்தான், எல்லா நேரமும் ஒரே நேரம்தான். மனிதர்களின் வாழ்வில் இரண்டு நாள்கள் முக்கியமானவை: ஒன்று நாம் பிறந்த நாள், இரண்டு நாம் எதற்காக பிறந்தோம் என்பதை அறிந்துகொள்கின்ற நாள். பிறந்த நாளை மட்டும் நினைவுகூர்ந்து, நம் வாழ்வின் குறிக்கோளை அறியத்தவறினால் வாழ்க்கை நமக்குக் கேள்விக்குறியே.

எவற்றைத் தூக்கியெறிய வேண்டும்? நாம் தூக்கியெறிய வேண்டியவை இரண்டு: 1) தவறான கோட்பாடுகள். 'அவர் அப்படித்தான்', 'இவர் இப்படித்தான்,' 'என் விதி அவ்வளவுதான்,' 'என்னால் இது முடியாது', 'எனக்குத் தெரியாது' என நமக்கு நாமே சொல்லிக் கொள்கின்ற சாக்குப்போக்குகளையும், நாம் பார்வையைப் பாழாக்கும் முற்சார்பு எண்ணங்களையும், 'எனக்கு எல்லாம் தெரியும்' போன்ற அதீத நம்பிக்கைகளையும், 'என் நேரம் சரியில்லை' போன்ற மூட நம்பிக்கைகளையும், 'என்னால் இதைச் செய்ய முடியாது' போன்ற அவநம்பிக்கைகளையும் தூக்கி எறிய வேண்டும். 2) மூடத்தனமான எதிர்பார்ப்புக்கள். 'இவர் இப்படி இருக்க வேண்டும்'. 'அவர் அப்படி இருக்க வேண்டும்'. வாழ்க்கையில் அனைத்தும் நான் நினைப்பது மாதிரியே நடக்க வேண்டும். எல்லாரும் என்னைப் போற்ற வேண்டும். எல்லாரும் என் பின்னால் வரவேண்டும். நம் அடிப்படைப் பிரச்சினை என்ன தெரியுமா? நாம் இங்கே இருக்கும்போது, அங்கே இருக்க விரும்புகிறோம். அங்கே இருக்கும்போது இங்கே இருக்க விரும்புகிறோம். நம் மனமே நாம் விரும்பும்படி இயங்காதபோது, மற்றவர்கள் நம் மனதிற்கு ஏற்ப நடக்கவில்லை என்று நினைப்பதிலும், கோபம் கொள்வதிலும் என்ன நியாயம்?

எவற்றை நினைத்து ஆச்சர்யப்பட வேண்டும்? அவை இரண்டு: 1) நம் கனவு. ஒரு சிறு தீப்பொறிதான் ஒரு பெரிய வாகனத்தை இழுக்கும் என்ஜினுக்கு உயிர்கொடுக்கிறது. இந்த ஒற்றைச் சொல்தான் நம் வாழ்க்கை எந்திரத்தை நகர்த்துகின்றது. நம் விடியலுக்கு அர்த்தம் கொடுப்பவை நம் கனவுகள். ஒவ்வொரு பொழுதும் நம் குடும்பத்திற்காக, நம் குழந்தைகளுக்காக, நம் சமுதாயத்திற்காக புதிய கனவுகளைக் காண்போம். இன்று நம் கைகளில் தவழும் கண்டுபிடிப்புக்கள் அனைத்தும் அன்று எவரோ ஒருவர் கண்ட கனவுதான். 'நூறு கனவுகள் கண்டாலே ஆறு கனவுகள் பலிக்காதா?' 2) நம் சேமிப்பு. இது பணச் சேமிப்பு அல்ல. மாறாக, உணர்வுகள் சேமிப்பு. நாம் நம் உறவுகளில் எதைச் சேமிக்கிறோமோ அதைத்தான் நாம் திரும்பப் பெறுவோம். அன்பைச் சேமித்தால் அன்பைப் பெறுவோம். பாhரட்டைச் சேமித்தால் பாராட்டைப் பெறுவோம். கோபத்தைச் சேமித்தால் கோபத்தைப் பெறுவோம். வெறுப்பைச் சேமித்தால் வெறுப்பைப் பெறுவோம். நாம் மற்றவர்களுக்குக் கொடுக்காத ஒன்றை நாம் ஒருபோதும் பெறப்போவதில்லை. 'தீதும், நன்றும் பிறர்தர வாரா!'

இத்தாலிய மொழியில் ஒரு விநோதமான பழமொழி உண்டு: 'உங்கள் கவலைகளெல்லாம் உங்கள் புத்தாண்டு வாக்குறுதிகள் போல மறைந்து போகட்டும்!' நம் வாழ்வில் வாக்குறுதிகள் நிலைக்கட்டும்! கவலைகள் மறையட்டும்! 

3 comments:

  1. Anonymous12/31/2013

    ஆண்டின் இறுதி நாளான இன்று 65மசங்கீத வரிகளின் வழியே நன்றியுணர்வைத் தூண்டியுள்ளார்.ஆசிரியர்.எனக்கும் என்னைப்போன்ற பலருக்கும் விவிலியத்தின் கதவுகளை சற்றே விசாலமாக்கியுள்ளார்.இறைவன் தங்களையும் தங்களின் அனைத்து முயற்சிகளையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக.அனைவருக்கும் புது வருட வாழ்த்துக்கள்.

    ReplyDelete