Thursday, December 26, 2013

யாரும் எதிர்பாராத இடத்தில்

பிரபல தமிழ் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், 'துறவியும் மீனும்' என்ற ஐந்து நிமிட ஜென் குறும்படத்தைப் பற்றித் தன் வலைப்பக்கத்தில் எழுதுகின்றார்: 'புத்த மடாலயம் ஒன்றில் ஒரு நீர்த்தேக்கம் இருக்கிறது. ஒருநாள் ஒரு புத்த பிக்கு அதில் அழகாக நீந்திக் கொண்டிருக்கும் ஒரு மீனைப் பார்க்கிறான். உடனே அதைப் பிடிக்க வேண்டும் என நினைத்து ஒரு தூண்டில் எடுத்து வந்து மீன்மேல் வீசுகிறான். மீன் தப்பி ஓடுகிறது. பின் வலையை விரிக்கிறான். வலையிலும் அது விழவில்லை. இரவெல்லாம் அவனுக்குத் தூக்கமேயில்லை. அந்த மீனை எப்படிப் பிடிப்பது என சிந்தித்துக் கொண்டே இருக்கிறான். அடுத்த நாள் தன் நண்பர்களிடம் அதைப்பற்றியே பேசுகிறான். மீன் பிடிப்பது எப்படி? என்று புத்தகங்களைத் தேடிப் படிக்கிறான். ஆனால் அவனால் மீனைப் பிடிக்கவே முடியவில்லை. அம்பு விட்டு;ப் பார்க்கிறான். உள்ளே இறங்கி அதை விரட்டிப் பிடிக்கப் பார்க்கிறான். முடியவேயில்லை. இறுதியாக, மீனைப் பிடிக்க நினைப்பது முட்டாள்தனம், அதன் போக்கில் நாமும் கலந்துவிட வேண்டும், அதுவே மீனைப் புரிந்துகொள்ளும் வழி என நினைத்து மீனோடு நீந்துகிறான். அவனும் மீனும் நெருக்கமாகி விடுகிறார்கள். மீன் அவனோடு சேர்ந்து நீந்துகிறது. துள்ளுகிறது. இருவரும் ஒன்றாக முடிவற்ற புள்ளியை நோக்கி மகிழ்ச்சியாக வானில் தாவி மறைகிறார்கள்'.

இறைமை மனிதத்தோடும், மனிதம் இறைமையோடு கைகோர்த்துக்கொண்ட ஒரு அற்புத நிகழ்வே கிறிஸ்துமஸ். முதல் கிறிஸ்துமஸ்! காலண்டரில் குறிக்கப்படவில்லை. பலூன்கள் ஊதப்படவில்லை. நட்சத்திரங்கள் கட்டப்படவில்லை. வானவேடிக்கை இல்லை. விடுமுறை இல்லை. வாழ்த்து அட்டைகள் பரிமாறப்படவில்லை. கேக்குகள் இல்லை. கேரல்ஸ் இல்லை. ஸ்வீட்ஸ் இல்லை. யாருமே எதிர்பார்க்கவில்லை. 'பழைய ஏற்பாட்டின் எல்லாப் பக்கங்களிலும் அவர் நிழல் தெரிந்தது. யாரும் அவர் வருவதைக் கண்டுகொள்ளவேயில்லை. யாரும் எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத விதத்தில் இறைமை மனிதத்தைத் தழுவிக் கொண்டது.

மரியாள், வானதூதர், பெத்லகேம், அகஸ்டஸ் சீசரின் கணக்கெடுப்பு, ஏரோதின் பொறாமை, 'இடம் இல்லை' என்று சத்திரத்தில் தொங்கிய 'போர்டு', வானதூதர்கள், இடையர்கள், கீழ்த்திசை ஞானியர், நட்சத்திரம், ஒட்டகம், மாடு, கழுதை, குகை என எண்ணற்றவைகளை நாம் கேட்டுவிட்டோம். இவைகளைப் பற்றிச் சொல்லத் தொடங்குமுன் இவை என்னவென்று நமக்குத் தெரியும். இன்று நாம் எவ்வளவு கேட்டாலும் நாம் கேட்பது போலக் கேட்கின்றோம். 'அதிகமாகக் கேட்டல்' அலுப்புத் தட்டுகிறது.

No comments:

Post a Comment