Tuesday, December 3, 2013

அவளைவிட அழகாக இல்லையா?

சில நாள்களுக்குப் பிறகு, கோதுமை அறுவடைக் காலத்தில் சிம்சோன் ஓர் ஆட்டுக்குட்டியுடன் தம் மனைவியைச் சந்திக்கச் சென்றார். 'நான் அறையிலுள்ள என் மனைவியிடம் செல்கின்றேன்' என்றார். அவள் தந்தை அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அவள் தந்தை, 'நீர் அவளை உண்மையாக வெறுப்பதாக நினைத்து அவளை உம் தோழனுக்குக் கொடுத்துவிட்டேன். அவளுடைய இளைய சகோதரி அவளைவிட அழகாக இல்லையா? அவளுக்குப் பதிலாக இவள் உமக்கு மனைவியாகட்டும்' என்றார். (நீதித் தலைவர்கள் 15:1-2)

சிம்சோன் திமினாவின் இளைஞர்கள் மேல் கோபம் கொண்டு தம் வீட்டிற்குத் திரும்பிச் செல்கின்றார். இதற்கிடையில் அவரது மனைவி அவரது மாப்பிள்ளைத் தோழனுக்குக் கொடுக்கப்படுகின்றார். சிம்சோனின் வாழ்வில் மேலும் ஒரு இறக்கம். இஸ்ரயேலின் வாழ்விலும் இறக்கம். மாப்பிள்ளைக்குத் தோழன் என்பவர் பெண்ணுக்குச் சகோதரி என்று அர்த்தம். ஆனால் அந்த நிலையிலும் மாப்பிள்ளைத் தோழனுக்குத் தந்து விடுகிறார் அவரது தந்தை. இப்போது சிம்சோன் தன் மனைவியைத் தேடி வந்த போது அவரது மாமனார் சப்பைக் கட்டு கட்டுகின்றார். இதில் அடுத்த ஒரு அவலம். 'பெண்ணின் இளைய சகோதரியை முடித்துக்கொள்!' என்கின்றார். இதில் அவலம் என்னவென்றால் திருமணம் பிடிக்கும் பெண்ணின் தங்கை மணமகனுக்கும் தங்கை என்பதும் அவர்களின் வழக்கம். இப்படியாக உறவுகளில் குழம்பிப் போகிறது இஸ்ரயேல் சமூகம். 

'அவளைவிட இவள் அழகாக இல்லையா?' 'அதை விட இது நன்றாக இல்லையா?'

எல்லாருக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் வரும் சோதனை இதுதான். மனிதர்களின் வரம் அவர்களின் சுதந்திரம். 'இது வேண்டும். அது வேண்டாம்' என நாம் மட்டும் தான் சொல்ல முடியும். இந்த வரமே பல நேரங்களில் நமக்கு சாபமாகவும் மாறிவிடுகிறது. 'இதை எடுத்திருக்கலாமோ! அதை எடுத்திருக்கலாமோ!' என்று புலம்பச் செய்வதும் இந்தச் சுதந்திரம்தான்.

சிம்சோனுக்கு வந்துள்ள இந்த இக்கட்டான சூழ்நிலை அவர்மேல் சுமத்தப்பட்ட ஒன்றுதான். இந்த விரக்தியில் இன்னும் அதிகக் கோபப்பட்டு பலரைக் கொல்லத் துணிகின்றார்.

இறைவனின் துணைகொண்டு கைப்பிடித்ததைக் கடைசி வரை 'கண்ணின் மணியாகக்' கருதுவதுதானே மேன்மை!

'அவளைவிட அழகாக இல்லையா?'

2 comments:

  1. Anonymous12/03/2013

    பழைய ஏற்பாட்டில் எத்துணையோ நல்ல விஷயங்ஙகள் இருப்பினும் சில இடங்களில் வரும் இதுபோன்ற முரண்பாடான உறவு முறைகளால் அதை வாசிக்கும் சந்தர்ப்பம் தரப்படவில்லை.இன்று தங்களின் விளக்கத்தோடு அவற்றைப் படிக்கும் போது ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. தங்களின் இந்த சேவைக்கு ஆண்டவன் தகுந்த சன்மாணம் தருவாராக.தங்களின் அந்தக் கடைசி வரிகள்....ஆஹா! அருமை.

    ReplyDelete